"சரிண்ணே. நான் இன்னிக்கே அந்த ஜாதக நகலை கொரியர் பண்ணி வைக்கிறேன்." என்றான் மகிழ்ச்சியுடன்.
கையில் ஜாதகத்துடன் சென்ற அவன் மனக்கண்ணில் அவள் உருவம் வர முகத்தில் வெற்றிப் புன்னகை.
"காசுக்காக ஆசைப்படாத மாதிரி காட்டிக்கிறதுக்கு என்னமா மாதிரி கதை விடறான்? ஜாதகம் பொருந்தியிருக்காம்." என்று ஜாதகம் எழுதிக் கொடுத்தவனை கிண்டல் செய்தவாறே அடுத்து என்ன செய்வது என்ற திட்டத்துடன் நடந்தான் அவன்.
"ஆகா. இதுவல்லவோ காபி."
கையில் உள்ள காபி தம்ளரை முகர்ந்து பார்த்தபடி தன்னருகில் வந்து அமர்ந்த சுகன்யாவைக் கோபமுடன் பார்த்த மகாலட்சுமி அந்த அதிகாலை நேரத்திலும் குளித்து முடித்து பனியில் நனைந்த ரோஜாப்பூ போன்று அமர்ந்திருந்தாள்.
தோழியின் கோபத்தை விட அவளது அந்தத் தோற்றத்தால் கவரப்பட்டாள் சுகன்யா.
"ஏய். எருமை. எழுந்திரிக்கிற நேரமாடி? எழுந்ததுதான் எழுந்தே? பல்லை விளக்கிட்டு காபி குடிக்கக்கூடாதா?" என்றவாறே தலையில் அடித்துக்கொண்டாள் மகாலட்சுமி.
"ஆடு மாடெல்லாம் பல்லை விளக்கிட்டா இருக்கு? கண்டுக்காதே. குளிக்கும் போது பல்லு விளக்கிக்கலாம்." என்றாள் அசட்டையாக.
"ஓ. அப்ப இன்னிக்கு குளிக்கிற ஐடியா உனக்கு இருக்கு." கிண்டலுடன் கேட்டாள்.
"வேறென்ன பண்றது? இன்னிக்கு ஞாயிற்றுக்கிழமை. குளிக்கிறதுக்கு லீவு விடலாம்னு பார்த்தா நீ காளி அவதாரம் எடுத்துருவியே."
"அம்மா தாயே. நீ குளிச்சா உனக்கு நல்லது. எங்களுக்கு ரொம்ப நல்லது. இந்த சாந்தாம்மாவை சொல்லனும். நீ தூங்கி எழுந்த கையோட வந்தும் உனக்கு காபி கொடுத்திருக்காங்களே." என்று கடிந்தாள்.
"நீ அதை விடவே மாட்டியா?" என்று செல்லமாய் அலுத்துக்கொண்டவள் துளித்துளியாய் காபியை ரசித்துக் குடிக்க ஆரம்பித்தாள்.
"போடி. போய் முகத்தையாவது கழுவிட்டு வா." அதட்டினாள்.
"நான் அதை எல்லாம் செய்யனும்னுதான் நினைச்சேன் லட்சுமி. ஜன்னல் வழியா சூரிய பகவான் தெரிஞ்சாரா அவருக்கு ஒரு ஹாய் சொல்லனும்னு பார்த்தப்ப தேவதை மாதிரி நீ தோட்டத்தில் உட்கார்ந்திருக்கே. ஏய் அப்படி எல்லாம் பார்க்காதே லட்சுமிம்மா. ரோஜாப்பூவுக்கும் உனக்கும் வித்தியாசமே தெரியலை தெரியுமா?" என்றாள் தோழியை அன்புடன் பார்த்துக்கொண்டே.