"ஆரம்பிச்சிட்டியா?" என்று செல்லமாய் அலுத்துக் கொண்டாள் மகாலட்சுமி.
"நான் என்ன பொய்யா சொல்லறேன்? உண்மையைத்தானே சொல்றேன். நீ ஒரு தேவதை. உருவத்தில் மட்டுமல்ல. குணத்திலும் தான்." என்றவளின் குரல் கரகரத்தது.
"ஏய். நீ அடி வாங்கப் போறே. நான் தேவதையும் இல்லை. ரோஜாப்பூவும் இல்லை. உன்னோட தோழி மகாலட்சுமி. சாதாரண பொண்ணு. போ. போய் நான் சொன்னதை எல்லாம் முடிச்சுட்டு வா." என்று அவளை மேலும் பேச விடாமல் தடுத்தாள் மகாலட்சுமி.
தன்னைப் பற்றி பேச ஆரம்பித்தால் தோழி நிறுத்த மாட்டாள் என்று அவளுக்குத் தெரியும். அவள் சுகன்யாவிடம் எதிர்பார்ப்பது நன்றியுணர்ச்சியை அல்ல. நட்பைத்தான். சில சமயங்களில் தோழியின் புகழாரத்தில் தான் அன்னியப்படுவதாக மகாலட்சுமி உணர்கிறாள். இதை எத்தனை முறை கூறினாலும் சுகன்யா கேட்பதில்லை. அவளைப் பொறுத்த வரைக்கும் அவளுடைய குடும்பமும், அவளும் நல்ல முறையில் இருக்கிறார்கள் என்றால் அதற்கெல்லாம் காரணம் மகாலட்சுமி தான்.
அவர்கள் சொந்தக் கிராமத்தில் மகாலட்சுமியை நெருங்குவது என்பது அத்தனை சாதாரணம் அல்ல. அவளுடன் இன்று ஒன்றாக தங்கிப் படிக்கிறாள் என்றால் அவள் மீது மகாலட்சுமி வைத்திருக்கும் அன்புதான் காரணம்.
அதற்கு மேலும் தோழியிடம் வம்பை வளர்க்காமல் வீட்டிற்குள் சென்றாள் சுகன்யா. இன்னும் மற்றவர்கள் யாரும் எழுந்து வரவில்லை.
காலை இளவெயிலில் அவள் உடல் பொன்னாய் மின்னியது.
அவள் மனம் இங்கில்லை. நேற்றிரவு அவள் வீட்டினர் பேசியதிலேயே இருந்தது. ஆயிற்று. வீட்டை விட்டு வந்து இரண்டு வருடங்கள் ஆகப்போகின்றன. இதோ இறுதிப்பருவத் தேர்வும் நெருங்கிவிட்டது. தேர்வுகள் முடிந்த உடன் ஊருக்கு மூட்டை கட்ட வேண்டியதுதான். அதற்கு மேல் அவள் வீட்டினர் அவளை இங்கே தங்கவும் விடமாட்டார்கள்.
இப்போது வந்ததும் அவள் தாயின் அறிவுறுத்தலின் பேரில்தான். வீட்டில் அனைவருமே அவளுக்குச் செல்லம் கொடுப்பவர்கள். அவள் யாராவது ஒருத்தருக்குப் பயப்படுகிறாள் என்றால் அது அவளுடைய அன்னை வளர்மதிக்குத்தான்.
இப்போதும் அவள் இங்கே வரவேண்டும் என்று வளர்மதி கூறியதை யாரும் ஒப்பியிருக்கமாட்டார்கள்தான். அவர்கள் உயிராகக் கருதும் மகாலட்சுமியை எப்படி அவர்களால் பிரிந்திருக்க முடியும்?
ஆனால் அவளுக்கு ஜாதகத்தில் கட்டம் சரியில்லை. இப்போது அவர்களைப் பிரிந்திருக்க வேண்டும் என்று இருந்ததால் வளர்மதியின் பேச்சு அங்கே எடுபட்டுவிட்டது.