“க்கும்…நானும் இங்கதான் இருக்கேன்…..”
“சொல்லுங்க அண்ணி…” வெளியேறிக் கொண்டிருந்தவன் சட்டென திரும்பிப் பார்த்தான். அண்ணியா? அது எப்படியாம்?
“ஏதோ என் ஃப்ரெண்ட்ஸ் பத்தி கேட்டுகிட்டு இருந்தீங்க….”
“ம்…அவங்கள்ள யாருக்காவது கல்யாணம் ஆகிட்டா மலர்..?”
“என் ஸ்கூல் ஃப்ரெண்ட்ஸ் எல்லோருக்குமே கல்யாணம் ஆகிட்டுது……காலேஜ் இப்பதான் முடிஞ்சிது இல்லையா? காலேஜ் ஃப்ரெண்ட்ஸுக்கும் இனி வரிசையா இருக்கும்…..ஏன் அண்ணி?” திருமணத்திற்கு முன்னே ஜெயாவை அண்ணி என்று அழைத்துப் பழகி இருந்த மலர்விழிக்கு இப்பொழுது அதை திடும் என மாற்றமுடியும் என்று தோன்றவில்லை.
“ஆக கல்யாணம் ஆன ஃப்ரெண்ட்ஸ்கூட பழக்கம் இல்லை என்ன மலர்…?”
மலர்விழிக்கு ஜெயா என்ன சொல்ல வருகிறாள் என புரிந்துவிட்டது. குழந்தை மிரண்டு போய் இருக்கிறாள் என இவளைப் பற்றி வசீகரன் சொன்ன வகையில் ஜெயா இவள் தாம்பத்யத்திற்கு பயப்படுவதாக நினைத்துவிட்டாள் என தெரிகிறது.
வசீகரனை குறித்து அப்படி ஒரு உரையாடல் எழுவதைக் கூட மலர்விழியால் கற்பனை செய்ய முடியவில்லை. இந்த உரையாடலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமே!!!
“இல்லையே என் க்ளோஸ் ஃப்ரெண்ட்டுக்கு கல்யாணம் ஆகிட்டே…”
“அப்டியா மலர்….உள்ளூர்தானா?....இன்னைக்கு உங்க வீட்டுக்கு போறப்ப பார்க்க முடியுமா?”
“அவ்ளவு தூரம்லாம் போக வேண்டாம் அண்ணி…வசீன்னு நீங்க கூப்டா விழுந்தடிச்சு வந்து நிப்பாங்க…”
ஒரு நொடி ஜெயாவுக்கு ஒன்றும் புரியவில்லை. புரிந்த நொடி வாய்விட்டு சிரித்தாள்.
“சரியான வாலு நீ….அவன்தான் க்ளோஸ் ஃப்ரெண்டாமா…?...”
“ஆமா..” உண்மைதானே அவனிடம் பேச முடிந்த அளவிற்கு வேறு யாரிடம் இவள் மனம்விட்டு பேச முடியும்?
ஜெயாவுக்குமே தன் தம்பி காலையில் அமர்ந்திருந்த நிலை குறித்த கவலை காணாமல் போனது. மலர்விழி சின்னவள் என்றாலும் புத்திசாலி புரிந்துகொள்வாள். தம்பியின் அன்பும் சாமான்யமானது இல்லை.
ஒரே நாளில் கணவனை நண்பனாய் பார்க்கச்செய்வது என்றால்….இனி இவர்களுக்கு நடுவில் இடையிடக் கூடாது என முடிவு செய்து கொண்டாள்.
பதறிப் போய் உரையாடலை ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்த வசீகரன் வானத்தில் பறந்தான்.
ராஜபாளையத்திலிருந்து கரிவலத்திலிருந்த மலர் வீட்டுக்கு போய் சேர்ந்தார்கள் தம்பதியினர்.
வீட்டில் நுழைந்த நேரத்திலிருந்து ‘மலர் கண்ணா மாப்பிள்ளைக்கு இதை கொடு…. மாப்பிள்ளைக்கு அதை செய்… .மாப்பிள்ளைக்கு அது பிடிக்குமான்னு கேளு….மாப்பிள்ளைக்கு இது இருக்கான்னு பாரு…இங்க உனக்கென்ன வேலை…போய் அவரை கவனி என ஒரே அவன் புராணம்.
