"இது தான் மேடம் ரூம்..." என்று பறைசாற்றி விட்டு, கதவை தட்டி விட்டு, மெதுவாக கதவை திறந்தாள் நிலா.
உள்ளே இருந்த பெரிய நாற்காலி காலியாக இருந்தது.
"இல்லை அக்கா..." என்ற இந்துவின் குரல் மட்டும் கேட்டது.
அரவம் உணர்ந்து திரும்பிய இந்து, கையில் இருந்த செல் போனில்,
"ஒரு நிமிஷம்" என்று சொல்லி விட்டு இவர்களை நோக்கி வந்தாள்.
சஞ்சீவை பார்த்து பெயருக்கு ஒரு புன்னகையை கொடுத்து விட்டு,
"ஒரு நிமிஷம்... இங்கே உட்காருங்கள்.." என்று அங்கிருந்த நாற்காலியை காட்டினாள்.
பின் நிலாவிடம், "தேங்க்ஸ் நிலா" என்றாள். நிலா அவளிடம் சொல்லி விட்டு கிளம்பினாள்.
இந்து சஞ்சீவிடம் உள்ளே சென்று வருவதாக சைகை செய்து விட்டு அந்த அறையின் உள்ளே இருந்த மற்றொரு கதவை திறந்து உள்ளே சென்றாள்.
இந்து கீதாவிடம் தான் பேசுகிறாள் என்பது சஞ்சீவிற்குப் புரிந்தது. அவள் வரும் வரை என்ன செய்வது என்று எண்ணியவன் அங்கிருந்த பொருட்களை நோட்டம் விட்டான். இந்துவின் மேஜை சுத்தமாக இருந்தது. தன் அறையை இந்த அறையுடன் ஒத்திட்டு பார்த்தவன், இனி மேல் தன் அறையை சிறிது ஒழுங்கு படுத்த வேண்டும் என்று முடிவு செய்தான். சுற்றி திரிந்த அவன் கண்களுக்கு, இந்துவின் நாற்காலியை நோக்கி திரும்பி இருந்த அந்த புகைப்படங்கள் தென்பட்டன. எழுந்து மெதுவாய் இரண்டையும் கையில் எடுத்தான். முதல் புகைப்படத்தில் நாற்பதுகளில் இருந்த ஒரு தம்பதியினர் இருந்தன. அது இந்துவின் பெற்றோராக இருக்க வேண்டும். இந்துவின் பெற்றோரை பற்றி அவன் கேள்வி பட்டிருக்கிறானே தவிர இதுவரை நேரில் சந்தித்ததில்லை. இந்து அவள் தந்தையை கொண்டு பிறந்திருக்கிறாள் என்பது புரிந்தது.