வருத்தப்படுத்த வேண்டாம் என்று சொல்லாமல் விட்டுவிட்டார்கள் என்று இப்போது வளர்மதி புரிந்துகொண்டாள்.
பெரியவர்களின் கவலை புரிந்த வளர்மதி மகாலட்சுமியை கவனமாக பார்த்துக்கொண்டாள்.
அவள் காதல் என்று வந்துவிட்டால் என்ன செய்வது? அவள் மேல் உயிரையே வைத்திருக்கும் வீட்டினர் அதைத் தாங்கிக் கொள்வார்களா?
அதனால் மகளிடம் ஒரு வாக்குறுதி வாங்கிக்கொண்டாள். அவள் மனதைத் தடுமாற விடக்கூடாது. அவளால் வீட்டுப் பெரியவர்கள் எப்போதும் வருந்துகிற மாதிரி சூழ்நிலை வரக்கூடாது.
அது மகாலட்சுமியின் மனதில் பதிந்தும்விட்டது. இது வரைக்கும் அந்த மாதிரி ஒரு சூழ்நிலை வந்ததில்லை.
நேற்று அவள் குடும்பத்தினர் பேசும்போது மிகவும் மகிழ்ச்சியில் இருந்த மாதிரி அவளுக்குத் தோன்றியது. இறுதியில் அவளுடைய இளைய சித்தி லலிதாதான் போட்டுடைத்தாள். அவள் ஜாதகத்திற்கேற்ற வரன் தகைந்துவிட்டதாம். மாப்பிள்ளை வீட்டிலும் பேசிவிட்டார்களாம். அவர்களுக்கும் இந்தத் திருமணத்தில் சம்மதமாம். அவளுக்கு சம்மதமா? என்றனர்.
மாப்பிள்ளையின் புகைப்படத்தை அனுப்பி வைக்கின்றனர் என்று கூறிய வீட்டினரை அவள் தடுத்துவிட்டாள். அதற்குள் கைப்பேசி அவள் தாயின் கைகளுக்கு மாறியிருந்தது.
"இப்ப எதுக்குடி மாப்பிள்ளையோட போட்டோவை வேண்டாங்கிறே?" என்று மறுமுனையில் பல்லைக் கடித்தாள் வளர்மதி.
"ஐயோ. அம்மா. நீங்க ஒரு கழுதையை வேண்டுமானாலும் மாப்பிள்ளையா கைக்காட்டுங்க. நான் கழுத்தை நீட்டறேன். எனக்கு மாப்பிள்ளையைப் பிடிக்கிறது முக்கியமில்லை. உங்களுக்குப் பிடிச்சிருந்தால் போதும். எனக்கு இப்போதைக்கு படிக்க வேண்டியது நிறைய இருக்கு. என் மனசை சலனப்படுத்தற எதையும் நான் இப்ப செய்ய விரும்பலை." என்று தெளிவாக தன் மனதை தாயிடம் எடுத்துரைத்தாள்.
மறுமுனையில் வளர்மதி மிகவும் மகிழ்ந்துபோனாள். மகள் கூறியதை பெருமையுடன் மற்றவர்களிடம் கூறினாள்.
"என்ன லட்சுமி? இன்னுமா இங்கேயே உட்கார்ந்துக்கிட்டிருக்கே? என்ன யோசனை? நேற்று வீட்டில் இருந்து பேசினார்களே அதைப் பற்றி யோசிக்கிறாயா?" என்றவாறே அருகில் வந்து அமர்ந்தாள் சுகன்யா.
"என்ன இன்னுமா இங்கே உட்கார்ந்துருக்கேன்னு கேட்கிறே?"
"நான் குளிக்கப் போறதுக்கு முன்னாடியும் இங்கேதானே உட்கார்ந்துருந்தே. இப்பயும் இங்கேயே இருக்கியே."