அந்த பாத் ரூமைப் பார்த்து இவர்கள் இருவரும் சென்றனர்.
“குட்டியா இருந்தாலும் வேகமா நடக்க ஷாலு…”
“ஆமா…ரன்னிங்ல மட்டும் தான் என்னால ரேயுவ வின் பண்ண முடியும்…”
“ஒரு நாள் நம்ம ரெண்டு பேர்க்கும் காம்படிஷன் வைக்கனும்…”
“ ஏன் இன்னைக்கே வச்சா என்ன…?”
“ப்ச்…இப்பதான் நீ வாமிட் செய்துருக்க…”
“தப்பிக்றதுக்கு சரியான டெக்னிக்…சூப்பர்”
“ஹை கரெக்டா கண்டுபிடிச்சிட்டியே….தோத்துப் போற ரேஸ்ல நாங்க இப்டிதான் ஜகா வாங்கிடுவோம்…”
இருவரும் பேசி சிரித்தபடி நடக்க….
க்ளோசிங் டைம் என்பதால் இவர்கள் உள்ளே வரும் போதே இயந்திர விளையாட்டுகள் பார்வையாளருக்கு நிப்பாட்ட பட்டு, நீர் விளையாட்டுகள் மட்டும் அனுமதிக்கப் பட்டிருந்தது. இப்பொழுது இந்த நீர் விளையாட்டுப் பகுதியில் இவர்களைத் தவிர ஒன்றிரண்டு தலைகள் தான்.
“சார்….கிளம்புங்க சார்…..க்ளோசிங் டைம் சார்…” செக்யூரிட்டி உடை அணிந்த ஊழியர்கள் மற்றவர்களை துரிதப்படுத்திக் கொண்டிருக்க
“இந்த பக்கம் சார்…..இங்க வாங்க…” என மரியாதையும் பவ்யமுமாய் ஷாலுவையும் சரித்ரனையும் வழி நடத்தினார் உடன் வந்த அந்த தீம் பார்க் ஊழியர்.
முதலாளியின் மகன் நேரடியாக தொடர்பு கொண்டு “வருகிறவர்கள் ரொம்ப முக்கியமானவர்கள் நன்கு கவனித்துக் கொள்ளுங்கள்….கூடிய சீக்கிரம் நானும் வந்து சேர்ந்து கொள்ளப் பார்க்கிறேன் “ என்று சொன்னபின்பு அவர் அப்படித்தானே நடந்து கொள்ள முடியும் இவர்களிடம்.
சரித்ரனின் நண்பன் ஒருவனின் தந்தையுடையது அந்த தீம் பார்க்.
ஆனால் துரத்தப் படுபவர்களுக்கு அவர்கள் கண் முன்னே மற்றவருக்கு இப்படி வரவேற்பு கொடுக்கப்பட்டால் எரிச்சல் வரும் தானே…
“யார்டா இது, நம்ம மட்டும் துரத்துறாங்க…?..அவங்களுக்கு மட்டும் ராயல் ட்ரீட்மெண்ட்.”
சரித்ரன் இப்பொழுது நீச்சல் குளத்தின் அருகிலிருந்த ஷவர் ரூமிற்குள் நுழைந்தான். சற்று தள்ளி நின்றிருந்தாள் ஷாலு.
அவசரமாக ஒரு புது டவல் எங்கிருந்தோ கொண்டு வரப்பட்டது ஒரு ஊழியரால் சரித்ரனுக்காக.
“ம்…நைட் ஆனா இங்கல்லாம் வேற என்னடா நடக்கும்….எதாவது பெரிய இடத்துப் பையன் கால் கேர்ளை தள்ளிட்டு வந்துருப்பான்….”
கேட்டிருந்த ஷாலுவின் மொத்த உலகமும் நொருங்கிப் போனது. கிடு கிடுவென நடுங்கத் தொடங்கியது அவள் சிறு தேகம்.
1990 ஆம் ஆண்டு…
குறு குறு என அந்த துறு துறு கண்களை இவன் மீது வைத்துக் கொண்டு அப்படி மழலையாய் கெஞ்சி அவள் கேட்கும் முதல் விஷயத்தை மறுக்க முடியாமல் “உன் இஷ்டம் என்று சொல்லிவிட்டானே தவிர “விஷம் குடியுங்களேன்…தீயில் விழுந்துவிடுங்களேன்” என அவள் கேட்டிருந்தாள் கூட மகிழ்ந்துவிட்டிருப்பான்…இப்பொழுதோ துடித்துக் கொண்டிருந்தான் வசீகரன்.
ஆனாலும் இப்படி ஒரு சூழல் வருமென அவன் கனவிலும் நினைக்கவில்லை. இதை கையாளவும் அவனுக்கு தெரியவில்லை.
என்ன செய்ய வேண்டும் இப்பொழுது? அழுது புரண்டு இவன் அன்பை சொன்னால் கூட இவன் அன்பை அவள் புரிந்து கொள்வாளா? இத்தனை காலம் அவள் வளர்ந்த சமூகமும் கலாச்சாரமும் விவாகரத்து என்பது ஒரு குடும்ப பெண் நினைத்து பார்க்கவே கூடாத விஷயம் என்பதை இவளுக்கு போதிக்காமலா இருந்திருக்கும்? வருட வருடமாய் வளர்க்கபட்ட விதமே அவளை தடுக்காத போது இவனது வெறும் வார்த்தையா அவளை தடுத்து விடப் போகிறது…?
