அதன் பின் சிறு அமைதி.. சொல்லி முடித்தவன் சொல்ல கேட்டிருந்தவன் இருவருக்குமே அந்த அமைதி இடைவெளி தேவைப்பட்டது.
ஒருவாறு சமாளித்து ஆதி அவன் தரப்பு நியாயத்தை முன் வைக்க, இம்முறை உணர்சிகளின் நடனம் ரகுவின் விழிகளில் மட்டுமாய்.!!!
முகம் தெளிந்து ஒரு ஆத்ம நிம்மதி பரவ அவன் பேசி முடிக்க காத்திருந்தவன் ஆதியை தழுவி கொண்டான்!!!!
நடுக்கடலில் கரையும் தெரியாமல் மூழ்கியும் போகாமல் நீந்தி கொண்டிருந்தவனுக்கு ஒரு துரும்பு கிடைத்தால் எவ்வளவு ஆனந்தம் கிட்டும்..அவன் கண்ணுக்கு ஒரு பெரிய படகே தென்பட்டால்?!
அப்படி தான் உணர்ந்தான் ஆதி.. முன்பு மதுவை நெருங்க கூடாது என மிரட்டியவன் அவளின் உயிர் நண்பன் அவன் வார்த்தையை மீறி ஏதும் செய்யாத செய்ய விரும்பாதவள் மது!!! அப்படி பட்ட நண்பன் தன்னிடம் நட்பு கரம் நீட்டுகிறான்!!!!
அவளுக்காக... அவன் ஆருயிர் தோழிக்காக.. அவனின் அணுவில் கலந்து பாதியை மாறிவிட்ட அவனின் உயிருக்காக....
ஆதியின் புன்னகையும் அவனது இருக்கியா தழுவலும் ரகுவின் உள்ளும் நம்பிக்கை விதையை விதைக்க தவறவில்லை!!!
ஒரு வழியாக புது நண்பர்கள் பல கதைகள் பேசிய படி மதிய உணவையும் முடித்து கொண்டு தத்தம் வெளியில் மூழ்கினர்.
(ஹிஹிஹி என்ன பேசுனாங்கன்னு இப்போ சொல்ல மாட்டேனே.. அதுவும் சஸ்பென்ஸ்.. திட்டாதிங்க.. ஷ்ஷ்ஷ்ஷ்... பெரிய பிளாஷ் பேக்கும் முடிஞ்சுது)
சற்று முன்பு...
தங்கள் காதலை சொல்ல தயாரான ஆதியும் வருணும் தங்கள் திட்டத்தை எப்படி நிறைவேற்றலாம் என பேசியபடி கீழே வர பெரியவர்கள் அனைவரும் தயார்..!!!
ஆரா,தன்யா, மது மூவரும் குழந்தைகளை தயார் செய்து தாங்களும் தயார் ஆக சென்றிருக்க, ஸ்வேதாவும் மேகாவும் தயாராகி லலிதா வித்யாவுடன் அனைவருக்கும் பூ தொடுத்து கொண்டிருந்தனர்.
அடுத்து செல்வது ஆதி வீடு என்பதால், மகேஷ்,ரஞ்சனி முன்னே சென்று வேண்டிய ஏற்பாடுகள் செய்யவென கிளம்ப, ஆதியும் தானும் வருவதாக கூறினான். ஸ்வேதாவை அவள் பூ தொடுக்கும் அழகை கண்டு கொண்டு இருந்தவன், ஆதியின் தீண்டலில் தன்னிலை பெற்றான்.
அவனை அப்போது தான் அங்கு கண்ட மகேஷ், சரண் ராஜை பார்க்க அவர் 'ஆமாம்' என்பது போல் தலையசைத்தார்.. ஆனால் ரஞ்சனியோ முகத்தை திருப்பிக் கொள்ள, அவர் கையை பற்றி அழுத்திய மகேஷ் அவரை அழைத்துக் கொண்டு வெளியே சென்றார்.
மதுவை கிளம்புவதற்குள் பார்க்க வேண்டுமென துடித்த ஆதி, மேல் அறையின் பக்கம் நொடிக்கு ஒரு முறை பார்வையை செலுத்தி மீட்டான்.
அவன் தவிப்பை காண ரகுவிற்கு சிரிப்பாக இருந்தது, மெல்ல அவன் அருகில் வந்து
"ம்ம்ம்கும் கிளம்புங்க மாப்பிள்ளை உங்க மகராணிய யாரும் கடத்திட்டு போகாம பத்திரமா கொண்டு வந்து உங்க கிட்ட ஒப்படைக்க வேண்டியது என் பொறுப்பு" என சொல்ல அசடு வழிந்துவிட்டு கிளம்பினான். வருனையும் அழைத்து கொண்டு !!
பின் அவர்கள் திட்டம் நிறை வேற வேண்டாமா? அதற்கு ஏற்பாடுகள் செய்ய வேண்டுமே..
எல்லாவற்றையும் சரியாக செய்து முடித்து காத்திருந்த நேரம்... அனைவரின் காரும் ஒன்றன் பின் ஒன்றாக ஆதி வீடு வாசலில் வந்து நின்றது..
ஆண்கள் அனைவரும் பட்டு வேட்டி சட்டையில் இருக்க, லலிதா ரஞ்சனி வித்யா மூவரும் அடர் சிவப்பு நிற புடவையில் ஜொலித்தனர்.
ஆரா மயில்கழுத்து நிறத்தில் 'மாங்காய் பிஞ்சு' போன்று உடல் முழுதும் பட்டினால் செய்யப்பட்டிருந்த புடவையில் அழகாக ஆரத்ரிகாவுடன் உள்ளே சென்றாள்.
