“தப்பு உங்க மேல இல்லையே, தப்பு செய்தது உங்க தாத்தா, அதுக்கான தண்டனையும் கிடைச்சிடுச்சி அவரும் இறந்துப் போயிட்டாரு, இனி இந்த ஊரோட நல்லது கெட்டது பார்க்க வேண்டியது நீங்கதான், ஊர் மக்களை அமைதிப்படுத்துங்க, இப்பவாச்சும் பிரிஞ்சிருக்கற ஊரை ஒண்ணு சேர்த்துவிடுங்க” என சொல்ல அகத்தியன் பலமாக யோசித்தான் அதைக் கண்ட நாச்சியாவோ
”இது வேலைக்கு ஆகாது நான் வேணும்னா போய் பேசட்டுமா”
”நீயா உன்னால எப்படி முடியும்”
”முடியும் நீங்க அனுமதி தந்தா”
”சரி செய் நான் உனக்கு அனுமதி தரேன்” என அனுமதி தந்தான்.
உடனே நாச்சியா வீட்டை விட்டு வெளியேறி மக்களிடம் பேசச் சென்றாள்.
இன்னும் ஊர் மக்கள் பிரிந்துதான் இருந்தார்கள், அவர்களின் முன் கம்பீரமாக நின்றாள். அவர்களோ அவளை ஏளனமாகப் பார்த்தார்கள்
”இதோ வந்துட்டா புது பணக்காரி, அந்த சங்கமேஸ்வரன் போலவே சொத்துக்காக பாவம் அந்த அகத்தியனை வளைச்சிப் போட்டுக்கிட்டா, ஏமாத்துக்காரி இவளால இன்னும் இந்த ஊர் எவ்வளவு நாசமாக போகுதோ” என மேலவீதி ஆட்கள் திட்ட உடனே கீழவீதியாட்களும்
”ஆமா சரியா சொன்னீங்க ஊரை ஒண்ணாக்கனும்னு இவங்க போட்ட ஆட்டம் கொஞ்சமா நஞ்சமா நம்மாளுங்களே நமக்கு துரோகம் செய்துட்டாங்க, இனிமேலும் இவங்க பேச்சைக் கேட்டா அவ்ளோதான் நாம நாசமா போயிடுவோம்”
”இவங்க பேச்சை கேட்கலைன்னா நம்மளை கொன்னு மண்ல புதைச்சிடுவாங்க, அவ்ளோ மோசமானவங்கதானே இவங்க”