14. என்னைத் தந்தேன் வேரோடு - Anna Sweety
அந்த மெயிலை படித்ததும் வேரிக்கு முதலில் தோன்றிய உணர்வு கோபம். என் கவினை குறை சொல்கிறாயே என்ற கோபம்.
என் வீட்டு விஷயத்த கன்னா பின்னானு கற்பனை செய்து வெட்டியா வேலைமெனக்கெட்டு இவ்ளவு பெருசா எதோ ஒரு லூசு எழுதி எனுப்பி இருக்குது... நாங்க சந்தோஷமா இருக்கிறத பார்த்து பொறாமை பட்டு இவ்ளவும் செய்து ஒரு பைத்தியம்...
அடுத்த சிந்தனை ஓட்டம் இப்படியாக இருந்தது.
“இதெல்லாம் உண்மையா இருந்தா எங்க கல்யாணம் நடக்கதுக்கு முன்னாடி சொல்லிருக்கனும் கிறுக்கு...என் அம்மாவ பத்தி உனக்கே தெரியுதுல்ல...இந்த இட விஷயத்தை வச்சே வியனை மட்டுமில்ல மொத்த குடும்பத்தையும் விரலை விட்டு ஆட்டிருக்க மாட்டாங்களா? பழி வாங்க வர்றவன் இப்பவா வருவான்?”
வாய்விட்டு எதிராளியை திட்டியவள் அதே காரத்தோடு பதில் அனுப்ப அனுப்புனரின் முகவரியை தேடினாள். அப்பொழுதுதான் கவினித்தாள். அனுப்புனரின் பெயரில் இருந்த ப்ரச்சனையை. வெரோனிகா சத்யா என்றது அது.
முதலில் பெயரைப் பற்றி பெரிதாக சட்டை செய்யாமல் மெயிலை படித்தவளுக்கு இப்பொழுது இது கருத்தை உறுத்திற்று.
அது அவளது பெயர் அல்லவா. வேரி என்பது அவளது வீட்டினர் அழைக்கும் பெயராக இருந்தாலும் பள்ளி கல்லூரி சான்றிதழ்களில் அவள் வெரோனிகா. கவினின் மனைவியாக அவள் வெரோனிகா சத்யா.
இந்த வெரோனிகா பெயரை இப்பொழுதைக்கு யாரும் பயன்படுத்தியதே இல்லையே. இவளுக்கு பெயர் வைத்ததெல்லாம் பாட்டிதான்.
தனக்கு ஊனமுற்ற குழந்தை இருக்கிறது என்பதை வெளிக்காட்டிக்கொள்வது அவமானம் என்று நினைத்த இவள் பெற்றோர் இவளுடைய எந்த விஷயத்திலும் தலையிட்டதே கிடையாது.எல்லாம் பாட்டி தான்.
ஆக அம்மாவிற்கே இவளது பெயர் வெரோனிக்கா என ஞாபகம் இருக்கிறதா என தெரியவில்லை. இதில் இந்த மெயில் கார கிறுக்குக்கு எப்படி தெரிந்ததாம்? எப்படியோ போ
ஏய் பைத்தியம்... இதெல்லாம் உண்மையா இருந்தா எங்க கல்யாணம் நடக்கதுக்கு முன்னாடி நீ இதை எங்க அம்மாட்ட சொல்லிருக்கனும் லூசு...
என ஒரு பதிலை அனுப்பிவிட்டு சைன் அவ்ட் செய்து விட்டு எழுந்தாள்.
மனதிலிருந்த எரிச்சல் இன்னும் வடியவில்லை.
எப்ப பாரு இந்த இடத்தை வச்சு என்னை பயம் காட்றதே யாருக்காவது வேலையா போச்சு.. முதல்ல அம்மா.....இப்போ இந்த லூசு....
அவள் திருமண நாளில் நடந்தது அது.
அன்று திருமணத்தன்று கவின் வேரியை மணக்க சம்மதித்துவிட்டதாக இவளிடம் சொல்லி இவளை தயார் செய்ய வந்த மாலினி “மாப்பிள்ள வீட்டுக்கு உன் 40 ஏக்கர் இடம் மேல ஒரு கண்ணாம்....அந்த இடத்தை பத்தி விசாரிச்சாங்களாம் அவர் ஆஃபீஸ் ஆட்கள்... நம்ம ஊர்காரன் ஒருத்தன் சொல்றான்...அதான் உன்னைய கல்யாணம் செய்றான் போல அந்த கவின் கிறுக்கன்....அதை மட்டும் எழுதிகொடுத்துடாத....அப்புறம் உன்னை எச்சிலைய தூக்கி போட்ட மாதிரி தூக்கி போட்டுட்டு போய்டுவான்....ஆனா அதை கைல வச்சுகிட்டனா உன் இஷ்டத்துக்கு நீ அவனை ஆட்டி வைக்கலாம்....அதுக்காக பிள்ளை வச்சுகிறத தள்ளி போட்டுடாத...என்னைக்கினாலும் குழந்தைதான் துருப்பு சீட்டு...அவன் உன்னை துரத்திவிட்டாலும் காலத்துக்கும் பிள்ளைய காட்டி காசு தர வச்சிடலாம்...”
இதுதான் ஆரம்பத்தில் கவின் இவளிடம் அன்பாய் நெருங்கும்போது கூட இவள் பயந்து விலகி ஓட காரணம்.
பின்புதான் கவினின் பணபலம் புரிய அத்தனை பெரிய பணக்காரனுக்கு இந்த 40 ஏக்கர் கால் தூசிக்கு சமம் என்பதும் உறைத்தது.
