பெண் வாரிசு வேண்டும் என்பதற்காகவே பெண் குழந்தைகள் அதிகம் பிறந்த வீட்டில் இருந்து மூத்தவர் ராமச்சந்திரனுக்குப் பெண் எடுத்தனர். பிறந்த வீட்டில் மூத்த மகள். குடும்பத்தின் மூத்த மருமகள். அதனால் அதற்கேற்ற பொறுப்புடன் நடந்து கொண்டாள் வளர்மதி.
அடுத்தடுத்து வந்த மருமகள்களையும் அனுசரித்துக் குடும்பத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் கொண்டு செல்பவள் வளர்மதிதான்.
இரண்டாவது மகன் ஜெயச்சந்திரனுக்கு மனைவியாக கஸ்தூரி அந்த வீட்டில் அடியெடுத்து வைத்தாள்.
மூன்றாவது மகன் சிவச்சந்திரனுக்கு லலிதா மனைவியாக வந்தாள். மருமகள்கள் மூவருமே தங்கள் புகுந்த வீட்டின் பாரம்பரியப் பெருமையை உணர்ந்தனர். அதைக் கட்டிக்காப்பது தங்கள் கடமை என்று அவர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து நடந்துகொண்டார்கள்.
உடன் பிறந்த சகோதரிகள் போல் அன்பு காட்டினர். அவர்களுக்குப் பிறந்த குழந்தைகளும் அப்படியே வேற்றுமை பாராது நடந்துகொண்டனர்.
மூத்தவர் ராமச்சந்திரனுக்கு அடுத்தடுத்து மூன்று ஆண்குழந்தைகள் பிறந்ததும் அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். அதைப்போலவே ஜெயச்சந்திரனுக்கும், சிவச்சந்திரனுக்கும் ஆண் வாரிசுகள்தான் பிறந்தனர்.
இந்த தலைமுறையிலும் பெண் வாரிசு இல்லை என்று அவர்கள் நிராசையானபோது யாரும் எதிர்பாராமல் வளர்மதி கருவுற்றாள்.
அவர்களின் நிராசையைப் போக்கி மகாலட்சுமி வந்து பிறந்தாள். அவர்களை எல்லாம் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தினாள்.
அவளது பெற்றோர் மட்டுமல்லாது தாத்தா பாட்டி, சித்தப்பாக்கள், சித்திகள் என்று அனைவரின் செல்லமானாள். போதாதற்கு அவளைக் கொண்டாடும் சகோதரர்கள்.
கந்தசாமி தன் மகன்களுக்கு சொத்துக்களை சரிசமமாகப் பிரித்துக்கொடுத்துவிட்டார். அவர்களும் தங்களுக்கென்று தொழிலை அமைத்துக்கொண்டனர்.
அடுத்தடுத்து வீடு கட்டிக்கொண்டனர். தனித்தனியே இருந்தாலும் மனதளவில் ஒன்றாக இருந்தனர். பிள்ளைகளுக்கு யார் வீடு என்ற பாரபட்சமில்லை. மூன்று வீட்டையும் தங்கள் வீடாகத்தான் பாவித்தனர்.
இப்போதும் ஏதாவது விழா, விசேசம் என்றால் மூத்தவர் ராமச்சந்திரன் வீட்டில் ஒன்று கூடிவிடுவர். மூத்த மகனோடுதான் கந்தசாமி தன் மனைவியுடன் வசிக்கிறார். மூன்று மருமகள்களும் சேர்ந்தே சமைத்துவிடுவார்கள். கலகலப்பாக பேசி உண்டுவிட்டு தத்தம் வீட்டிற்குச் செல்வர்.