அன்றைய இரவு…
தன் காதலின் உறுதியை மறைமுகமாக சொல்லி விட்ட திருப்தியில் நிரஞ்சன்….
கார்த்திக் பேசி விட்டான் என்ற திருப்தியில் சந்தியா….
தனது வீடு, தனது அறை, தனது படுக்கை என்ற திருப்தியில் மது…
சந்தியாவை சீரழிக்க போகிறோம் என்ற திருப்தியில் பாண்டியன்...
என இவர்களுக்கு நிம்மதியான இரவாகி போனது… ஸ்ரீமா வை தவிர..
இரண்டு நாட்களாக மனதிற்குள் ஏகப்பட்ட குழப்பங்கள்…. “அந்த கார்த்திக் எப்படிப் பட்டவன்? அவனை நல்லவன் என தங்கை நம்புகிறாளே! நல்லவன் என்றால் இப்படி ஒரு பரிசை குடுப்பானா? அவள் காதலிக்கிறாளோ….தெரிந்தால் எதிர்ப்பு வரும் என்று மறைக்கிறாளோ?”
ஒரு புறம் தங்கையை சந்தேகப் படுகிறோமே என்று தன்னையே கடிந்தாலும், கல்லூரியில் பணி புரியும் அவள் காதலில் மதியிழக்கும் மாணவிகளை கண் கூடாக பார்க்கிறாளே! சென்ற ஆண்டு அவள் வகுப்பில் அவளுக்கு மிகவும் பிடித்த மாணவி குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டது கண் முன் பூதாகரமாக வந்து நின்றது….காதல் போர்வையில் அந்த பெண்ணிற்கே தெரியாமல் எடுக்கப்பட்ட படம், அவள் உடல் மக்கிப் போனாலும் இணைய தளத்தில் உயிரோடு உலா வந்ததை எண்ணி மனம் பதறியது.
எங்கோ நடக்கும் கொடுமை தான்… ஆனால் ஒரு சிறிய ப்ரிச்சனை என்றாலும் மனம் இந்த சம்பவங்கள் எல்லாம் தனக்கோ தனது குடும்பத்தாருக்கோ நடந்து விடுமோ என பயந்து தவிக்கிறதே! இது எச்சரிக்கை உணர்வா? இல்லை மிகைப்படுத்தப்படும் மன பயமா?
மே 23, புதன்கிழமை
அடுத்த நாள் முழுவதும் கார்த்திக்கின் அழைப்பு வரவில்லை. அவன் அழைப்பை எதிர்பார்த்தாலும், அப்படி அழைத்தால் அவன் பேச்சிலும், பார்வையிலும் இருந்து தன்னை மறைத்து தப்பி ஓடி ஒளிய வேண்டுமே என்று இருந்தது அவளுக்கு. காலையில் சக்திக்காக யோகா, சௌபர்ணிகாவிற்காக ஓவியம், சதாசிவத்திற்காக செஸ், கார்த்திக்கிற்காக அவன் கனவிற்காக தனது பல மடங்கு உழைப்பு, அன்பு இல்லம், இரவில் பாத்திரம் விளக்கி, துணி துவைப்பது என லக்ஷ்மியின் வேலைகளை சிறிது தான் எடுத்து செய்வது…இதனிடையே சக்தியுடன் அரட்டை.. என அந்த வாரத்தில் அவள் பொழுது அதிவேகமாக கழிய துவங்கி இருந்தது.
யோகா வகுப்பு முடிந்தவுடன் சக்தியையும் கார்த்திக்கின் வீட்டிற்கு அழைத்துச் சென்றாள். சக்தி, “ப்ராணிக் ஹீலிங்” எனப்படும் ஆழ் மனசக்தியை அடிப்படையாகக் கொண்ட நோயாளியை தொடாமலே சிகிட்சை அளிக்கும் முறையில் பயிற்சி எடுத்தவள். அவள் ஏற்கனவே லக்ஷ்மிக்கு இரு நாட்களாக இதை செய்து கொண்டிருந்ததை பார்த்த சந்தியா, சதாசிவத்திற்கும் செய்தால் என்ன என்று தோன்ற யோகா வகுப்பு முடிந்ததும் சக்தியை அழைத்து சென்றாள். அவள் ஓவியம் தீட்ட செல்ல, சக்தி சதாசிவத்திற்கு தனது சிகிச்சையை ஆரம்பித்தாள்.
