”அவர் எனக்கு வாழ்க்கை கொடுத்த தெய்வம், அவராலதான் நான் இந்த நிலைமையில இருக்கேன், அவருக்காக நான் என் உசுரையும் தருவேன்”
”என்ன மாப்பிள்ளை சொல்றீங்க”
”படிச்சிட்டு வேலை கிடைக்காம வெட்டியா சுத்திக்கிட்டு இருந்த என்னை கோச்சிங் க்ளாஸ்ல சேர்த்து அரசாங்க வேலைக்கான பரிட்சைகளை எழுத வைச்சி இப்ப நான் ஒரு விஏஓவா இருக்கேன்னா அதுக்கு காரணமே அவர்தான், கொம்பன் அண்ணா மட்டும் இல்லைன்னா நான்லாம் ஒண்ணுமில்லாத வெத்து காகிதமாதான் இருப்பேன், அவரால கிடைச்ச வாழ்க்கை இது, நானே எப்படி அவர் வாழ்க்கையைக் கெடுக்கறது, அவரோட முறைப்பொண்ணுதான் காவேரின்னு எனக்குத் தெரியாது, தெரிஞ்சிருந்தா சத்தியமா நான் இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டு இருந்திருக்க மாட்டேன், அவரை நான் என் கூட பிறந்த அண்ணனா பார்க்கிறேன், அவரோட முறைப்பொண்ணு காவேரியை எப்படி என்னால என் மனைவியா பார்க்க முடியும், என்னால அவருக்கு துரோகம் செய்ய முடியாது, இந்த கல்யாணம் நடக்காது” என உறுதியாகச் சொல்லிவிட சண்முகத்தின் இதயம் தடதடவென அடித்துக் கொண்டது. அவர் எது நடக்க கூடாது என நினைத்தாரோ அதுவே நடந்தது.
காவேரிக்கு என 6 முறை ஏற்பாடு செய்த திருமணங்கள் கூட இப்படித்தான் நின்றுப் போனது, கொம்பனால் வாழ்க்கையில் நலம்பெற்றவர்கள் அவனுக்கு துரோகம் செய்யக்கூடாதென விசயம் தெரிந்த உடனே திருமணத்தை நிப்பாட்டினார்கள், இம்முறையும் அப்படியே நடந்தது, அதற்காக கொம்பன் மீது தவறு சொல்ல முடியாது, அந்தளவிற்கு அவன் பலருக்கு நன்மை செய்திருக்கிறான், அவனால் நன்மையடைந்தவர்கள் அவனுக்கு விசுவாசிகளாக மாறிப்போனார்கள், அதுவே இப்போது சண்முகத்திற்கு பெரும் சிக்கலைக் கொண்டு வந்தது.
கல்யாணம் நடந்தே ஆக வேண்டும் என்ற உறுதியில் சண்முகம் அவர் பார்த்த மாப்பிள்ளையின் காலில் விழுந்தே விட்டார். கதறினார், அழுதார் தன் கண்ணீரால் அவனது பாதத்தை நனைக்கச் செய்தார், அப்படியிருந்தும் அவரின் கதறலுக்கு நியாயம் கிடைக்கவில்லை