அந்த குட்டி தேவதைக்கும் அதே வண்ணத்தில் அழகிய பட்டு பாவாடை சட்டை நெத்திச்சுட்டியென அலங்காரம் செய்யபட்டிருந்தது.
தன்யா இளந்தளிர் பச்சை நிறத்தில் நீல வானம் நிறம் கலந்த அழகான புடவையில் மிளிர்ந்தாள்.. இதுவும் ஆரா தன்யா ஐடியா தான்.. எல்லாரும் ஒரே மாதிரியான நிறத்தில் வெவ்வேறு டிசைனில் புடவை அணிய வேண்டும் என்பது.
இது த்ரீ ரோசசிற்கும் பிடித்து போக அவர்களும் அதை ஒப்புக்கொண்டனர்.
இளமஞ்சள் நிறத்தில் அழகிய புடவியை மேலும் அழகாக்கும் வண்ணம் ஸ்வேதா உடுத்தியிருக்க, ஏற்கனவே பார்த்திருந்த போதும் மீண்டும் புதிதாய் பார்ப்பது போல் பார்த்த வருணை சமாளிக்க ஸ்வேதா திணறி போய் விட்டாள்.
சந்தன நிறத்தில் சரிகை வேலை உடல்முழுதும் நெருக்கமாக இருந்த அந்த புடவையில் மேகா இந்திர லோக தேவதையே வந்தது போல காரில் இருந்து இறங்கி உள்ளே சென்றாள்.
காரை நிறுத்தி விட்டு ஆதியின் அருகில் வந்து நின்ற ரகு இமைக்க கூட இல்லை..!!!
அப்படி என்ன தான் மாயம் செய்தாலோ?! என்றுமே அவள் அழகு தான்.. ஆனால் அவளை தோழியாக பார்த்த தருணங்களில் இந்த அழகு தனியாக தெரிந்தது இல்லை. கல்லூரி விழாக்களில் ஒன்றோ இரண்டு முறையோ புடவை கட்டியிருக்கிறாள் தான் ஆனால் அப்போது எல்லாம் சோளக்காட்டு பொம்மை என அவன் கிண்டல் செய்திருக்கிறான்!!
புடவை அதிகம் பழக்கம் இல்லாததால் அவளும் அப்போது கோபம் கொண்டாலும் பின் இது தனக்கு ஒத்து வராது என விட்டு விடுவாள். கண்ணாடியில் பார்த்தால் அவளுக்கே அப்படி தான் தெரியும். ஏதோ வேடம் போட்டது போல.
ஆனால் இன்று.. மது,தன்யா,ஸ்வேதா,ஆரா என நால்வரும் சேர்ந்து அவளை ஒரு வழி பண்ணி அழகாக கட்டி விட்டிருந்தனர். புடவை கட்டி முடிந்ததும் கண்ணாடியில் பார்த்த போதும் ,'போடோ செசன்' நடந்த போதும் தன்னையே பார்த்து பார்த்து வியந்தாள்.
ஸ்வேதாவின் வீட்டில் கிளம்பி காரில் ஏற வந்தவளை விழுங்கி விடுவது போல் பார்த்தவன் ரகுவா? என தன்னை தானே எவ்வளவு முறை கேட்டு கொண்டாள்..!!!!
மதுவுமே அதிசயமாய் பார்த்து, அழகாய் தலை சரித்து சிறிது விட்டு அவளை ஓட்டி தீர்த்து விட்டாள். இங்கு வந்து இறங்கிய பின்னும் அவன் இவ்வாறு பார்த்து வைக்க, மூச்சு விட கூட சிரம பட்டாள்.
இத்தனை நாளில் இல்லாத ரகுவை பார்த்தனர் மேகா, மது, கற்பகம் மூவரும்..!!!!
அவனுக்கும் கூட தன்னை நினைத்து வெட்கமாக கூட இருந்தது. அவள் தன காதலை சொன்ன போது. மது அவர்களுக்கு தனிமை அளித்து அன்று இரவு நிலவொளியில் விட்டு சென்ற பின்பு அவள் கையை மெதுவாக பற்றி நெற்றியில் இதழ் பதித்த போது. இப்படி எந்த சந்தர்ப்பத்திலும் அவன் அசையாது நின்றான்.
என்ன தான் காதல் என்று கூறி விட்டாலும் நட்பு என்னும் எல்லை கோடை கடந்து காதல் உலகில் சஞ்சரிக்க கொஞ்சம் காலம் அவசியம் தானோ?! அப்படி தான் தோணிற்று ரகுவிற்கு.
கடைசியாக திவக்கரின் காரில் இருந்து வெளியே தலை காட்டினால் மது. தூய தும்பை மலரை போன்ற நிறம் என்று கூற முடியாது ஆனால் வெண்ணிலவின் நிறம் போன்றதொரு நிறம். அதை சந்தன நிறம் என்றும் கூற முடியாது.!!!
எப்படி அவள் அழகை எதனோடும் ஒப்பிட முடியாதோ அது போன்றதொரு நிறம் அமைப்பு அவள் புடவையில் கூட..!!!
மேகா விருப்ப பட்டதினால், வட மாநில பெண்களை போல் கொஞ்சம் விலை உயர்ந்து கழுத்து நிறையும் வண்ணம் கழுத்தணியும், நீளமாக தொங்கிய காதணியும், அதற்கு பொருத்தமான மெல்லிய சங்கிலியில் தொங்கிய பெரிய சுட்டியும்... மூவரும் தங்கள் புடைவையின் நிறத்திற்கு ஏற்ப அணிந்து இருந்தனர்.