அதிர்ந்து போன முரளி, “என்னண்ணே சொல்றீங்க?”
“ஆட ஆமாம்ப்பா...இவங்க வீட்டுல வேற மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க!...இது எவ்வளவோ மறுத்துப் பார்த்திருக்கு...அவங்க கேட்கலை!... “நான் வேற ஒருத்தரை மனசுல நெனைச்சிட்டு இருக்கேன்”ன்னு சொல்லிப் பார்த்திருக்கு!...அவங்களும் “யாரு?...எவரு?”ன்னு விசாரிச்சிருக்காங்க!...நீதான் இங்க வந்திட்டியே?...இது முழிச்சிருக்கு...விஷயம் வேற மாதிரிப் போக ஆரம்பிச்சதும்!...இது எங்க வீட்டுல வந்து தஞ்சமடைஞ்சிருச்சு...எனக்கும் ஒண்ணும் புரியலை...கடைசில... “சரி...அது ஆசைப்பட்ட மகராசன் கிட்டேயே கொண்டு போய் விட்டுடுவோம்!”ன்னு இங்க கூட்டிட்டு வந்திட்டேன்!...இதுல தப்பு எது?...ரைட்டு எது?ன்னெல்லாம் எனக்கு யோசிக்கத் தெரியலை!...இந்தப் பொண்ணோட உசுரைக் காப்பாத்தணும்!...அது ஒண்ணு மட்டும்தான் தோணிச்சு” மூச்சு விடாமல் பேசினார் தங்கவேலு.
சொக்கு பாய்ந்து வந்தான், “மாம்ஸ்...அதைப் பத்தியெல்லாம் நீங்க ஏன் கவலைப்படறீங்க?...உங்களுக்கு இந்தப் பொண்ணைப் பிடிச்சிருக்கா?... “ம்”ன்னு சொல்லுங்க...ரெண்டு கல்யாணத்தையும் ஒண்ணாவே வெச்சுக்கலாம்!...மத்த பிரச்சினைகளையெல்லாம் நான் பார்த்துக்கறேன்”
முரளி தன் தாயைப் பார்த்தான்.
அவள் “சம்மதம்”என்கிற விதத்தில் தலையை ஆட்டினாள்.
வசந்தியைப் பார்த்தான். “உனக்கு ஓ.கே.ன்னா...எனக்கும் ஓ.கே.ண்ணா” என்றாள் அவள் வாய் விட்டே,
“நீங்கெல்லாம் சம்மதிச்சிட்டீங்க!...ஆனா முக்கியமான ஒருத்தர் சம்மதிக்கணும்!...அவரும் வந்து சொல்லிட்டார்ன்னா...நான் கல்யாணத்துக்கு ரெடி” என்றான் முரளி.
“அந்த ஒருத்தர் யார்?னு எனக்குத் தெரியும்” என்ற தங்கவேலு தனசேகரின் எண்ணுக்கு கால் செய்தார்.
தொடரும்