”நாய்களை வளர்த்துக்கிட்டு நாய்களோட வாழறவருக்கு மென்மையான மனசு இருக்குதா என்ன”
”நாய் வளர்க்கறது அவரோட பொழுது போக்கு, அவர்க்குன்னு ஆயிரம் சொந்த பந்தம் இருந்தாலும் நாய்களைதான் அவர் தன் நண்பர்களா பார்க்கிறாரு”
”ஓஹோ நாய் சினேகமா அதுசரி நாய்களோட பழகினா அவருக்கும் நாய் புத்திதானே வரும்”
”அப்படி சொல்லாதம்மா நாய் நன்றியுள்ளது, ஒருவேளை சோறு போட்டா கூட சாகற வரைக்கும் நம்மகிட்ட வாலாட்டிகிட்டு இருக்கும், நமக்கு ஒண்ணுன்னா துடிச்சிப் போகும், நம்மளை கண்ணும் கருத்துமா பாதுகாக்கும், அதே போலதான் கொம்பனும் நன்றியுள்ளவரு, நீ உன் அப்பா சொன்னதை வைச்சி கொம்பனை தப்பா புரிஞ்சிக்கிட்டு இருக்க, முதல்ல நீ கொம்பனை பாரு, தன்னால உன் மனசு மாறும் அவரை நீ ஏத்துக்குவ”
”பார்க்கத்தான் போறேன் இன்னிக்கே என் அப்பா கையால அந்த கொம்பன் சாகறதை பார்க்கப் போறேன்” என சொல்ல டிரைவர் கலகலவென சிரித்துவிட்டு மீண்டும் வண்டியை ஓட்டலானான்.
அவளுக்கு ஆத்திரமாக வந்தது, பக்கத்தில் அவளின் தந்தை சோர்வு மிகுதியில் எப்போது உறங்கினாரோ தெரியவில்லை இவ்வளவு உரையாடல்கள் நடந்தும் ஒன்றுகூட அவரின் செவியில் எட்டவில்லை, எப்படியோ அவர் நன்றாக உறங்கி எழட்டும் அவரின் கோபம் தணியட்டும், எதற்காக கொம்பனை கொன்று அவர் ஜெயிலுக்கு செல்ல வேண்டும் அதற்கு பதில் தன் பிரச்சனைக்கு காரணமான கொம்பனிடமே தீர்வு கேட்டால் என்ன என்ற எண்ணம் உதயமானது காவேரிக்கு, கூடவே கொம்பனை பார்க்க வேண்டும் என்ற ஆர்வமும் அதிகரித்தது. நேரம் ஓடிக்கொண்டிருந்தது காரின் வேகமும் குறையவில்லை. காவேரியின் மனதில் பல்லாயிரம் எண்ண ஓட்டங்கள் சிலந்தி வலை போல பின்னிக் கொண்டு அவளை இம்சித்தது. சண்முகமோ இன்னும் உறங்கிக் கொண்டிருந்தார்.
ஒருவழியாக ராஜபாளையம் வந்து நின்றது கார். டிரைவரே காரை நிப்பாட்டிவிட்டு திரும்பி