முந்திய நாள் வரை இவள் வீட்டிற்கு வந்தால் இந்த வரவேற்பு இவளுக்கு கொடுக்கப்படும். இந்த ஒரே நாளில் இவள் அன்னியமாகிப் போனாளே….மனமொத்த கணவனுடன் தாய்வீடு வந்திருந்தால் அவள் அவர்களைவிடவும் அதிகமாக கூட அவனை கவனித்திருப்பாள். இப்படி அனாதையாய் உணர்ந்திருக்க மாட்டாள். இப்பொழுது மனம் வலிக்க வலிக்க அவளறை கட்டிலில் சுருண்டாள்.
“ஹேய் மண்டுமொழி…..புல் நைட்டும் தூங்கலையா….ஹீரோ சார் கைங்கரியமா…? இப்டி படுத்துட்ட….இது புரியாம அம்மா அங்க உன்னை முறச்சுஃபையிங்….உன் ஹஸ்பண்ட்ங்கிற கைப்பிள்ளயை தனியா விட்டுட்டு வந்துட்டியாம்…” துள்ளிய படி வந்தது இவள் தங்கை பொற்கொடி தான்.
அப்பா அம்மா மீது காட்டமுடியாத கோபத்தை தங்கையின் மேல் காட்ட முடியுமே…காட்டினாள் மலர்விழி.
சள்ளென எரிந்து விழுந்தாள்.
“ஏய்…என்னடி வாய் நீளுது…வயசுக்கு தக்க பேசு…ஒழுங்கா போய் படிக்கிற வேலையைப் பாரு…”
ஆனால் அவள் அதை சட்டை செய்யவே இல்லை.
“மண்டு உன்னை மாதிரில்லாம் புத்தகத்தை கட்டிட்டு அலைய நமக்கு இஷ்டம் இல்லைபா…..அதோட நான் இப்ப சின்ன பிள்ளை இல்லை…..எனக்கும் ப்ரமோஷன் ஃபிக்ஸ் ஆகிட்டு….மேரி ஃப்ரின்ஸ் சார்ம் மாட்டிஃபையிங் யூ நோ?...”
விஷயம் புரிய இன்னும் வெறுப்பாய் வந்தது. இவள் கல்யாணத்தில் இந்த வீடு மாட்டி இருக்கும் நிலை போதாதாமா? 17 வயதில் இந்த குழந்தை தங்கைக்கும் கண்டிப்பாக கல்யாணம் செய்து வைக்க வேண்டுமா?
இதற்குள் அம்மா இவளைத் தேடி வந்திருந்தார்.
“ ஆமா பாப்பா, முன்னாடியே சொல்லிகிட்டு இருந்த இடம் தான்….இப்ப உன் கல்யாணத்தப்ப சின்னவள பார்த்தாங்களாம்…ஏற்கனவே உன் கல்யாணம் முடியவும் அவளுக்கு பார்க்கிறதா சொந்தகாரங்கட்டல்லாம் சொல்லி இருந்தது தான…மாப்பிள்ள வீட்டுக்கு பிடிச்சு போச்சுனு நேத்து கிளம்புறப்பவே சொல்லிட்டு போய்டாங்க….நல்ல இடம்….”
“அம்மா அவள படிக்க வைங்கம்மா..”
“சும்மா இப்டி எதிரும் புதிருமா பேசக் கூடாது பாப்பா…அதுவும் இப்போ கல்யாணம் வேற ஆகிட்டு…கொஞ்சமாவது பெரிய மனுஷி மாதிரி யோசி….நீ படிக்கனும்னு கேட்ட…உங்கப்பா செய்து கொடுத்தாங்க…அவ முகத்தை பாரு…இது படிக்க போற முழியா…”
“ அம்மா…” சிணுங்கினாள் இளையவள்.
