ஒருவேளை.."
"நோ.. ஒரு வார்த்தைகூட தப்பா பேசிடாதே ரஞ்சன்… என்னுடைய மீரா எங்கேயோ பத்திரமாக இருப்பாள்.. சீக்கிரம் நான் அவளை பார்ப்பேன்"
"கண்டிப்பாக… ஆனால் இந்த விஷயத்தை நாமும் தெளிவுபடுத்திக்கணும். அந்த ரிப்போர்ட் தந்த ஹாஸ்பிடலுக்கு போய் பார்த்துடலாம்"
"அந்த டாக்டர்… கீதா… அவங்க மீராவின் வீட்டிற்கு அருகில் இருக்கிறார்."
"மதியம் நாம் இதுபற்றி விசாரிக்கலாம்…" ரஞ்சன் முடித்தான்.
ரஞ்சனுக்கு இந்த விஷயம் அதிர்ச்சியாக இருந்தது. அவன் அதை காதால் கேட்கவே கொஞ்சம் சிரமப்பட்டான். மதிய உணவின் போது அந்த ரிப்போர்ட்டை எடுத்து மீண்டும் படித்துப் பார்த்தான்.
சத்தியன் சொன்னது உண்மைதான். அந்த ரிப்போர்ட்டின்படி மீராவிற்கு அதிகபட்சம் மூன்று மாதங்கள் மட்டுமே வாழ்நாட்கள் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. சரியாக அந்த காலகட்டத்தில்தான் மீரா விவாகரத்து கேட்டு பிரச்சனை செய்து கொண்டிருந்தாள். அந்த நேரத்தில் சத்யனுக்கு விபத்து ஏற்படவும் அதை பார்த்த அதிரச்சியில் சுயநினைவு இல்லாமல்போய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாள்.
பிறகு அவள் வீட்டிற்கு அழைத்து சென்று விட்டனர். அப்போதுதான் தன்னையும் அறியாமல் அங்கிருந்து வெளியேறி சென்று விட்டாள். அவளை மீண்டும் பார்க்கவே இல்லை. கடைசியாக ஒரு பேருந்தில் அவள் ஏறியதாக சொன்னார்கள். இதுவரை சரி… அதன்பிறகு அந்த பேருந்து விபத்துக்குள்ளானதும்.. அதிலிருந்து அவர்கள் இறந்துவிட்டார்கள் தீப்பிடித்து இறந்துவிட்டார்கள் என்றும் சொன்னது சரி. ஆனால் இன்னும் சத்தியனின் உள்ளுணர்வு வேறு மாதிரி சொல்கிறது. இந்த விஷயத்தை இதுவரை கவனிக்காமல் விட்டதே தவறு. இனி ஒரு முடிவுக்கு வந்தாக வேண்டுமென்று ரஞ்சன் தீர்மானித்தான்.
அன்று மதியமே சத்யனை அழைத்துக்கொண்டு டாக்டர் கீதாவை சந்திக்கச் சென்றான். அவனிடமிருந்த ரிப்போர்ட்டை அவரிடம் தந்து அதுபற்றிய விவரத்தை கேட்டார்கள்.
அந்த ரிப்போர்ட்டை படித்து பார்த்த டாக்டர் கீதா ஆச்சரியமாக அவர்களைப் பார்த்தார்.
" இந்த ரிப்போர்ட்டில் மீரா சத்யன் என்று இருக்கிறது. மீரா இங்கு பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்தது எனக்கு நினைவிருக்கிறது. பிறகு தலைவலி என்று ஒருமுறை வந்தாள். அப்பொழுது சீடி ஸ்கேன் எடுத்தார்கள். ஆனால் அந்த ரிப்போர்ட்டில் இப்படி குறிப்பிடப்படவில்லை. இது போலி ரிப்போர்ட். எங்களிடம் ஒரு காப்பி இருக்கும். அதை பாருங்கள்" என்று அவர் நர்சை அழைத்து அந்த குறிப்பிட்ட ஃபைலை எடுத்து வர சொன்னார்.