நாகர்கோவிலுக்குதான் செல்ல வேண்டுமா… அதுவாவது பலனளித்தால் நல்லது என்று நினைத்தான்.
அவனிடம் வீட்டு சாவியை தந்த ஷீலா… பீரோவிற் சாவியையும் தந்து டைரியின் இருப்பிடத்தையும் குறிப்பிட்டார். அவரிடம் விடைபெற்று ஜெமி கிளம்பினான்.
அதே சமயத்தில் சத்யனும் ரஞ்சனும் மீராவின் வீட்டை நோக்கி சென்றனர். தெரு ஆரம்பத்தில் காரை நிறுத்தி இறங்கிய ரஞ்சன்
"நீ போய் உன் மாமனாரிடம் விசாரித்து வா." என்றான்.
"நீ வரலையா?"
"அங்கே நான் எதற்கு?. சும்மாவே என்னை பிடிக்காது…. நான் வேறு விதமாக விசாரித்து வருகிறேன். நீ போ" என்று அனுப்பி வைத்தான்.
மீராவின் வீட்டிற்குள் சத்யன் செல்லவும் அவனை வரவேற்றனர்.
"என்ன விஷேசம் சொல்லுங்க மாப்பிள்ளை" என்றார். அருகிலிருந்த அவருடைய மனைவின் கண்கள் பளிச்சிட்டன…. அவன் திருமணம் பற்றி பேச வந்திருப்பதாக நினைக்கிறார்களோ…
"அது… மீராவிற்கு நடந்த விபத்தைபற்றி தெரிந்து கொள்ள நினைத்தேன். சொல்லுங்கள்… அன்றைக்கு என்ன நடந்தது…?"
"அதை ஏன் இன்னும் நினைத்துக் கொண்டு…" என்று ஆரம்பித்தவர் அவனுடைய பாரவை மாறுவதை பார்த்து சுதாரித்து பேச ஆரம்பித்தார்…
"என்னத்தை சொல்றது… எப்போதும் போல அன்றைக்கும் மீரா உளறிக்கொண்டு... ஆடிப் பாடிக் கொண்டு... இருந்தாள். எங்கள் கவனம் திசை திரும்பிய ஒரு நொடியில் அவள் அறை கதவை திறந்துகொண்டு ரோட்டில் ஓட ஆரம்பித்தாள். அவளை துரத்திக் கொண்டு ஓடினோம். ஆனால் அவள் விரைவாக ஓடினாள். நாங்கள் அவள் பின்னேயே சென்றோம். அவள் பஸ் ஸ்டாண்டிற்கு நுழைந்து அங்கிருந்து வெளியே வந்த பஸ்ஸில் ஏறி விட்டாள். பஸ் விரைவாக கடந்து விட்டதால் அதற்கு மேல் தொடர முடியாமல் ஒரு டாக்ஸியை எடுத்து தொடர்ந்தோம்."
"யார் யார் போனீங்க?"
"நான்… நான் மட்டும்தான் போனேன். அன்னிக்கே சொன்னேனே… அந்த பஸ் நான்-ஸ்டாப்… திருநெல்வேலி பஸ் ஸ்டாண்டுல நிற்கும்னு சொன்னாங்க. நானும் கார் டிரைவரும் அதை நம்பி பஸ் பின்னே சென்றோம். கோவில்பட்டி தாண்டிய சிறிது நேரத்தில் விபத்துக்குள்ளாகி விட்டது. பஸ் தீப்பிடித்து எரிய ஆரம்பிச்சிட்டது. நாலைந்து பேர் வெளியே தூக்கி எறியபட்டிருந்தனர். ஆனால் அதில் மீரா இல்லை."
அவர் அதே கதையைதான் சொல்கிறார்… யோசனையுடன் எழுந்தான். அந்த பஸ் பயணத்தில் மீரா இருந்தாள் என்பதை எப்படி உறுதி செய்வது…