மாதவன் இதற்கு முன்னால் இரண்டு முறை டாக்டரிடம் அவள் கூடவே சென்றான். டாக்டருக்கு மிகுந்த சந்தோஷம். அவள் கொடுத்த அட்வைஸ் அவர்களை மாற்றி இருக்கிறது என்று. மாதவனின் அன்பையும், அவள் மேல் அவனுக்கு இருந்த காதலையும் கண்டார். டாக்டரைப் அந்த விழாவிற்கு அழைத்திருந்தார் மாதவன்.
விழா தினம், காலையில் வீடு பரபரப்பாக இருந்தது. மானாசாவிற்கும், மாதவனுக்கும் காலை நலங்கு வைத்தார் மானசாவின் அம்மா, அதற்கு பிறகு எல்லா குழைகளுக்கும் வைத்தார்.
பிறகு அவள் குளித்து வந்தவுடன், அவளுக்கு அலங்காரம் செய்ய பார்லரிலிருந்து ஆள் வந்திருந்தார்கள். அவளுக்கு அலங்காரம் செய்தார்கள், அவள் தனக்கு சிம்பிளாக செய்ய சொன்னாள். மாதவன், அவளுக்கு கல்யாணப் பெண் போல் அலங்காரம் செய்ய கூறியிருந்தார்.
அவள் ஏற்கனவே மிகுந்த அழகுடன் இருந்தாள், இப்பொழுது செய்திருக்கும் மேக்கப்பில் வெகு அழகுடன் சோபித்தாள்.
மேக்கப் முடிந்தது அவளை, அழைத்துச் செல்ல அவள் அம்மாவும், ஓமனாவும் வந்தார்கள், ஓமனாவை பார்த்த உடன் கண்களில் கண்ணீரோடு அவளைக் கட்டிக் கொண்டு , " எப்படியாக்கும் இருக்காய் ஓமனே," என்று கேட்டாள் மானசா.
அவளும், சிரித்துக் கொண்டே, கண்ணீரோடு," ஞான் நல்லாயிட்டு உண்டு" என்று கூறவும், “நீ எப்படி இங்கே?" என்று கேட்டாள் ஓமனா.
" இதோ நோக்குடி, இது ஆறாவது குட்டியாக்கும். " என்று சிரித்துக் கொண்டே, தன் வயிற்றை காட்டினாள், ஓமனாவும், சஹானாவும் கண்களில் கண்ணீரோடு சிரித்தார்கள்.
"சரி வா போகலாம், பொறத்தே ரெண்டு பேரும் பேசிக் கழிக்கலாம். இப்போ நேரம் ஆச்சு கேட்டியா, அவ்விட எல்லோரும் காட்டிருக்குன்னு ," என்று கூறிக் கொண்டே அவள் அம்மா அவளைக் அழைத்துக் கொண்டு சென்றார்.