ஒரு பாத்திரத்தில் கள் உப்பு போட்ட தண்ணீரை வைத்து, சதாசிவம் முன் உட்கார்ந்து தியானித்து சில மந்திரங்களை முணுமுணுத்துக் கொண்டே கைகளை அசைத்து சிகிட்சை அளித்துக் கொண்டிருக்கும் பொழுது, அங்கே வந்த மது அதை ஒரு ஓரமாய் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். சக்தி முடித்ததும், மதுவிற்கும், சதாசிவத்திற்கும் அந்த உப்பின் மீது படிந்திருந்த தூசியை காண்பித்து, “இது கெட்ட ப்ராணா” என்று சொல்ல, மது ஏதோ மாயாஜால நிகழ்ச்சியை பார்த்து விட்ட தோரணையில் வாயை பிளந்தாள்.
“சூப்பர் சக்தி...சரி ஏன் கூட வா” என்று அவளது அறைக்கு அழைத்து சென்றாள். அங்கு சென்றதும், “சக்தி, என்னை ஒருத்தன் எட்டு வருஷமா லவ் பண்றானாம்...நீ ஜீபூம்பா போட்டு கண்டுபிடிச்சு சொல்றியா?” என கேட்க,
இடுப்பில் கை வைத்துக் கொண்டு அவளை ஏற இறங்க பார்த்து, “என்னைப் பாத்தா உனக்கு மண்டை ஓடு மந்திரவாதியாட்டம் தெரியுதா? நான் பண்றது ப்ராணிக் ஹீலிங் கேள்விப் பட்டது இல்லையா?” என கேட்டாள் சக்தி.
“ப்ராணிக் ஹீலிங்கா?? இப்போ தான் கேள்விப் படுறேன்.” என்று அந்த சிகிச்சை முறை பற்றி விசாரித்து கேட்டறிந்தாள். அப்பொழுது பிந்தியா தொலைபேசியில் அழைத்து அவளை ஸ்கைப்பிற்கு வரச்சொல்லி அழைத்தார். அவள் பேசட்டும் என கிளம்பிய சக்தியை விடாமல் அழைத்து,
“நிரு நாம ஸ்லீப் ஓவர் அன்னைக்கு நிருவை ஓட்டுனோம்ல அதை மூணு குரங்குங்க சேர்ந்து என்னை புன்னாக்கிடுச்சுன்னு ஆண்ட்டிகிட்ட சொல்லியிருக்கான். நேத்து சந்தியாவை பாத்துட்டாங்க. இன்னைக்கு உன்னை காட்டிடுறேன் வா…”, என அழைத்தாள் மது.
“பாக்க ஊமையா இருக்கார் நிரு...இப்படி எல்லாம் வாய் பேசுவாரா?”, நம்ப முடியாமல் விழித்தாள்.
“நிரு ஷை டைப் தான்… ஆண்ட்டிகிட்ட பயங்கர க்ளோஸ்.. அதான் மனசுல உள்ளதை சொல்லியிருக்கான். ஆனா, ஆன்ட்டி சோசியல் பட்டர்ப்ளை!!! எல்லாத்தையும் புட்டு புட்டு வைச்சிட்டாங்க. ” என்றாள் சந்தோஷம் ததும்ப...
பிந்தியாவுடன் பேசி முடித்ததும், சக்தியிடம் இதோ வந்து விடுகிறேன் என்று சென்று ஒரு பத்து நிமிடங்கள் கழித்து கையில் சில நொட்டு புத்தகங்களோடு வந்தாள் மது.
“மது, இதெல்லாம் என்ன? “ என்று கேட்டுக் கொண்டே கையில் உள்ளதை நோட்டம் விட்ட சக்தி,
“அட, ஆட்டோகிராப் புக்” என்று சக்தி அதை திறக்க முயற்சிக்க, “மத்தவங்க ஆட்டோகிராப் புக்கை படிக்க கூடாது” என்று படக்கென பிடுங்கினாள் மது. “இப்போ எதுக்கு உனக்கு மலரும் நினைவுகள்?” என சக்தி கேட்க,
“கடாவை பிடிக்க அட்ரெஸ், போன் நம்பர் எல்லாம் கண்டு பிடிக்கணுமே” என்றாள் மது.
“எதுக்கு? உங்க ஊரு அய்யனாருக்கு கடா வெட்டிணும் நேந்து இருக்கீங்களா?” கிண்டல் செய்தாள் சக்தி.