இருந்தாலும் எதற்கு வீண் சஞ்சலம் என்று இதை விற்றுவிடலாம் என்றுதான் அவள் மிர்னாவுக்கு ஆரம்பத்தில் தன் சொத்தை விற்று அவள் பயன்படுத்திக்கொள்ளட்டும் என்று வழி சொன்னது. ஆனால் மிர்னா மறுத்துவிட்டாள்.
மீண்டும் இன்றும் இந்த நிலத்தை வைத்து யாரோ அடுத்த கதை சொல்கிறார்கள். முன்புள்ள வேரியானால் இதற்குள் மயங்கி விழுந்திருப்பாள் பயத்தில். இன்று கொஞ்சம் யோசிக்க பழகி இருக்கிறாள்.
மிரட்டும் நபர் திருமணத்திற்கு முன்பே ஏன் சொல்லவில்லையாம்? இப்பொழுதுகூட இவள் அம்மாவிடம் இக்கதையை சொன்னால் இவளைவிட பெரிதாக ஆட மாட்டாரா? வியனை பழி வாங்க வேண்டும் என்றால் மிர்னாவிடம் அல்லவா இந்த கதையை சொல்லி இருக்க வேண்டும்?
ஆனால் கவினை இவள் எத்தனையாய் பார்த்தாயிற்று...அவனது செயல் முறைகள் சில இவளை எரிச்சலுற செய்தாலும்....அவன் அடிப்படை அன்பு, நேர்மை, இவள் மீதுள்ள காதல் இதெல்லாம் பொய்யாவதாவதவது?
இப்படி ஆள் ஆளுக்கு இந்த இடத்தை வைத்து குட்டையை குழப்புவதற்கு ஒரு முடிவாக இந்த இடத்தை பேசாமல் கவின் பேரில் இவள் எழுதிவைத்துவிட்டாள் என்ன? அதுதான் சரியான முடிவு.
ஆனால் இப்படி இவள் நிம்மதி போக வேண்டும் என்று சதி செய்வது யாராக இருக்கும்?
நேர்ல மட்டும் கிடைக்கட்டும்....அப்புறம் இருக்கு உன்ன...முதலில் கோபமாக யோசிக்க ஆரம்பித்தவள் பின்பு நிதானமாக யோசிக்க ஆரம்பித்தாள்.
யாரா இருக்கும்? என்ன காரணமா இருக்கும்?
அதற்குள் “வேரி டால் நீ இன்னும் வாக்கிங் கிளம்பலையா? ரெடியாகு....” என்றபடி அங்கு நீலா வர விஷயம் அப்பொழுதுக்கு மறந்து போனது.
இரவில் கவின் அருகில் படுத்திருந்தவள் மனதில் மீண்டும் இந்த யாராக இருக்கும் ஞாபகம்.
அவன் புறமாக திரும்பி படுத்தவளை கைக்குள் சுருட்டினான் கவின். நிமிர்ந்து அவன் முகம் பார்த்தாள். காதலும் கனிவும் கம்பீரமுமாய் ஆணின அழகின் இலக்கணமாய்.... சட்டென அவளுக்கு தோன்றியது....அந்த லூசு ஒரு பொண்ணு....கவினை காதலிச்சு இருக்குமா இருக்கும்... வியனை காதலிச்சு இருந்தால் மிர்னாவுக்கு அனுப்பியிருப்பா...வியனை பழி வாங்கனும்கிறதெல்லாம் அவள அடையாளம் கண்டு பிடிக்காம இருக்கிறதுக்கான பில்டப்....
ஏனோ அடுத்த நிமிடம் அந்த மெயில் காரியின் மீதிருந்த கோபம் காணாமல் போனது. பாவம் கவினை விரும்பிவிட்டு அவன் தனக்கில்லை என உணரும்போது அவளுக்கு எப்படி வலித்திருக்கும்? இழக்கபட தக்கவனா கவின்..?? அவன் நிரந்தரமாக தனக்கு வேண்டும் என இவள் மனம் தவித்த காலமும் உண்டுதானே.....
“கவிப்பா கல்யாணத்துக்கு முன்ன உங்கள யாராவது ஒரு பொண்ணு லவ் பண்ணி இருக்காங்களா?....”
அவள் முகத்தைப் பார்த்தான் கவின்.
“அடுத்த ப்ரச்சனைக்கு அடிபோடுறியான்னு நினைக்கிறீங்களாப்பா....பாருங்க நீங்க யாரையாவது லவ் பண்னீங்களான்னு நான் கேட்க கூட இல்ல....ஏன்னா உங்கள பத்தி எனக்கு நல்லா தெரியும்...அம்மா பார்த்த பொண்ணதான் கல்யாணம் பண்ணுவேன்னு தவமிருந்த தங்க பையன்...”
இப்போது கூடுதலாக அவன் முகத்தில் சிரிப்பும் சேர்ந்திருந்தாலும் இன்னும் மௌனம்.
“போங்கப்பா...நீங்க என்னை உங்க ஃப்ரெண்டா நினைக்க மாட்டேன்றீங்க...”
“ஒன்னா ரெண்டா....அது ஒரு லிஸ்ட்டே இருக்குது....” கண்சிமிட்டினான்.
“ஆனா அத சொல்லிமுடிக்கிற வரைக்கும் நீ விழிச்சிருப்பியா...இல்ல சொல்லி முடிச்சபிறகு தூங்காம உட்கார்ந்து இருப்பியாங்கிறதுதான்....”