“இப்படி கலைச்சு விடுறதுக்கு அக்காவுக்கும் தங்கைக்கும் சொல்லியா கொடுக்கணும்… உங்க கண்ல மண்ணை தூவி நேஹா கால்ல சாஸ்டாங்கமா விழுந்துடுவோம்ல. முக்கியமான விஷயம்...நானும் நேஹாவும் இந்தியாவுக்கு அடுத்த மாசம் வர்றோம்”, சரண்.
“என்ன திடீர்ன்னு இந்தியா வர்றீங்க?”, ஆர்வமாய் வினவினாள்.
“நேஹா பேரண்ட்ஸ்க்கு திதி குடுக்க வர வேண்டியிருக்கு”, சொல்லும் போதே கவலை இழையோடியது.
“நேஹா எப்படி இருக்கா இப்போ? ஹெல்த் ஓகேவா?”, அவன் சொன்னதின் எதிரொலியாக இந்த விசாரிப்பில் சோகம் ஒட்டிக் கொண்டது. அவள் மனதிலும் தான்… சென்னையில் நடந்த கோர கார் விபத்து..மனக் கண்ணில் விபத்தில் இருந்து போஸ்ட் மார்ட்டம் செய்யப்பட்டு வந்த நேகாவின் தாய் தந்தையரின் உடல்கள் கண் முன் வந்தன…சரண் மருத்துவனாய் எத்தனை பிரேதங்களை பார்த்திருப்பான். அவனும் மனிதன் தானே!
முந்தைய நாள் பார்த்தவர்கள் கண்முன் பொட்டலமாகி கிடப்பதை தாங்க முடியாமல் கதறினான்….அவர்களாவது பிணமாகி விட்டனர்….ஆனால். நேஹா உயிருள்ள பிணமாய் கோமா நிலையில் படுக்கையில் கிடந்தாள்...மண்டை ஓட்டை திறந்து ஆபரேஷன் செய்து பார்த்தது பலன் அளிக்கவில்லை இருந்தாலும் தொட்டால் உணரும் திறன் மட்டும் பாதிப்படையாமல் இருந்தது…
அவள் கன்னத்தில் ஏதாவது எழுதினால் அதை உணர்ந்து முகம் மாற்றம் தரும்… அவள் பெற்றோரின் பெயரை ஒவ்வொரு எழுத்தாக எழுதினால் கண்ணீர் வடியும்… மற்ற எந்த அசைவும் அவளிடம் இருக்காது….அதையே துருப்பு சீட்டாக்கி குணப்படுத்த சிறு வாய்ப்பு இருக்கிறதென தெரிய வர, சரணுக்கு பக்கபலமாக இருந்தது சந்தியாவும் அவள் நண்பர்களும் தான்! அவர்கள் துணையோடு இடைவிடாத தீவிர பயிற்சியில் நேஹா படிப்படியாக தேறி, இப்பொழுது இருவரும் மேற்படிப்பிற்கு அமெரிக்காவில்!
“ஹ்ம்ம்….ரொம்ப பெட்டர்….நீயும் உன் ப்ரண்ட்ஸ்ஸும் பண்ண உதவியை மறக்கவே மாட்டோம் மந்தி! எனக்கு நேகா திரும்ப கிடைத்ததுக்கு நீங்களும் ஒரு காரணம்.”, நன்றியுணர்ச்சியில் கூறினான்.
“நேஹாக்கு மறு பிழைப்பு கொடுத்ததுக்கு உங்க நன்றியை முருகனுக்கு சொல்லுங்க. வைகாசி விசாகத்துக்கு முருகன்ட்ட கும்பிட்டா திருமணம் சீக்கிரம் நடக்கும், புத்திர பாக்கியம் கிடைக்கும்ன்னு பக்தி மலர்ல போட்டு இருந்தாங்க. பூமா கூட கோவிலுக்கு போனா உங்க கல்யாணத்துக்கு முருகனை வேண்டிக்கோங்க”, விபத்தில் பெற்றோரை கண்முன் இழந்த பாதிப்பில் இருந்து நேஹா இன்னும் வெளி வரவில்லை...அதற்காக காத்திருக்கும் சரணின் மனதறிந்து சொன்னாள்.
“அப்படியா விஷயம்! அதுக்கு தான் காலங்ககாத்தால அப்ளிகேஷன் போட பக்தி பழமா கோவிலுக்கு கிளம்பிட்டியா? இப்படி அப்ளிகேஷன் போட்டா வொர்க் அவுட்டே ஆகாது. நாக்குல வேலை குத்தி ட்ரை பண்றியா?...முருகன் மனசு இறங்கி உனக்கு ஒரு பூரிக்கட்டையை அனுப்பி வைப்பார்”, என பேச்சை மீண்டும் விளையாட்டு போக்கில் மாற்றினான்..
“உங்களுக்கு மைதா மாவு கிடைத்த கொலுப்பு…. “, நக்கலடித்தாள்.
