“என்ன முரளி...கோயமுத்தூர்ல இருந்தப்ப எங்களுக்குத் தெரியாம இந்தப் பொண்ணைக் காதல் கீதல் பண்ணிட்டியா?” வசந்தி அண்ணனைக் கிண்டலடித்தாள்.
அவளைக் கையமர்த்திய தங்கவேலு, “இல்லை வசந்தி...உங்க அண்ணன் தங்கமான பையன்...அந்த குணம் ரொம்ப பிடிச்சுப் போயி...இந்தப் பொண்ணுதான் உங்க அண்ணனைக் காதலிக்க ஆரம்பிச்சிட்டுது!” என்றார்
முரளி கண்களைச் சுருக்கியபடி நித்யாவைப் பார்க்க, அவள் ஓடி வந்து முரளியின் கைகளைப் பற்றிக் கொண்டு தழுதழுத்தாள், “உண்மைதாங்க!...அன்னிக்கு அந்த கோகுலுக்கு சேர வேண்டிய பணத்தை நீங்க சத்தமில்லாமல் வாங்கி உங்களோட வெச்சிருக்கலாம்!...ஆனா நீங்க அப்படிச் செய்யாம...என்னைக் கூட்டிட்டுப் போய்...அவங்க அப்பா முன்னாடி நிறுத்தி...அவர் கைல குடுக்க வெச்சீங்க பாருங்க?...அப்பவே நான் விழுந்திட்டேன்!...ரொம்ப நாளா எனக்குள்ளேயே வெச்சிருந்த காதலைச் சொல்லத்தான் உங்க டிரான்ஸ்போர்ட் ஆபீஸுக்கு வந்தேன்...அங்கதான் இந்த தங்கவேலு அண்ணாவைப் பார்த்தேன்”
அவள் லேசாய் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள, தங்கவேலு தொடர்ந்தார். “ஆமாம் தம்பி நீ இன்னும் அங்கதான் இருக்கே!ன்னு நெனச்சிட்டு இந்தப் பொண்ணு உன்னைத் தேடி வந்திச்சு...நீ இல்லே!ங்கற விஷயத்தை நான் சொன்னதும் அழுதிச்சு...அதுக்கு மேலே அந்த டிரான்ஸ்போர்ட் ஆபீஸ்ல வெச்சுப் பேசறது நல்லதில்லை!ன்னு நான் எங்க வீட்டுக்கே கூட்டிட்டுப் போயிட்டேன்!...அங்க போன பிறகுதான் இந்தப் பொண்ணோட ஒருதலைக் காதல் விஷயம் எனக்குத் தெரிஞ்சுது”
யோசனையுடன் தரையையே உற்றுப் பார்த்துக் கொண்டு நின்ற முரளி, “அதுக்கில்லைங்க அண்ணே?...நீங்க பாட்டுக்கு “திடு....திப்”ன்னு இந்தப் பொண்ணைக் கூட்டிட்டு வந்திட்டீங்க!...இவங்க பெற்றோர் போலீஸ்ல கம்ப்ளைண்ட் குடுத்தா...பிரச்சினையாய்ப் போயிடுமே?” என்றதும்,
“அது செரி..நான் மட்டும் கையோட இங்க கூட்டிட்டு வரலேன்னா...இந்தப் பொண்ணு தூக்குல தொங்கியிருக்கும்!” என்றார் தங்கவேலு.