”விடுங்க தாத்தா அவங்க தினமும் இப்படிதானே நடந்துக்கறாங்க, அதையெல்லாம் பார்த்து கோபப்பட்டு உங்க பிபி அதிகமாகி உடம்பு கெடப்போகுது”
”இவனுங்க அக்கிரமத்துக்கு எப்பதான் முடிவு வருமோ“
”கூடிய சீக்கிரம் வரும் தாத்தா நம்ம வீட்டையும் பங்களா போல கட்டிட்டா அப்புறம் அவங்களால நம்மளை விரட்டமுடியாது”
”என்னவோ போம்மா நாளுக்கு நாள் இவனுக்கு தொல்லை தாங்க முடியலை” என சொல்ல அதைக்கேட்டு மென்மையாக சிரித்தவளுக்கு ஏதோ ஒரு உணர்வு தோன்றி படாரென திரும்பி பார்த்தாள் அங்கு ஆனந்த் ஆமை வேகத்தில் காரை ஓட்டியபடி வருவதைக் கண்டு திகைத்து நன்றாக அவனைப் பார்த்து அழகாகச் சிரித்தாள்.
பாவாடை தாவணியில் அன்று பூத்த மலர் போல இதமாக சிரித்தவளைக்கண்டு ஒரு நொடி மனம் தடுமாறிதான் போனான் ஆனந்த், அதில் எங்கே தனது கட்டுப்பாடு கட்டவிழ்ந்து ஓடிவிடுமோ என பயந்து வண்டியை வேகமாக ஓட்டிக் கொண்டு பறந்தான், அதைக்கண்ட ரோஜாவோ கலகலவென சிரிக்க தாத்தாவிற்கு ஒன்றும் விளங்கவில்லை.
ஆபீஸ் வந்ததும் பார்த்தான் இன்னும் சிலர் வரவில்லை, என்னவென பார்க்க ஆபீஸ் டைம் இன்னும் ஆரம்பிக்கவில்லை ஊருக்கு முன்பு இவன் வந்து சேர்ந்துவிட்டான் இவன் வந்த பின்பே செல்லப்பா வர அவனோ அவரிடம்
”என்ன செல்லப்பா நீங்களே இப்படி லேட்டா வரலாமா, மாமா வேற இல்லை நாமதானே ஆபீசை பத்திரமா பார்த்துக்கனும்”
”மன்னிச்சிங்குங்க சார் வர்ற வழியில எவி ட்ராப்பிக்”
”சரி சரி” என சொல்லிவிட்டு தன் கேபினுக்குச் சென்று தனது இருக்கையில் அமர்ந்தான், கடிகாரத்தைப் பார்த்தான், ஒவ்வொருவராக ஆபீசுக்குள் வந்த வண்ணம் இருந்தார்கள்