ஆனாலும் அவர்கள் பேசியதை அவள் நன்றாகவே கேட்டிருந்தாள். செல்லப்பாவின் தில்லு முல்லு நாளுக்கு நாள் அதிகமாவதை நினைத்து நொந்தும் போனாள். இது குறித்து வெங்கடேசனிடம் சொல்ல வேண்டும் என காத்திருந்தாள்.
மறுநாள் ஞாயிறு அதனால் வெங்கடேசன் வீட்டில் இருக்க, ஆனந்தியோ தடல்புடலாக சமையல் செய்து கேரியர் கட்டிவிட்டு தன் கணவரின் முன் புன்னகையுடன் நின்றாள், அவளின் அலங்காரமும் கையில் வைத்திருந்த பெரிய கேரியரைக் கண்டதும் புரிந்துக் கொண்டான்
”சன்டே ஒரு நாள்தான் லீவு இன்னிக்கும் என்னை வேலை வாங்கனுமா, ஆனந்துக்கு ஒரு போன் போடு அவனே வருவான்”
”ப்ச் வாங்களேன் என் பிறந்த வீட்டை பார்த்து எத்தனை நாளாச்சி, எப்படியிருக்குன்னு பார்த்துட்டு வரலாம் பாவம் ஆனந்த் என்னத்த சாப்பிடறானோ, எப்படியிருக்கானோ ரொம்ப கவலையா இருக்குங்க”
”வேணாம்மா நீ கவலைப்பட்டு கண்ணீர் விடாத எல்லாம் அவன் நல்லபடியாவே இருப்பான்”
”ஒரு எட்டு பார்த்துட்டு வரலாமே ரூபா விசயத்தில இருந்து அவன் இன்னும் மீண்டு வரலை தப்பான முடிவை எடுத்துடப்போறான்”
”யாரு அவனா சான்ஸே இல்லை, நேத்தே அவனை கவனிச்சேன் நிறைய மாறியிருக்கான், ரொம்ப தெளிவா இருக்கான், திரும்பவும் தப்பான முடிவு எடுக்க மாட்டான்“
”ப்ச் வாங்களேன் போய் பார்த்துட்டு வரலாம்“
”விடமாட்டியே சரி சரி கிளம்பு” என அவளை அழைத்துக் கொண்டு சென்றான் வெங்கடேசன்.