தொடர்கதை - மறப்பின் மறவேன் நின்னை மறந்தறியேன்! - 13 - சாகம்பரி குமார்
சத்யனுடன் பேசிக் கொண்டு வீட்டினுள் நுழைந்த ரஞ்சன் சுதாரித்தான். அங்கு கூடத்தில் ரேச்சல் அமர்ந்திருந்தாள். மனுகுட்டியுடன் விளையாடிக் கொண்டு இருந்தாள். அருகில் நந்தினி அதனை வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தாள்.
அவளை பார்த்து ஒரு புன்சிரிப்புடன் மாடிப்படி ஏறப்போனவனுக்கு அவளுடைய பார்வை அலார்ம் செய்தது. என்ன சொல்கிறாள்?... ரேச்சலை கண்காட்டி சத்யனை பார்க்கிறாள்…
அவனுக்கு புரிந்து விட்டது. இது ஆப்ரேசன் 'ரேச்சத்யா'வின் அடுத்த கட்ட நடவடிக்கை…! ரேச்சல் மனுவை செல்லம் கொஞ்சுவதை பார்த்தால் சத்யனின் பார்வை மாறலாம்… ஓகே… ஸ்டே தேர்…
சட்டென கையில் அலைபேசியை எடுத்தவன் யாரிடமோ முக்கியமான விஷயம் பேசுவதுபோல பாவனை செய்து சத்யனை அவ்விடம் நிறுத்தி வைத்து நகர்ந்தான். அவன் எதிர்பார்த்ததுபோல சத்யனின் பார்வை ரேச்சல் பக்கம் சென்றது…
முகத்தில் ஒரு புன்னகை பரவ தாயும் சேயும் சிரிக்கும் கண்கவரும் காட்சியை நோக்கி தன்னை அறியாமல் நகர்ந்தவன்… ஒரு கட்டத்தில் தன்னிலைக்கு வந்தான். சட்டென நிதானித்து அருகில் இருந்த புத்தக அலமாரியை நோக்கி நடந்தான். அங்கிருந்த ரீடர்ஸ் டைஜஸ்டை புரட்டுவதுபோல பாவனை செய்து கொண்டு… கவனத்தை ரேச்சல் பக்கம் வைத்தான். அலைப்பேசியில் பேசிக் கொண்டு இருந்த ரஞ்சன் இந்த டிராமாவை ஓரக் கண்ணால் பார்த்து கொண்டிருந்தான்.
"என் செல்லம்… அம்மு… என்ன செய்றீங்க…" ரேச்சல் மனுவை கொஞ்சினாள்…
"அத்தை விளையாட மாட்டேங்கறாங்களா… பட்டுகுட்டி அதான் டல்லா இருக்கீங்களா…?"
அருகில் அமர்ந்து இருந்த நந்தினியையும் உரையாடலுக்குள் இழுத்தாள்.
"விளையாடறதா… அத்தையால முடியாதும்மா… மனு இனிமேல் வால்தனம் செய்யவே கூடாது...
செஞ்சா… கடிச்சு வச்சிடுவேன்" என்று சொல்லியபடி மனுவின் கன்னத்தை செல்லமாக நந்தினி கிள்ளினாள்.
"இருக்கட்டும்… அப்புறமா அத்தைக்கு ஒரு பாப்பா வரும்ல அதை நாம கடிச்சி வச்சிடுவோம்…" ரேச்சலும் பதிலளித்தாள்…
இருவரும் பேசுவது புரிந்ததோ இல்லையோ… மனுக்குட்டி ஒரு உற்சாக கூச்சலுடன் ரேச்சலின் கன்னத்தில் கடித்தது… ஆவ்வ்...…! ரேச்சல் கன்னத்தில் கை வைத்து ஆலாபனை செய்தாள்…
"ஹாஹ்ஹா.. மனு கடிச்சிட்டாளா.. இனி வாய் பேசுவ"
"பேசுவோம்… பேசுவோம்… இதெல்லாம் கிஃப்ட்டுபா" என்றபடி கட்டி கொண்டாள்.
"ஓகே… ஓகே… ம்… ரேச்சல் உன்னுடைய புது மோதிரம் அழகாக இருக்கிறது… ஏதாவது ஸ்பெஷல் கிஃப்டா?"
"இதுவா… ஜெமி கிஃப்ட் பண்ணான்…"