" சுபா, இன்னைக்கு ஒரு ஆடை நான் மர்டர் பண்ண போறேன் " என்றபடி கிருஷ்ணன் ரகுராமை துரத்த, நித்யாவும் சுபாவும் அவனுடன் இணைந்து அனைவரும் தோட்டத்திற்கு ஓடினர். அவர்களை பார்த்து சிரித்துகொண்டிருந்த மீரா அருகில் சிவகாமி அமர்ந்தார்.
" இப்படியே இரு மீரா ... சிரிச்சுகிட்டே இரு ...... " என்றார்.. அவரின் கனிவில் கண் கலங்கியவள்,
" எனக்கும் இப்படி ஒரு குடும்பம் இருந்தி..........." என்று முடிப்பதற்குமுன் அங்கு வந்த அபிராமி
" இது உன் குடும்பம் மீரா ... இதுதான் உன் குடும்பம் " என்று அழுத்தமாய் சொல்லி ஆதரவாய் அவளை அணைத்து கொண்டார் .
" அண்ணா அந்த சீரியலை ஆப் பண்ணிட்டு இங்க பாருங்க " என்று சந்திரப்ரகாஷ் அவர்களை கேலி செய்து சூழ்நிலையை சகஜமாக்க
" நீ வேற சந்துரு, கண்ணுதான் டிவி மேல ... பட் என் கவனம் எல்லாம் இங்க நடக்குற சீரியல் மேலதான் " என்று பெரிதாய் சிரித்தார் சூர்ய பிரகாஷ்.
அன்றைய இரவு ஒவ்வொருவருக்கும் ஒவ்வோர் உணர்வில் முடிந்தது.
வாரநாள் என்பதால், ஏற்கனவே முடிவு செய்தது போல, போனில் பேசாமல், மெசேஜில் கொஞ்சம் நேரம் கொஞ்சிவிட்டு உறங்க சென்றனர் நம் காதல் குயில்கள் அர்ஜுனனும் சுபத்ராவும். மீராவும் நித்யாவும் சுபத்ராவின் அறையிலே தூங்குவதாய் முடிவெடுத்ததால் அதிக நேரம் அர்ஜுனனுடன் செலவழிக்க முடியவில்லையே என்ற ஏக்கத்திலே உறங்கினாள் சுபத்ரா.
தன்னவனின் குடும்பத்தில் தானும் ஓர் அங்கமானதை நினைத்து நிம்மதியில் மீரா கண் உறங்கினாள் .
இன்றுதான் தனது வீடே முழுமை பெற்றதாய் உணர்ந்து மகிழ்வுடன் கண் அயர்ந்தான் கிருஷ்ணன்.
நாளை ஆபீசில் பேச வேண்டிய முக்கியமான விஷயங்களையும் தன் சந்தேகங்களையும் கேட்டு கொண்டிருந்த ஜானகியை செல்லமாய் திட்டிவிட்டு, எப்போதும்போல் ஒரு பாடல் அனுப்பினான் ரகுராம்.. இனி வரும் நாட்களில் நிச்சயம் அவளின் மனம் மாற்றுவேன் என்று நிம்மதி அடைந்து உறங்கினான்.
" ராம், லைப் ல ஒரு மீனிங் கிடைச்சிருக்கு ராம் ... ரகு என்னை நம்பி கொடுத்த வேலையை நான் பொறுப்பா செய்வேன்..நீங்கதான் என் கூடவே இருக்கணும் " என்ற கோரிக்கையுடன் உறங்கினாள் ஜானகி.
" இனிமேலாவது நம்ம பிள்ளைங்க லைப் நல்ல படியா செட்டல் ஆகணும் .." என்ற வேண்டுதலுடனும் நம்பிக்கையுடனும் உறங்கினர் பெரியோர் அனைவரும்.
இந்த லூசுங்களை எல்லாம் ஜோடி சேர்த்து முடிச்சு நாம கல்யாணம் பண்ண இன்னும் 30- 40 வருஷம் ஆகிடும் போலையே, என்று எண்ணிய நித்யா அவளையும் அவன் கற்பனை செய்து வைத்துள்ள தன் வருங்கால ஹீரோவையும் நினைத்து பார்த்து உறங்கிபோனாள்.
இதில் உறங்காமல் இருந்தது நம்ம அர்ஜுன் மட்டும்தான் ... தினமும் சுபாவுடன் அதிக நேரம் பேசியதாலோ என்னவோ இன்று அவளை நினைத்து உறங்காமல் அவன் மனம் முரண்டு பிடித்தது.
பூங்காற்றிலே உன் சுவாசத்தை
தனியாக தேடி பார்த்தேன்
கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே
அதை தேடி தேடி பார்த்தேன்
உயிரின் துளி காணும்முன்னே
என் விழி உன்னை காணும் கண்ணே
என் ஜீவன் ஓயும் முன்னே ஓடோடி வா
அந்த ஒரே பாடலை மீண்டு மீண்டும் கேட்டுகொண்டே எப்போது உறங்கினான் என்றே தெரியாமல் உறக்கத்தில் ஆழ்ந்தான் அர்ஜுனன்.
