எதிரே, மாதவன் அவள் அழகை ரசித்துக் கொண்டு அவள் அருகில் வந்தான், அவள் அம்மாவும், ஒமனாவும் விலகிக் கொண்டனர் வெட்கத்துடன் தலை கவிழ்ந்து, " என்ன நாயர், எல்லார் எதிரிலும் இப்படி நோக்குன்னு, எல்லாரும் என்ன நினைப்பாங்க?” என்று மெதுவாக அவனுக்கு மட்டும் கேட்கும் படி மெல்லிய குரலில் கேட்டாள்.
"எண்ட பார்யாவை, நான் பார்க்கிறது தப்போ, யார் என்ன நினைச்சா எனக்கு என்ன, நீ ரொம்ப அழகா இருக்க, ஒரு தேவதை போல, நீ எண்ட தேவதை மானசி." என்று கள்ளுண்டவன் போல், ஒரு மயக்கத்தோட பேசவும், அவள் முகம் சிவ்வென்று ஆனது.
" ஞான் போட்டே? எல்லாரும் காற்றிருக்குன்னு "
அப்போதுதான் அவன் தன் உணர்வுக்கு வந்தான்.
அவன், அவளை தோளோடு அனைத்துக் கூட்டிக் கொண்டு போனான்.
அவர்கள் கார்டனில் பெரிய மேடை போட்டிருந்தான் அவன், அங்கே இருந்த சேரில் உட்கார வைத்தான்.
ஒரு சில நிமிடங்கள் அவளையே பார்த்துக் கொண்டிருந்து விட்டு, அங்கிருந்து தள்ளி அவனுக்கு நன்கு அவள் முகம் தெரியும் இடத்தில் சென்று நின்று கொண்டான்.
அவள் அம்மாவிடம் ஏதோ கூறினாள், அவரும் புன்னகைத்துக் கொண்டே, " அதனால் என்னடி, முதல்ல உன் ஆத்துக்காரர் செய்யட்டும்."
அவள், தன் கணவனை கண் ஜாடையில் அருகில் அழைத்தாள். அவன், அவளருகில் வந்தான். " நாயர், நீங்க முதல்ல வைக்கணும் எனக்கு" என்றாள், கண்களில் கண்ணீர் முத்துக்களுடன்.
அவன் கண்களும் கலங்கியது, அவள் கண்களை சில நொடிகள் பார்த்தவன், அவள் அம்மாவிடம்," எப்படி செய்யணும்?" என்று கேட்டான்.