தன்மானத்தையும், சுய மரியாதையையும் சீண்டியது!
ஒரு வேளை அமித் அசாதாரணமான திறமை பெற்றவன் என்றால் கூட மனோஜ் பல்லைக் கடித்துக் கொண்டு சமாளிக்க முயன்றிருப்பான்... இவனோ அப்படி திறமைப் பெற்றவனும் இல்லை...
மனதுள் இயலாமையும், கோபமும் போட்டிப் போட, இன்னும் உத்வேகத்துடன் வேலை தேட முயற்சி செய்தான். ஆனால் ஒவ்வொரு தடவையும் அவனின் முயற்சி விஸா பெயரில் நிராகரிக்கப் பட்டது!
இந்த மாற்றங்களால் அதிகம் தாக்கத்திற்கு ஆளானவள் மஞ்சு தான்!
மஞ்சுவிடம் எப்போதும் அன்பும், கனிவும், பொறுமையுமாக பேசும் மனோஜ், இப்போதிருந்த மனநிலையில் எதற்கெடுத்தாலும் அவளிடம் சிடு சிடு என எரிந்து விழத் தொடங்கினான்!
ஒன்றுமே இல்லாத சின்ன சின்ன விஷயங்களுக்கு எல்லாம் கோபப் பட்டான்! கத்தினான்! திட்டினான்!
மஞ்சு மனோஜை சிடுமூஞ்சி மேனேஜராக தான் முதன் முதலில் சந்தித்திருந்தாள்! ஆனால், அதன் பின்... அவர்களுக்கு திருமணமான பின் மனோஜின் மொத்தமாக மாறுப்பட்ட முகத்தை, மென்மையான பக்கத்தை பார்த்திருந்தாள்!
அப்படிப் பட்ட மனோஜ் திடீர் என்று இப்படி மாறவும், மஞ்சு அதை அப்படியே ஏற்க முடியாமல் தடுமாறினாள்!
அவனின் சின்ன சின்ன வார்த்தைகள் கூட ஊசிகளாக அவளை குத்தி காயப் படுத்தியது...
அன்றும், காலை உணவை உண்ணாமல் மனோஜ் அலுவலகத்திற்கு கிளம்புவதை கவனித்து,
“மனோஜ் சாப்பிடலையா??” என அவள் கேட்டு முடிக்கும் முன், எரித்து விடுவதுப் போல அவளை பார்த்து முறைத்தான் மனோஜ்!