உடனே மறுத்தாள் கீதா!
"அப்போ ராஜீவை பத்தி மட்டும் தான் பேசுவீங்களா... இருக்கட்டும் பரவாயில்லை... நீ போயிட்டு வா.... கேட் திறக்கிற சத்தம் கேட்குது... வீணா வந்தாச்சு போல இருக்கு..."
இருவரும் தோட்டத்தின் வழியே இருந்த பாதையில் சென்று வீட்டின் முன்புறம் அடைந்தனர். அதே நேரம் காரை ஓரமாக பார்க் செய்து விட்டு காரில் இருந்து இறங்கிய வீணா, இருவரையும் பார்த்து புன்னகைத்தாள்.
"எப்படிம்மா இருக்க வீணா? உன் குழந்தை எப்படி இருக்கா? உங்க அத்தை, அவினாஷ் எல்லாம் சௌக்கியமா?" என்று அவளிடம் நலம் விசாரித்தாள் காஞ்சனா.
"சூப்பரா இருக்கேன் ஆன்ட்டி... எல்லாரும் நல்லா இருக்காங்க... நீங்களும் டைம் கிடைக்கும் போது வீட்டுக்கு வாங்க..." என்றாள் வீணா முக மலர்ச்சியுடன்!
"கட்டாயம் வரேன்... நீயும் முடிந்தால் உன் பொண்ணை கூட்டிட்டு வா..."
"சரி ஆன்ட்டி... ஆனால், அவ பாட்டியை விட்டு இந்த பக்கம், அந்த பக்கம் நகர்ந்தால் தானே..." என சொல்லிவிட்டு கண்ணை உருட்டினாள் வீணா.
செல்லமாக அவளின் தோளில் தட்டிய காஞ்சனா,
"நீ இன்னும் அதே வாலா தான் இருக்கேன்னு தெரியுது... உள்ளே வாம்மா... ஏதாவது சாப்பிட்டுட்டுப் போகலாம்..." என அழைத்தாள்.
"இப்போ எதுவும் வேண்டாம் ஆன்ட்டி... இன்னொரு நாள் வந்து ஒரு வெட்டு வெட்றேன்... கவலையே படாதீங்க... இன்னைக்கு ரொம்ப டைம் இல்லை... அதனால கிளம்பட்டுமா..." என்று காஞ்சனாவிற்கு பதில் சொன்ன வீணா, கீதாவிடம்,
"அக்கா நீங்க ரெடியா?" எனக் கேட்டாள்.