”வாங்க சார் போகலாம்” என ஆசையாக அழைக்க வேறு வழியின்றி அவரை தன் காரில் ஏற்றிக் கொண்டு க்ளப்புக்குச் சென்றான்.
அந்த க்ளப்பே ஒரு திருமண மண்டபம் போல இருந்தது, அதற்குள் அங்கு நிறைய பேர் வந்திருந்தார்கள், வந்தவர்களில் பலரும் பந்தயம் கட்டி விளையாட வந்தவர்களே, அவர்களில் ரோஜா இருந்தாள் அவளை அவ்விடம் கண்டதும் அதிர்ச்சியில் உறைந்துப் போனான் ஆனந்த். செல்லப்பாவோ
”பார்த்தீங்களா சார், குடும்ப பொண்ணு யாராவது இது போல இடத்துக்கு வருவாங்களா, இவள் சரியில்லை சார், அதான் இந்த மாதிரி இடத்திற்கு வந்திருக்கா, சரியான கேடுகெட்டவள் சார்” என சொல்ல ஆனந்திற்கு ஒரு புறம் கோபமும் இன்னொரு புறம் வருத்தமும் ஏற்பட்டது நேராக அவளிடம் சென்றான்
அதற்குள் அவள் சீட்டுக்கட்டு விளையாடி முடித்து வெற்றியும் அடைந்து அந்த மகிழ்ச்சியில் திளைத்து அவள் சம்பாதித்த பணத்தை எடுத்துக் கொண்டிருக்க, அவளின் பக்கம் வந்து நின்றான் ஆனந்த், அவனின் வரவை அவள் எதிர்பார்த்திருப்பாள் போல உடனே அங்கிருந்தவர்களிடம்
”ஹலோ ப்ரெண்ட்ஸ் மீட் மிஸ்டர் ஆனந்த், எங்க புது முதலாளி” என பவ்யமாகச் சொல்ல அங்கிருந்தவர்கள் ஆனந்தை பார்க்கவும் சட்டென ஆனந்த் தன் கோபத்தை மறைத்துக் கொண்டு சின்ன சிரிப்புடன் அனைவரையும் பார்த்து ஹாய் ஹலோ என பேச அவர்களும் அவனிடம் நட்பாக பேசினார்கள்.
அதற்குள் அவள் அடுத்த ஆட்டத்திற்கு தயாராக அவளிடம் வந்தான் செல்லப்பா
”ரோஜா எனக்கும் இந்த விளையாட்டை சொல்லிக் கொடேன்“
”சொல்லிதந்தா நீங்க ஜெயிச்சிடுவீங்களே, சாரி சார் உங்களுக்கு பணம் வேணும்னா நீங்களே விளையாட கத்துக்குங்க”