அவன் வீட்டினுள் நுழைய, அவனை கவனித்து,
“வாப்பா....” என்று பேச தொடங்கியது அவனின் அம்மாவாக இருக்க வேண்டும்.
அவளை பார்த்து என்ன புரிந்ததோ அவர்கள் திகைத்து போய் நிற்பது சுவாதிக்குப் புரிந்தது.
“கலா, இவளை மேலே என் ரூமுக்கு அழைச்சிட்டு போ....” என்று வேலையாளிடம் சொன்னவன், சுவாதியிடம்,
“சுவாதி, நீ போ, போய் ரெஸ்ட் எடு நான் வரேன்... பெட்டி எல்லாம் எடுத்துட்டு வந்து தர சொல்றேன்....” என்றான்.
அவள் தயங்கி நிற்க,
“போம்மா நான் பார்த்துக்குறேன்....” என்றான் பரிவான குரலில்..
அதற்கு மேல் அங்கேயே நிற்பது சரி இல்லை என்று தோன்றியது. அவனின் அம்மாவின் அருகில் அதே போன்ற அதிர்ச்சியுடன் நிற்பது அவனின் தங்கையாக இருக்க வேண்டும்...
வேலையாளின் பின்னே சென்றவளுக்கு விஷாகன் அவர்களிடம் பேசுவது கேட்டது...
“அம்மா, கோபப்படாமல் நான் சொல்றதை கேளுங்க....”
அறையினுள் சென்றவளுக்கு அவனின் குரல் மெல்ல தேய்ந்து மறைந்தது... வெளியே நின்றால் அவர்கள் பேசுவது கேட்கும் ஆனால் அவளுக்கு அது போல ஒட்டு கேட்க மனம் வரவில்லை.
அவனின் அறையை சுற்றி கண்களை சுழற்றினாள். நல்ல விசாலமான அறை.... நல்ல முறையில் பராமரிக்கப் பட்டும் இருந்தது...