“நீ எப்படி கொம்பன் கேரியரோட போன விசயத்தை கேள்விப்பட்டு வந்தியோ அதே போல நானும் வந்தேன் காவேரி அதை சாப்பிடறதுக்குள்ள தடுக்கலாம்னு நினைச்சேன் அதுக்குள்ள நீ முந்திக்கிட்ட”
”என்னங்க செய்றது நம்ம புள்ளை வாழனும்ல”
”புரியுது ஆனா இதை உன் மருமகள் கண்டுபிடிச்சிட்டா பெரிய பிரச்சனையாகும்”
”பார்த்துக்கலாம்ங்க இன்னிக்கு என் புள்ளை இவள்கிட்ட திட்டு வாங்காம இருப்பான்ல அது போதும் எனக்கு”
”அதுசரி மதியத்துக்கு சாப்பாடு கொண்டு வந்துட்ட ராத்திரிக்கு என்ன செய்வியாம்” என கேட்க அவளோ குழம்பினாள்
மறுபக்கம் காவேரியும் வேலைகளை முடித்த உடன் சாப்பிடச் சென்றாள் கேரியரைக்கண்டதும்
”பாவம் எவ்ளோ கஷ்டப்பட்டான்னு தெரியலையே எப்படியும் சுமாராதான் இருக்கும் சாப்பிடுவோம் வேற வழி” என நினைத்தபடியே கேரியரை திறந்து சாப்பிடத் தொடங்கினாள். சாப்பாடு ருசியாக இருக்கவே வியந்தாள்
”பரவாயில்லையே கொம்பன் நல்லாவே சமைச்சி வைச்சிருக்கான், இவ்ளோ திறமையிருக்கு ஆனா அந்த கோபம் மட்டும் இல்லைன்னா நல்லாதான் இருந்திருக்கும்” என பாராட்டிக் கொண்டே சாப்பிட்டு முடித்து எழுந்தாள்.
அருமையான சாப்பாடு உண்டதும் அதற்கு மேல் வேலை செய்ய அவளுக்கு பிடிக்கவில்லை. அசதியாக இருக்கவே என்னென்ன செய்ய வேண்டும் என வேலையாட்களுக்கு கட்டளையிட்டுவிட்டு நேராக வீட்டிற்கு வந்தாள்.