சத்யா திரும்பி முறைப்பாள் என்று எதிர்பாராதவர்களை போல் அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். பின் தங்களுக்குள் எதையோ பேசிவிட்டு, அவளின் அருகே வந்தார்கள்.
சத்யாவின் கைகள் தானாக ஷாலினியின் கையை பிடித்து இழுத்து தன்னோடு சேர்த்துக் கொண்டது.
"நீ அந்த போலீஸ் ஆபிசர் தென்றல்வாணன் மனைவி தானே?"
சத்யா அமைதியாக அவர்களை பார்த்தாள்.
"சின்ன பொண்ணா இருக்க, சின்ன குழந்தை வேற இருக்கு! இன்னும் கொஞ்ச நாள் பூவோட பொட்டோட இருக்க ஆசையிருக்குள்ள? உன் புருஷன் கிட்ட தேவை இல்லாமல் அந்த பொண்ணு கேசுல தலை போட வேண்டாம்னு சொல்லி வை! அது தற்கொலை செய்துக் கிட்டா என்பது முடிவான விஷயம்! நாங்க எல்லாம் எதுக்கும் துணிஞ்சவங்க! இந்த ஊர் எம்.எல்.ஏ வோட ஆளுங்க! புரியுதா????" என்றான் அவர்களில் ஒருவன் கட்டையான குரலில்.
காய்கறி கடை பெண்மணி,
"டேய், டேய் காளி! அந்த ஆபிசர் ரொம்ப நல்லவர்ப்பா. பாவம் சின்ன பொண்ணு மிரட்டாதே..." என்று சத்யாவிற்காக கெஞ்ச தொடங்கினாள்.
அவளை ஒரு பார்வை பார்த்த சத்யா, பறந்துக் கொண்டிருந்த தன் சேலை முந்தானையை இழுத்து பிடித்து இடுப்பில் செருகி கொண்டு அந்த முரடர்களை பார்த்தாள்.
"அப்போ, உங்க எம்.எல்.ஏ-க்கும் அந்த பொண்ணு சாவுக்கும் ஏதோ சம்மந்தம் இருக்கு, அப்படி தானே? நீங்க இப்படி ஊருக்கு முன்னாடி வந்து மிரட்டுறது அவருக்கு தெரியுமா?"
"ஹேய், ரொம்ப பேசுற நீ!" என்றான் முரடன் மிரட்டுவதுப் போல!