“அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை!...உள்ளூர்ல வாழ்க்கைப்பட்டதினால அடிக்கடி இங்க வர்றா...அவ்வளவுதான்”
“அக்கா...நான் ஊர்ல இல்லேன்னாலும் இங்க நடக்கற எல்லா விஷயங்களும் என் காதுக்கு வந்திடும்!...அந்த மாப்பிள்ளைப் பயல்...அவனோட தோஸ்த் ஒருத்தனுக்காக நம்ம பொண்ணை ஒதுக்கி வெச்சிட்டானாமே?...சொல்லுக்கா...அவனைத் தூக்கிட்டு வந்து ஒரு காட்டு காட்டறேன்” சொக்கு சொடக்கு போட்டுச் சொல்ல,
அவசரமாய் எச்சில் விழுங்கினாள் சொர்ணம், “டேய்...டேய்..அப்படி...கிப்படி ஏதாச்சும் பண்ணி வெச்சிடாதடா...அவங்க குடும்பமும் நம்ம குடும்பம் மாதிரித்தான் பெரிய குடும்பம்டா!...”
அக்காவுக்கும் தம்பிக்கும் இடையில் நடக்கும் சம்பாஷனையை சற்றுத் தள்ளி அமர்ந்து முகச்சுளிப்போடு கேட்டுக் கொண்டிருந்தார் ராமலிங்க பூபதி.
“இதுக்குத்தான்க்கா போன தடவை வந்தப்பவே கேட்டேன்...“பேசாம நம்ம மல்லிகாவை எனக்கே கட்டிக் குடுத்திடு...நான் அவளைக் கண்ணுக்குள்ள வெச்சுப் பார்த்துக்கறேன்”னு...நீதான் கேட்க மாட்டேனுட்டே”
“ராஸ்கல்...வருஷத்துல ஏழு மாசம்...எட்டு மாசம் ஜெயிலில் இருக்கற சிறைப்பறவை நீ..உனக்குப் பொண்ணுக்கு குடுக்க நாங்க என்ன முட்டாள்களா?” மனசுக்குள் கறுவிக் கொண்டார் ராமலிங்க பூபதி.
அந்தப் பேச்சை திசை திருப்பும் விதமாய் சொர்ணமும், “அது செரி...மல்லிகா ஏதாச்சும் டீ...காஃபி போட்டுக் குடுத்தாளா?...இல்லையா?” கேட்டாள்.
“க்கும்...இந்த வூட்ல நீ ஒருத்திதான் என்னை உட்கார வெச்சுப் பேசறே?...மத்த ஜீவன்களெல்லாம் என்னை மனுஷனாக் கூட மதிக்கறதில்லை” ராமலிங்க பூபதிக்கும், உள் அறையில் முடங்கிக் கிடக்கும் மல்லிகாவிற்கும் கேட்கட்டும் என்றே சற்றுப் பெரிய குரலில் சொன்னான் சொக்கு.