இவன் இப்படி யோசனையில் இருக்க, அக்கா ஜெயா உள்ளே வந்ததை கவனிக்கவில்லை.
“என்ன வசீ…என்னடா ப்ரச்சனை?...முகமே சரி இல்லை…? மலர் எதுவும் மனசுக்கு பிடிக்காத மாதிரி நடந்துகிட்டாளாடா…?”
“அச்சோ அக்கா…என்னக்கா நீ….இப்டில்லாம் பேசிகிட்டு…..? அவ காதுல விழுந்தா பயந்துடப் போறா.. எதுனாலும் நம்மளதான் தப்பா நினைப்பாங்கன்னு நினைக்க மாட்டாளா…? அவ ஒரு குழந்தை மாதிரி….இப்பவே மிரண்டு போய் இருக்கா….கொஞ்சம் கொஞ்சமா நம்ம வீட்டுக்கு செட் ஆகிடுவாக்கா….அவ தப்பாவே எதையாவது செய்தா கூட நீ எதையும் கண்டுகாதக்கா… ப்ளீஸ்…கொஞ்ச நாள்… “
ஜெயா சிரிக்க ஆரம்பித்திருந்தாள்.
“நான் என்ன விஷயம்னுதானேடா கேட்டேன்….அதுக்குள்ள அவளுக்கு லாயராகிட்ட…?”
சற்றே அசடு வழிந்தான் வசீகரன். ஆனாலும் இவன் அக்காவிற்கு சொன்னதுதான் இவனுக்கும். மய்யூ ஒரு குழந்தை மாதிரிதான். கொஞ்சம் கொஞ்சமாக புரிந்து கொள்வாள். இவன் தான் அனுசரித்துப் போக வேண்டும். வேறு வழி இல்லை. ஆனால் அதற்கு கூட அவகாசம் வேண்டுமே….
இந்த அக்கா தம்பி உரையாடல் அப்பொழுதுதான் அருகிலிருந்த அறைக்குள் நுழைந்திருந்த மலர்விழி காதுகளிலும் விழத்தான் செய்தது.
வசீகரன் இவளுக்காக வக்காலத்து வாங்குவது ஒரு புறம் மனதிற்கு கஷ்டமாக இருந்தாலும், ஒரு ஆணால் கூட விவாகரத்தை எளிதாக தன் சொந்த குடும்பத்திற்கு சொல்லமுடியவில்லையே, இவள் எப்படி அதை சொல்ல போகிறாள்? என்று வேதனைதான் பெரிதாக இருந்தது.
அன்று மறுவீடு என்பதால் மலர்விழி வீட்டிற்கு செல்ல வேண்டும் தம்பதியர். நேற்று திருமணம் இன்றே போய் விவாகரத்து என பெற்றோரிடம் சொல்லும் கொடும் நேரம் நெருங்குவதை உணர்ந்து மலர்விழி இதயம் கணம்.
தன் வீட்டிற்கு கிளம்பிக் கொண்டிருந்த மலர்விழிக்கு தலை பின்னிக் கொண்டிருந்தாள் ஜெயா.
“மலர்க்கு ஸ்கூல்ல காலேஜ்ல ஃப்ரெண்ட்ஸ்லாம் உண்டாமா..?”
“ம்…”
அதே நேரம் ஜெயாவின் சிறு குழந்தை வந்து தன் தாயிடம் ஒண்டியது.
“செல்லகுட்டிக்கு என்னமா வேணும்…? அம்மா அத்தைக்கு தலை பின்னிட்டு வந்து உங்களை தூக்கிப்பனாம்….அதுவரைக்கும் அப்பா கூடவாவது மாமா கூடயாவது குட்டியார் விளையாடிட்டு இருப்பாராம்…”
அப்பொழுது அங்கு வந்தான் வசீகரன். தாய் மாமன்.
“வாங்க ஹாண்ட்சம்…மாமாட்ட வாங்க…” இதற்குள் குழந்தை மாமனிடம் தஞ்சம் அடைந்திருந்தான்.
“வசி அவனை கொஞ்சம் வெளிய கூட்டிட்டு போயேன்….நான் கொஞ்சம் மலர்ட்ட பேசனும்…”
கெஞ்சலாய் ஒரு பார்வை பார்த்தான் வசீகரன்.
“உன் குழந்தையை இங்க யாரும் அழவைக்கப் போறது இல்லை…நீ முதல்ல இடத்தைக் காலி செய்..”
அவன் பார்வையைப் பார்த்த மலர்விழிக்கே பரிதாபமாய் இருந்தது. இவளுக்காக இவன் யாரிடமெல்லாம் கெஞ்சப் போகிறான்? மேலும் அவன் அக்கா இவளை என்ன செய்துவிட முடியும்…?
போங்க நான் பார்த்துகிறேன் என்பதாய் அவனிடம் தலை அசைத்தாள்.
விஷயத்தை சொல்லிடாதே என்பதாய் அவன் கண்களால் கெஞ்ச, சம்மதமாக இவள் தலை அசைத்து வைத்தாள்.