“உனக்கு பூரிக்கட்டை கிடைக்காத கடுப்பு”, சரணும் பதிலடி கொடுத்தான்.
“யார் சொன்னா? எனக்கு பூரிக்கட்டைகிட்ட இருந்து தான் செகன்ட் கால் வருது அப்புறம் பேசுறேன் பை..” வேகமாக இணைப்பை துண்டிப்பதில் குறியாக இருந்தாள்.
“பூரிகட்டையாக எண்ணப்பட்டவனின் கடைசி கால் அதுன்னு நினைக்கிறேன்…“ சொல்லிவிட்டு இணைப்பை துண்டிக்கப் போக,
“உங்களை….அப்புறமா கவனிக்கிறேன்...பை...பை” என்று காத்திருப்பில் போட்டிருந்த கார்த்திக்கின் அழைப்பை அவசரமாக எடுத்தாள் சந்தியா.
“ஹே சந்தியா”, ஆசையாக அழைத்த கார்த்திக்,
“அரை மணி நேரமா உங்களை பிடிக்க ட்ரை பண்றேன் பாஸ் முடியலையே!”, என்றான் ஏக்கமும் அலுப்பும் கலந்து!
“ஓ...அது பூ கிட்ட பேசிகிட்டு இருந்தேன். ரொம்ப நேரம் ட்ரை பண்ணீங்களா?”, என்றாள் நெஞ்சுக்குள் அவனை காக்க வைத்த பதை பதைப்பு!
“லேட் நைட் ஆச்சு...இன்னுமா தூங்காம இருக்காங்க?”, கார்த்திக்.
“இல்ல அவ படுக்க போயிட்டா...நான் சும்மா வசூல் ராஜாகிட்ட பேசிகிட்டு இருந்தேன்”, என அவள் பேச்சுவாக்கில் சொல்லி விட,
அத்தனை நேரம் அவளிடம் பேச காத்துக் கிடந்தவன், அவள் உதிர்த்த வசூல் ராஜா என்பதில் சினம் உண்டாக, காட்டமானவன்,
“என்னை விட அவன் உனக்கு முக்கியமா போயிட்டானா?”, அடிவயிற்றில் இருந்து ஓங்கிய குரலில் கத்தியே விட்டான்...
சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில் பதற வைக்கும் சத்தத்துடன் வெளி வந்த அவன் வார்த்தைகள் கூறிய அம்பாக அவள் மனதிற்குள் அதிவேகத்தில் பாய்ந்து தாக்குதல் நடத்த, வேதனையோடு “அப்படி இல்லை கார்த்திக்” தயங்கியவாறு ஆரம்பிக்கும் போதே,
இடை புகுந்த கார்த்திக், “ஐ நீட் அன் ஆன்ஸ்வர்..உனக்கு யார் முக்கியம்? அவனா? நானா?”, கோபம் சற்றும் குறையாமல், பல்லை கடித்த கொண்டு கேட்டான்..
சந்தியாவிற்கோ கண்கள் குளம் கட்டியது.
“எனக்கு என்னை பெத்தவங்க தான் முக்கியம்... அவங்களை மீறி யாரையும் முக்கியமா நினைக்க முடியாது” நிதானமாக சொல்ல நினைத்தவளையும் மீறி அழுகையில் நனைந்து நைந்து போய் ஒலித்தது அவள் குரல்….சொல்லிவிட்டு சட்டென்று தொலைபேசியை ஆப் செய்தவள், தாவணியின் தலைப்பால் கண்ணீரை துடைத்து கொண்டே கோவிலுக்குள் சென்றாள்.
இத்தனை நாள் சொல்ல நினைத்து மருகிய விஷயத்தை அவனிடம் சொல்லியாயிற்று...இருந்தாலும் அவன் எப்படி எடுத்துக் கொள்வானோ? மீண்டும் கண்ணீர் வந்தது. இவனுக்காக ஏன் குடம் குடமாக அழுகிறோம் என அவளுக்கே அவள் செய்கை பிடிக்கவில்லை!
பிறந்த நாள் விழா கொண்டாடும் அழகனை அழுகையால் அபிஷேகித்தாள்… “..முருகா...என்னை அழுது உருக வைக்க உனக்கு போட்டியா வந்தவனை என்ன செய்ய?” என்று ஆரம்பித்து வடிவு சாபம், பூமா குழந்தை, லக்ஷ்மியின் உடல்நிலை என தனது கவலை எல்லாம் வடிவேலினிடம் கண்ணீராய் கொட்டி வடித்தாள். எப்பொழுதும் அவனிடம் சொல்லி எல்லா பாரத்தையும் இறக்கி விட்டால் ஒரு நிம்மதி பரவும்..இன்றோ இன்னும் மனது அடங்கவில்லை. ஏதோ உறுத்தல் இருந்து கொண்டே இருந்தது.
ஆட்டம் தொடரும் ...
{kunena_discuss:610}