அந்த உயரமான மலை பிரதேசத்தில் குளிர் காற்றை எதிர்கொள்ள முடியாவிடுனும் தன் தோழிகள் வற்புறுத்தியதால் அவர்களோடு இணைந்து நடந்தாள் சுபத்ரா.
" ஹேய் போட்டோ எடுக்கலாம் ...வாங்க " என்று ஸ்வாதி சொல்ல, தோழிகள் அனைவரும் பிரிந்து ஒவ்வொரு திசையில் நின்று கொண்டு படம் பிடித்தனர். ( இந்த செல்பி (selfie) வந்தாலும் வந்தது ஆளாளுக்கு கேமராவுடன் சுத்துறாங்க ப்ப்பா)
அவர்களை வேடிக்கை பார்த்துக்கொண்டே நடந்த சுபத்ரா அந்த மலையின் உச்சியில் தான் நடந்து கொண்டிருப்பதை அப்போதுதான் பார்த்தாள். ஏற்கனவே கொஞ்சம் மயக்கமாய் இருப்பதாக சொன்னவள் , தான் இருக்கும் இடத்தின் உயரத்தை உணர்ந்ததும் , தலை சுத்தி , கால் இடறி அங்கிருந்து தவறி விழுந்தாள்.
" சுபத்ரா..ஆஅ..ஆஅ.. " என்று அலறி கொண்டே கண்விழித்தான் அர்ஜுனன்.
கண்டது யாவும் கனவு என்பதை உணர்வதற்கே அவனுக்கு கடினமாய் இருந்தது. படுக்கையில் இருந்து எழுதவன், ஜன்னல் வழியே நிலவை பார்த்தான் . தேய்பிறை நிலவை பார்த்த படியே தான் கண்ட கனவை அசைபோட்டவனின் மனம் இன்னும் ஆறவில்லை... 15 நிமிடங்கள் கழித்து சுபத்ராவின் போனுக்கு அழைத்தான்.( அதென்ன 15 நிமிஷ கணக்கு ? இருங்க நானே சொல்றேன் )
" ஹலோ "
" ஹலோ சுபீ ..."
" என்ன அர்ஜுன் இந்த நேரத்துல ? இன்னும் தூங்கலையா ? "
" நான் உன்னை பார்க்கணும் "
" ம்ம்ம்ம்? "
" நான் பேசறது கேக்கலையா ? நான் உன்னை பார்க்கணும் "
" சரி நாளைக்கு காலேஜ் பக்கத்துல உள்ள "
" எனக்கு இப்பவே பார்க்கணும் சுபி ... உன் வீட்டுகிட்டதான் இருக்கேன் வா "
அவனின் வார்த்தைகளில் மொத்தமாய் தூக்கம் களைய,
" என்ன அர்ஜுன் ? "
" சுபி இப்போவே கீழே வா ?"
" என்ன அர்ஜுன் இது ... வீட்டுல யாரும் பார்த்தா என்ன ஆகுறது ? " அழைப்பு துண்டிக்க பட்டுவிட்டது... என்னாச்சு என்று சுபத்ரா யோசிக்கும்போதே கிருஷ்ணன் அவளுக்கு அழைத்தான்.
" ஹலோ அண்ணா "
" சுபா, நித்யா மீரா தூங்கியாச்சா ? "
" ம்ம்ம்ம்ம் ...அண்ணா அர்ஜுன் ......"
" அர்ஜுன் தோட்டத்துக்கும் பக்கம் இருக்குற வாசல்ல வைட் பண்றான் ...நீ உடனே போயி பாரு ....... "
" அண்ணா.... என்னாச்சு ? யாராச்சும் பார்த்தா ? "
" நான் சொல்லிகிறேன் நீ போ "
" ம்ம்ம்ம் சரி "
அவர்களின் வீட்டில் தோட்டத்து பக்கம் இன்னொரு வாசல் இருக்க, அங்கே காத்திருந்தான் அர்ஜுனன் . சுபத்ரா வேகமாய் வந்து, கேட்டை திறக்க,
ஒரு முறை கண்களால் அவளை மேலிருந்து கீழ்வரை பார்த்து நிம்மதி பெருமூச்சு விட்டான் அர்ஜுன். கலந்த கேசமும் சிவந்த விழிகளுமாய் நின்றவனின் காணவே கஷ்டமாய் இருக்க, சுபத்ரா
" அர்ஜுன் " என்றபடி அவனை நோக்கி கை நீட்டினாள்.
அதற்காகவே காத்திருந்தது போல அவளை இழுத்து ஆரத்தழுவி கண்ணீர் விட்டான் அர்ஜுனன்.