“எல்லோருக்கும் பிடிச்சிருக்கு…நம்ம பக்கம் எல்லார் வீட்லயும் இந்த வயசுல செய்றதுதான்…பிறகு என்ன?...இப்போ தான் ஒரு கல்யாணம் முடிஞ்சிருக்குது…..முதல் கல்யாணம் மாதிரி விமரிசையா செய்ய இன்னும் கொஞ்சம் நாள் வேணும்னு அப்பா சொல்லிருக்காங்க….அதுக்குள்ள இவளுக்கு சமைக்க கத்து கொடுக்கனும்…..உன் மாப்ளை மாதிரி எல்லோரும் இருப்பாங்களா….? சமைக்க ஆள் பார்த்து வச்சுருவேன்….உங்க பொண்ணை அடுப்படி சூட்ல விடாதீங்கன்னு சொல்ல..?”
இப்பொழுது இவளுக்கு பக்கென்றது.
இந்த வசீகரனை விவாகரத்து செய்யப் போகிறேன் என்று சொன்னால் இவள் வீட்டில் எப்படி ஒத்துக் கொள்வார்கள்? தலை வலி உடனடி ஆஜர். இரவெல்லாம் அழுது சிந்தனையில் வெடித்திருந்த தலை..
“அம்மா நைட்லாம் தூங்கலைமா….கொஞ்ச நேரம் தூங்கனும்…”
அம்மா முகத்தில் கூடுதலாய் ஒரு முறுவல்.
“ஆனாலும் நீ சில விஷயத்துல இன்னும் சின்ன பிள்ளை தான் பாப்பா…..என்ன பேசனும்…எதை யார்ட்ட பேசலாம் பேச கூடாதுன்னு ஒன்னும் தெரியலை…பாவம் மாப்ளை தான் எப்டி சமாளிக்க போறாரோ….?”
அம்மா எதற்கு இப்படி புலம்புகிறார் என யோசித்த பின்புதான் நைட் ஃபுல்லா தூங்கலையின் அர்த்தம் அடுத்தவர்க்கு என்னதாக இருக்கும் என புரிய நொந்து போனாள்.
“சரி பாப்பா சாயந்தரமா உங்களை பார்க்கன்னு ஆட்கள் வந்து போய் இருப்பாங்க…இப்போ வேணும்னா கொஞ்ச நேரம் படுத்துக்கோ….மாப்ளையும் ரெஸ்ட் எடுக்க நினைக்றாரான்னு ஒரு வார்த்தை கேட்டுட்டு வந்து படுத்துக்கோ…”
அம்மா எழும்பி செல்ல தங்கை நக்கலாய் சிரித்தாள்.
“அத்தானும் வரனுமாம்…அதுக்கு பேர் ரெஸ்டா..?”
“போடி இவளே..”
“நடத்து நடத்து டே ஷிஃப்டுக்கு சார் வறாரா…” என துள்ளலாய் சொல்லிக் கொண்டு போனவள் “ஹேய் மண்டு…நிஜமாவே அத்தான் வந்துட்டார்டி” என ரகசிய குரலில் மொழிந்துவிட்டு ஓடிப் போனாள்.
தங்கை ஏற்றிவிட்டு போன எரிச்சல் மொத்தமும் அவள் கிண்டலின் அடிப்படை காரணமான வசீகரன் மீது மையம் கொண்டது.
“இங்க எதுக்கு வந்தீங்க…உங்களை யார் இங்க வரச் சொன்னா…?” கத்திய பின்தான் உறைத்தது அவளுக்கு. இது அவள் வீடு அதற்கு அவன் வந்திருக்கிறான் என்பதே. அவன் வீட்டில் வைத்து இவள் கத்தியிருந்தால் கூட அவனுக்கு இப்படி வலிக்காதே…இது மிகவும் அவமானமாக தோன்றுமே…
நேற்று அவன் வீட்டில் இவளை அவன் எப்படி நடத்தினான்? அதுவும் அவனுக்கு பிடிக்காத விஷயங்களை மட்டுமே இவள் பேசும் போதும் கூட…
இவள் சாரி என்றபோதும் அவன் மௌனமாக இவளது அறைக் கதவை பூட்டி உட்தாழிட்டான். அவனது மௌனத்தில் மிரண்டாள் மலர்விழி.
இவன் என்ன செய்ய போகிறான்????
இவளை நோக்கி வரத் தொடங்கினான் அவன்.
தொடரும்
{kunena_discuss:876}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.