“கடான்னா அந்த கடா இல்லை... கடோத்கஜன்.. அவன் தான் என்னை எட்டு வருஷமா லவ் பண்றான்னு கெஸ் பண்றேன்” என்று சொல்லிக் கொண்டே பத்தாவது ஆட்டோகிராப் புத்தகத்தில் அவனது போன் நம்பரை “கடோத்கஜா….கடோத்கஜா…” என ஜபித்துக் கொண்டே தேட, அந்த நேரம் அங்கே வந்த சந்தியா, மதுவின் தீவிர தேடலைப் பார்த்து சக்தியிடம்,
”என்னடி நடக்குது இங்க”, என கேட்க,
“ஜேம்ஸ் பான்ட் துப்பு துலக்குறாங்கலாம்… எட்டு வரும் அவங்களை காதலிச்சது ஒரு கடாவாம்… அந்த கடாவை பொலி போட நம்பரை தேடிக்கிட்டு இருக்காங்க” என்று அலுத்துக் கொள்வது போல சொன்னாள்.
“காட் இட். சக்தி… நம்பர் கூட 007 ல முடியுது..” என்று அவனது நம்பரை கண்டுபிடித்ததை துள்ளிக் குதித்துக் கொண்டு போனில் அழைத்தாள்..
“இந்த எண் தற்சமயம் உபயோகத்தில் இல்லை” என செய்தி வர, சோர்ந்து போனாள் மது. “கடா பேஸ்புக், ட்விட்டர்ல எதுலயும் இல்லை. அவன் டென்த்க்கு பிறகு எங்க ஸ்கூல்ல படிக்கலை. இந்த காதி அவன் என்னை பாலோ பண்றான்னு அடிச்சு துவைச்சதுல அவன் ஊரை விட்டே ஓடிட்டான். சந்தியா நீ சொன்னாலும் சொல்லாட்டினாலும் அவனை கண்டுபிடிச்சு இதெல்லாம் பண்ணாத, தப்புன்னு அட்வைஸ் பண்ணாம விடமாட்டேன்.“ உறுதியாக சொன்னாள் மது.
அதற்கு சந்தியா ஏதோ சொல்ல வர, “நீ பேசி ஏதாவது குழப்பாத! ஓவரா அலட்டுனேல …அது யாருன்னு நானா கண்டுபிடிச்சிட்டேன் பாத்தியா? அதே மாதிரி அவன் எங்க இருக்கான்னு கண்டுபிடிச்சு , அவனுக்கு நான் குடுக்கிற அட்வைஸ்ல அவன் தெய்வமேன்னு என்னை தொட்டு கும்மிடுவான் பாரு” என்று மது பெருமை அடிக்க,
சந்தியா “முருகா” என்றும், சக்தி, “நாராயணா” என்றும் தத்தம் இஷ்ட தெய்வங்களை அழைத்து மதுவிடமிருந்து காப்பாற்றுமாறு மானசீகமாக தொட்டு கும்மிட்டனர்.
“மது நீ தெய்வம்” என்று மானசீகமாக தொட்டு கும்பிட்டான் அவன்…. அந்த அவன் வேறு யாருமில்லை கார்த்திக் தான். புதன் காலை போனின் அலாரம் அடிக்க சோர்ந்த கண்களை திறக்காமலே தட்டி தடவி போனை எடுத்து தடவி...தடவி அதன் வாயை அடைத்தான்…
அன்று க்ரூப் சேட்க்கு மது அழைத்ததால் தானே சந்தியா பார்வையின் மொழி அறிந்தான்...நேற்று காலை அவனுக்கு அரிதாய் கிடைத்த ஐந்து நிமிட இடைவேளையில் அவன் பார்வையில் சிவப்பேறிய கொலு கொலு கன்னங்கள் அனுப்பிய சேதி அவன் பொறுமையை சோதித்தன. எத்தனை நாள் தான் போனிற்கும், கணினிக்கும் முத்தமிட்டுக் கொண்டிருப்பது….
அவளை அணைத்த போது கிடைத்த நிறைவு...நினைக்கும் போதே உற்சாகம் ஊற்றெடுத்தது…அவள் ஸ்பரிசம் கொடுக்கும் திருப்தி… காதலுக்கும் காமத்திற்கும் உள்ள எல்லை கோடு…அன்று செயலிலும்...இன்று நினைவிலும்...அந்த எல்லையை தாண்டி குதிக்கவில்லை மனது!!!