அவற்றை வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்றது போல் மாற்றம் செய்து விற்பனை செய்தனர். எஸ்.எ.ஐ என்ற பிராண்ட் பெயரில் பல பெரிய பிரபலமான வர்த்தக நிறுவனங்களின் மூலம் பொருட்கள் விற்பனை செய்ய பட்டு வந்தது. பொருட்கள் கொள்முதல் செய்வதற்கு வசதியாக எஸ் எ இன்டஸ்ட்ரீஸ்-ன் கிளைகள் பல நகரங்களில் செயல் பட்டு வந்தது.ஆனால் தலைமை அலுவலகம் சென்னையில் இயங்கி வந்தது. பொருட்கள் கொள்முதல், விநியோகம், வாடிக்கையாளர் புகார்கள், தர சோதனை என பலவிதமான துறைகள் இங்கே இயங்கி வந்தது. இந்து சஞ்சீவை, ஆபீஸ் அறைகளை தாண்டி இருந்த தொழிற்சாலைக்குள் அழைத்து சென்றாள்.
"இதோ பாருங்க சஞ்சீவ், இது தான் குவாலிட்டி டிபார்ட்மென்ட். அதோ ரெட் ஷர்ட் போட்டிருக்காரே அவர் பெயர் குமார். உங்களை அவருக்கு அறிமுகம் செஞ்சு வைக்கிறேன். அவர்கிட்ட சும்மா பேசி பாருங்க. அப்புறம் உங்களுக்கு யார் கூட பேசனும்ன்னு தோணினாலும் பேசலாம். அவரே உங்களை அறிமுகம் செஞ்சு வைப்பார். எனக்கு ஒரு சின்ன வேலை இருக்கு முடிச்சுட்டு வரேன்..."
சொன்னது போல் குமாரை அழைத்து சஞ்சீவ் தங்கள் நிறுவனத்தை சுற்றி பார்க்க விரும்புவதாகவும், அவருக்கு தேவைப் பட்ட உதவிகளை செய்யுமாறும் சொல்லி விட்டு சென்றாள் இந்து. சஞ்சீவிற்கு சிறிது குழப்பமாக இருந்தது. இருந்தாலும் எஸ் எ இன்டஸ்ட்ரீஸ்-ஐ விட இந்துவை பற்றி தெரிந்துக் கொள்ள விரும்பினான். எனவே பொதுவாக அலுவல் பற்றி பேசாது குமாரின் பதவி பற்றியும், அவன் இந்த பணியில் எவ்வளவு நாளாக இருக்கிறான் என்பது பற்றியும் கேட்டு விட்டு, சாதாரணமாக கேட்பது போல், ஒரு பெண்ணின் கீழ் பணி புரிவதை பற்றி கேட்டான். இன்றைய காலக் கட்டத்தில் அது சாதாரணமானது தான் என்ற போதும், இந்துவை பற்றி மேலும் அறிந்து கொள்வதற்காகவே கேட்டான். அவ்வளவு தான் குமார் மூச்சு விடாது பேசினான். இந்துவிற்கு தனி புகழ் மாலை இலக்கியம் பாடாதது தான் குறை.
குமாரின் தந்தை மாரடைப்பால் எதிர்பாராது காலமானப் பொழுது, அந்த குடும்பம் அடுத்து என்ன செய்வது என்று திகைத்து நின்றது. குமார் அப்போது தான், கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து கொண்டிருந்தான், அவனை விட இளையவளாக ஒரு தங்கை இருந்தாள். அன்னை அவ்வளவாக கல்வி பயின்றிருக்கவில்லை. எனவே குடும்ப பொறுப்பை ஏற்றுக் கொண்ட குமார், சரவணனை சந்தித்து தந்தையின் வேலையை தனக்கு தருமாறு கூறினான்.