இன்று நிச்சயம் ஒருவரின் இறப்பு உறுதியாகும் அது யார் என்பதுதான் கேள்விக்குறி.
தந்தையிடம் பேசியதில் அவரின் மன ஓட்டத்தை புரிந்துக் கொண்ட காவேரிக்கு திக்கென்றது, இனி தந்தையிடம் பேசுவது வீண், தந்தையை காப்பாற்ற வேண்டும், கல்யாணமும் நடக்க வேண்டும் என்ன செய்வது ஏது செய்வது என யோசிக்கலானாள். அவளின் கையில் தாலி இருந்தது, அது அவளுக்கானது இதுவரை அவளுக்கு ஏற்பாடு செய்த 7 திருமணங்களுக்கும் இதே தாலிதான் வைக்கப்பட்டது, அப்போது இருந்து அது அவளின் கையில் இருந்தது, இப்போதும் அந்த தாலி அவளுக்கு சொல்லவொண்ணா கவலையைத் தந்தது. ஏன் தான் பெண்ணாக பிறந்தோம் என நினைத்தாள், அதை விட தான் ஏன் பிறந்தோம் என்றோம் நினைத்தாள்
நடக்கும் அசம்பாவிதத்தை தடுக்க என்ன செய்வது, பேசாமல் நாம் இறந்துவிடலாம் என்ற மடத்தனமான எண்ணத்தையும் நினைத்துப் பார்த்து தன்னையே திட்டிக் கொண்டாள், அவள் ஒன்றும் கோழையல்ல தந்தையின் பாசத்தில் சூழ்நிலை கைதியாகிப் போனாள்.
காரும் ராஜபாளையம் நோக்கி விரைந்தது. அவள் இதயம் தடதடவென அடித்துக் கொண்டது, சண்முகமோ உறுதியுடன் இருந்தார் கார் டிரைவருக்கு நடப்பது புரிந்தும் கொம்பனுக்கு எந்த ஆபத்தும் வராது என்ற நம்பிக்கையிருந்தது, அவனும் கொம்பனால் பல நன்மைகள் அடைந்தவன், அதனால் அவனும் கொம்பனுக்கு விசுவாசி ஆனால் காவேரி பாவம் அவளை நினைத்து வருந்தினான். டிரைவரின் வருத்தத்தைக் கண்ட காவேரிக்கு வியப்பாக இருந்தது
”அண்ணா எதுக்காக வருத்தப்படறீங்க, என் கல்யாணம் இந்த முறையும் நின்னுடுச்சின்னா இல்லை கொம்பனை நினைச்சா”
”கொம்பனை நினைச்சி எதுக்கு வருத்தப்படனும், அவரு ஆயிரம் யானை பலம் கொண்டவரு, எதிரிகள் எல்லாம் அவருக்கு தூசு”
”எதிரிகளை வெல்லலாம் ஆனா சொந்தங்களை வெல்லமுடியாது அண்ணா”