தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா – பாகம் 2 - 28 - பிந்து வினோத்
படுக்கையில் புரண்டுப் படுத்தாள் மஞ்சு. தூக்கம் வர மாட்டேன் என்று அடம் பிடித்தது! கடிகாரத்தில் நேரம் பார்த்தாள். மணி நள்ளிரவை நெருங்கிக் கொண்டிருந்தது.
ஹாலில் இருந்து வந்த வெளிச்சமும், மெல்லிய சத்தமும் மனோஜ் இன்னமும் வேலை செய்துக் கொண்டிருக்கிறான் என்பதை அவளுக்கு எடுத்துச் சொன்னது.
மஞ்சுவையும் அறியாமல் ஒரு பெருமூச்சு வெளியானது.
மனோஜ் இருபத்தி நான்கு மணி நேரமும் வேலையில் மூழ்கிப் போய் இருப்பதை எப்படி எடுத்துக் கொள்வது என்று அவளுக்குப் புரியவில்லை!
முன்பெல்லாம் வார இறுதி நாட்களிலாவது வேலை செய்யாமல் இருப்பான், இப்போது அந்த நாட்களிலும் வேலையை இழுத்துப் போட்டு செய்துக் கொண்டிருந்தான்.
மஞ்சு இதை எல்லாம் யோசித்துக் கொண்டிருக்கும் போதே ஹாலில் விளக்கு அணைக்கப்பட்டது. தொடர்ந்து காலடி சத்தமும் கேட்க, மனோஜ் ஒரு வழியாக உறங்க வருகிறான் என்பது அவளுக்குப் புரிந்தது.
அவள் நினைத்ததுப் போலவே இரண்டு நிமிடங்களில் படுக்கையின் அருகே அரவம் கேட்கவும், மஞ்சு அந்த பக்கம் திரும்பினாள்.
“நீ இன்னும் தூங்கலையா pbs?” என்றுக் கேட்டுக் கொண்டே அவளின் கன்னத்தில் முத்தம் பதித்தான் மனோஜ்.
“தூக்கம் வரலை மனோஜ்... நீங்க பக்கத்துல இல்லாம எனக்கு சுத்தமா தூங்க முடியலை...”
“நான் பக்கத்துல இல்லாம எப்படி தான் அவ்வளவு நாள் இருந்தீயோ,” என்று சொல்லிக் கொண்டே மனோஜ் அவளை அணைத்தவாறு படுத்துக் கொண்டான்.
மஞ்சுவும் அவனின் கைகளில் ஒண்டிக் கொண்டாள்!