மேல் கால் போட்டபடி அமர்ந்திருந்தான் அந்த ஆஜானுபாகு மனிதன்.
அவனைப் பார்த்ததுமே ராமலிங்க பூபதியும் சொர்ணமும் திடுக்கிட்டுப் போயினர்.
அந்த திடுக்கிடலை வெளியில் காட்டிக் கொள்ளாமல், “டேய்ய்ய்....சொக்கு...எப்படா வந்தே?” கேட்டாள் சொர்ணம்.
தன் மனைவியின் தம்பியான அந்த சொக்கலிங்கம் பேச்சிலும் சரி, பழக்க வழக்கத்திலும் சரி...மிகவும் மோசமானவன் என்ற காரணத்தினால் அவனோடு பேசுவதையே நிறுத்தியிருந்தார் ராமலிங்க பூபதி.
“அக்கா... “எப்ப வந்தே?”ன்னு கேட்கறியா?...இல்லை “ஏன் வந்தே?”ன்னு கேட்கறியா?” தன் கர்ண கடூரக் குரலில் சத்தமாய்க் கேட்டான் அந்த சொக்கு.
“உன்னையெல்லாம் அப்படிக் கேட்கறதுதாண்டா நியாயம்” என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டார் ராமலிங்க பூபதி.
“ஏண்டா இப்படிப் பேசறே?...எனக்கு இருக்கற ஒரே தம்பி..நீதான்!...உன்னைப் போய் அப்படிக் கேட்பேனாடா?”
“ஆனா...அந்த ஒரே தம்பிக்கு கல்யாண பத்திரிக்கையே வைக்காம...என் முறைப் பெண்ணுக்குக் கல்யாணம் பண்ணி வெச்சிருக்கியே?....இது என்னக்கா நியாயம்?” தனது மீசையை நீவிக் கொண்டே கேட்டான் சொக்கு.
“அட...நீ ஒரே இடத்துல இருந்தால்தானே ஆகும்?...உன்னோட இருப்பிடத்தைக் கண்டுபிடிக்கறதுக்குள்ளார கல்யாணமே வந்திடுச்சு”சமாளித்தாள் சொர்ணம்.
அந்த நேரத்தில் தான் வேலூர் ஜெயிலில் இருந்தது அவர்களுக்குத் தெரியவில்லை என்பதில் ஆறுதலடைந்த சொக்கு, “அது செரி...“கல்யாணமாகி ஏழு மாசமாகியும் இவ பொறந்த வீட்டிலேயே இருக்காள்”ன்னு என்னோட தோஸ்துக சொல்றானுக...அது நெசமாக்கா?” கேட்டான்.