கீதா ஆம் என்று தலை அசைக்கவும், காஞ்சனா,
"சரி நீங்க கிளம்புங்க... நைட் வரும் போது பத்திரம்... பார்த்து கார் ஓட்டனும்...." என்றார்.
"கவலைப் படாதீங்க ஆன்ட்டி... உங்க செல்ல மருமகளை பத்திரமா கொண்டு வந்து சேர்த்துருவேன்... ஓகே வா??" என்றாள் வீணா.
காஞ்சனா சிரிக்க, மற்ற இருவரும் கூட புன்னகை மின்ன காஞ்சனாவிடம் விடைப் பெற்று விட்டு, காரில் ஏறி கிளம்பினார்கள்.
🌼🌸❀✿🌷
அதிக ட்ராஃபிக் இல்லாதததால், கீதாவும் வீணாவும் சீக்கிரமே ஷாப்பிங் மாலிற்கு வந்து சேர்ந்திருந்தார்கள். இந்து வரும் வரை விண்டோ ஷாப்பிங் செய்வது என்று முடிவெடுத்து, இருவரும் ஐந்து மாடிகள் கொண்ட அந்த வணிக வளாகத்தில் கதைப் பேசிக் கொண்டே சுற்றினார்கள்.
இரண்டாம் மாடியில் இருந்த கடையில் கில்ட் நகைகளை இருவரும் பார்த்து கொண்டிருந்த போது,
"ஹலோ கீதா... வீணா..." என்றக் குரல் கேட்டு திரும்பினார்கள்.
அங்கே சேகர், இந்துவின் அத்தை மகன் நின்றிருந்தான்.
"ஹாய் சேகர்... எப்படி இருக்கீங்க... உங்களைப் பார்த்து எவ்வளவு நாள் ஆச்சு...." என்றாள் கீதா நட்புடன்.
"நான் நல்லா இருக்கேன் கீதா... எனக்கு என்ன குறை... என்ன நீங்க இரண்டுப் பேர் மட்டும் இருக்கீங்க, இந்து எங்கே? அவளோட மூடை சரி செய்ய ஷாப்பிங் வந்தீங்களா?" என்று சேகர் கேட்கவும், கீதாவும், வீணாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.