”உண்மைதான் அண்ணா கொம்பனை பத்திதான் கேட்கப்போறேன், நான் கொம்பனை பார்க்கலைங்கறது இருக்கட்டும், என்னிக்காவது ஒரு நாள் கொம்பன் என்னை பார்த்திருக்காரா, தனக்கு காவேரிங்கற முறைப்பொண்ணு இருக்குன்னாவது அவருக்குத் தெரியுமா, அவளோட கல்யாணம் 7முறை தடங்கல் ஆகி நின்னதுக்கு காரணம் அவர்தான்னு அவருக்கு தெரியுமா, ஊருக்கே நல்லது செய்ற கொம்பன் என் விசயத்தில அநியாயம் செய்றாரே, அது அவருக்கு தெரியுமா, இந்த முறை என் கல்யாணம் நின்னது இருக்கட்டும், இதுக்கு முன்னாடி என் கல்யாணம் நின்னப்ப உங்க கொம்பன் எனக்கு என்ன நல்லது செய்தாரு, என்னைத் தேடி வந்தாரா இல்லையே, எனக்கு வாழ்க்கை தந்தாரா இல்லையே, எங்கப்பாவுக்கு ஆறுதல் சொன்னாரா இல்லையே, என்ன செய்தாரு அவரு, எதுக்காக அவரை நீங்க எல்லாரும் தலையில தூக்கி வைச்சி கொண்டாடறீங்க, ஒரு பொண்ணுக்கு அநீதியை இழைச்சவரு உங்க சாமியா, இப்ப உங்க சாமியே என் விசயத்தில தப்பு செய்யுதே அவருக்கு யாரு தண்டனை தர்றது சொல்லுங்கண்ணா” என உக்கிரமாக பேச அதைக்கேட்டு கார் கூட ஓட்ட முடியாமல் உடனே வண்டியை பிரேக்கிட்டு நிறுத்திவிட்டு காவேரியை பார்த்தான் மிரட்சியுடன். கார் நின்றதைக் கூட கவனிக்காமல் மகளைப்பற்றியே நினைத்துக் கொண்டிருந்தார் சண்முகம்.
”என்ன அண்ணா பயப்படறீங்க”
”இது பயமில்லைம்மா நீயா இப்படி பேசறதுன்னு நினைச்சி ஆச்சர்யப்படறேன், உண்மையை சொல்லனும்னா அந்த கொம்பனுக்கு ஏத்தவ நீதான்மா”
என சொல்ல அவளுக்கு அலுப்பாகவும் கோபமாகவும் இருந்தது
“கொம்பன் என்ன பெரிய இவனா, அவனை பார்த்து எனக்கொன்னும் பயமில்லை”
”பயமா எதுக்கு பயம், கொம்பனை பார்த்து பயப்பட வேண்டிய அவசியம் இல்லை, அவரை போல மென்மையானவரை பார்க்கவே முடியாது, சின்ன அசம்பாவிதம் நடந்தா கூட உடனே மனசு உடைஞ்சிப் போயிடுவாரு”