கேட்கிறதே…" என்றவள் கண்களை மூடி கவனித்தாள்.
மூடிய கண்களுக்குள் நீல ஒளி பிழம்பாக ஒரு பெண் உருவம் தெரிந்தது… குழலியை நோக்கிய அந்த முகத்தின் அழகை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை… மொட்டவிழும் தாமரை போன்ற முகமும்… கயல் விழிகளும்… வில்லேந்திய புருவமும்… பிறை சந்திரனை போன்ற நெற்றியும்… அந்திவான சூரியனில் துளி கிள்ளி வைத்தார்போல சிவந்த குங்குமமும்… தேவலோகத்து நங்கை என்பார்களே அதுபோல இருந்தாள்.
"நீ யார்… இங்கே என்ன செய்கிறாய்… ஏன் அழுகிறாய் தாயே" என்றாள்.
"குழலி யாரிடம் பேசுகிறாய்?" என்று இளமாறன் அவளை பிடித்து இழுத்தான்.
"உன்னால் என்னை பார்க்க முடிகிறதா… என் குரலை கேட்க முடிகிறதா…" அந்த நீல ஒளிப்பெண் ஆச்சரியமாக கேட்டாள்.
"ஆமாம்… உங்களுக்கு என்ன வேண்டும்.." என்று கேட்டபடி குழலி தரையில் கையூன்றி அமர்ந்தாள்.
"குழலி… என்ன செய்கிறாய்… இங்கே அரவத்தின் நடமாட்டம் இருக்கும் எழுந்து வா" பதறிய இளமாறனின் குரலை அலட்சியம் செய்தாள்.
"குழலி… அழகிய பெயர்… " அந்த பெண் சொல்ல,
"தாங்கள் யார் என்று சொல்லவில்லையே…" இளமாறனின் கண்ணுக்கு தெரியவில்லை ஆனால் அவளால் பார்க்க முடிகிறது… குழலியின் குரலில் மரியாதை வந்தது. அவளுக்கு புரிந்து விட்டது…
"நான் இந்த பகுதியின் காவல்காரி… ஒரு காததூரம் சுற்றளவு என் ஆளுகைக்கு உட்பட்டது… இங்கிருக்கும் புல் பூண்டிலிருந்து… மரம் செடி கொடி மனிதர் உட்பட அனைத்தையும் பாதுகாக்கும் பொறுப்பு என்னுடையது. காவல்காரி மட்டுமல்ல நியாயக்காரியும்கூட… அநீதி நடைபெறுவதை தடுப்பதும் அழிப்பதுவும் என் பொறுப்புதான் என்னை பூங்காத்தாள் என்று அழைப்பார்கள்."
'பூங்காத்தம்மன்…' குழலிக்கு நினைவு வந்தது. அவளுடைய இளம்பிராய செவி வழி கதைகளில் இந்த பெயர் வந்திருக்கிறது.
'துடியான தெய்வம்… தீயவற்றை அழிக்கும் கோபக்காரி… நல்லவர்களை