அதுவும் தங்கள் செல்லப் பேத்தியை இரண்டு வருடங்கள் பாராது இருப்பதற்கு கந்தசாமியும், அவர் மனைவி வேதாம்பாளும் அத்தனை சீக்கிரம் ஒத்துக்கொண்டிருப்பார்களா என்ன?
இப்போது அருகில் இல்லாவிட்டாலும் கைப்பேசி மூலம் தினமும் பேத்தியிடம் பேசிவிடுவார்கள். மற்றவர்களும் அப்படித்தான். அதுவும் இப்போதுதான் முகத்தைப் பார்த்துப் பேசும் அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டதே. அவள் தாய் பேசும் போது மட்டும் பாசத்தை விட அறிவுரைகளே அதிகமாக இருக்கும்.
ஒரே பெண்ணான அவள் மீது வீட்டினர் காட்டும் பாசத்தை எங்கே தவறாகப் பயன்படுத்திக் கொண்டு மகள் வழி தவறிப்போய்விடுவாளோ என்ற கவலை வளர்மதிக்கு.
அதனால் சிறுவயதில் இருந்தே அவள் மகளிடம் கண்டிப்பைத்தான் காட்டினாள். அதற்காக மகள் மீது பாசம் இல்லை என்று இல்லை. மகள் மீது அளவு கடந்த பாசம் வைத்திருக்கிறாள். அதனால்தான் மகளின் வாழ்வு நன்றாக அமைய வேண்டுமே என்ற கவலை அவளுக்கு. அதுவும் மகாலட்சுமிக்கு நன்றாகத் தெரியும். அதனால் அன்னையின் அறிவுரைகளைக் கேட்டு அவளுக்கு கோபம் வருவதில்லை. மாறாக அதைப் பின்பற்றவே செய்தாள்.
அவள் இளங்கலைப் படிப்பு படித்த உடனே அவளுக்குத் திருமணம் செய்ய முடிவு செய்தனர். ஆனால் அவளுக்குத் திருமண யோகம் வரவில்லை. அதுவும் அவளுடைய ஜாதகத்தில் தோசம் இருந்தது. அந்த ஜாதகத்திற்குப் பொருத்தமான வரனை தேர்ந்தெடுத்தால்தான் மகாலட்சுமி நன்றாக வாழ்வாள். இல்லை என்றால் அவள் உயிருக்கேக் கூட ஆபத்தாக முடியலாம் என்று ஜாதகம் பார்த்தவர் கூறவும் அவள் குடும்பத்தினர் மிகவும் பயந்துவிட்டனர்.
நீண்ட தவத்திற்குப் பிறகு அவர்கள் பரம்பரையில் பிறந்த பெண் வாரிசு. அவளுக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்ற பயம். அதனால் தீவிரமாக மகாலட்சுமியின் ஜாதகத்திற்குப் பொருத்தமான ஜாதகத்தைத் தேட ஆரம்பித்தனர்.
மகாலட்சுமியின் பரம்பரையில் ஐந்தாறு தலைமுறைகளாக பெண் வாரிசே இல்லாமல் இருந்தது. இது குடும்பத்திற்கு கிடைத்த சாபத்தினாலா? என்று அவள் பரம்பரையைச் சார்ந்தவர்கள் மிகவும் வருந்தினர்.
பெண் குழந்தைக்காக தவமிருந்தனர். இருந்தும் அவர்களுக்கு அந்தக் கொடுப்பினை கிடைக்கவில்லை. மகாலட்சுமியின் தாத்தா கந்தசாமி பிறந்த உடனே தாயை இழந்தவர். அவருடைய தந்தை மறு திருமணம் செய்து கொள்ளவில்லை. அதனால் அவர் ஒற்றையாய் நின்று போனார்.
கந்தசாமி வேதாம்பாள் திருமணம் நடந்தது. அவர்களுக்கும் மூன்று மகன்கள் பிறந்தனர். மூத்தவர் ராமச்சந்திரன், அடுத்தவர் ஜெயச்சந்திரன், இளையவர் சிவச்சந்திரன்.