(Reading time: 29 - 58 minutes)

வள் முன்னால் துள்ளி ஓடி வர அவன் பின்னால் தண்ணீர் பாத்திரத்துடன் நிதானமாக வந்தான்.

டீ தயாராகும் வரையும் அவளது தவளை டீ ஓதல் ஓயவில்லை. மெல்ல அதை ஆற வைக்கும் போதும் தான். சட்டென அவள் மூக்கை அவன் பிடிக்க பதற்றத்தில் இவள் திறந்த வாயில் அவன் அதை ஊற்ற இவள் உணரும் முன் அதை முழுங்கி இருந்தாள் ரேயா….

“ஐய…சீஈஈஈஈஈஈ….தூ….தூ….” ம்கூம் அவள் என்ன செய்தும் உள்ளே சென்ற டீ வெளியே வரவே இல்லை…

வீட்டிற்கு வரும் வரையும் அந்த டீயை குடித்துவிட்டதை விடவும் அது இன்னும் வெளியே வரவில்லையே என்பதே அவளது பெரும் கவலையாக இருந்தது.

அந்த மலை சந்திப்பிற்கு பின் அவன் இந்தியாவில் இருக்கிறானா சென்றுவிட்டானா என கூட அவளுக்கு தெரியாமல் போயிற்று. ஆனால் இவளுடன் அப்பாவின் பேச்சு வார்த்தை பழகும் முறை ஓரளவு முன்னேற்றம் கண்டிருந்தது.

இவர்கள் பள்ளியில் இறுதி ஆண்டு சுற்றுலா. +2 வில் மற்ற பள்ளியில் சுற்றுலா செல்வார்களா என்றே தெரியவில்லை. ஆனால் இவர்கள் பள்ளியில் கட்டாயம் உண்டு. அதுவும் 7 நாட்கள்.

அங்கு படிக்கின்ற பெண்களின் பெற்றொர் பெரும்பாலோனர் மகளுக்கு ஒரு டிகிரி மணமகன் தேட தேவை என்ற எண்ணத்தில் படிக்க வைப்பவர்கள். ஆக பாதுகாப்பு ஏற்பாடு பக்காவாக இருக்கும் பட்சத்தில் போய்ட்டுதான் வரட்டுமே…கல்யாணத்துக்கு பிறகு இதெல்லாம் கிடைக்குமோ கிடைகாதோ என்ற எண்ணத்தில் அனுப்பி வைத்திடுவார்கள். ரேயா அப்பா முன்பானால் அனுப்பி இருக்க மாட்டார்தான். ஆனால் இப்பொழுது அவர் சம்மதித்து இருந்தார்.

கொச்சி பெங்களூரு மார்க்கமாக கோவா செல்வதாக திட்டம்.

சுற்றுலா ஆரம்பித்து இரண்டாம் நாள். இவர்கள் பெங்களூரில் இருந்தனர். இரவு 10 மணிக்கு கே ஆர் புரம் ஸ்டேஷனில் இருந்து கோவாவுக்கு ட்ரெய்ன். மாலை 6 மணிக்கு கமர்ஷியல் ஃஸ்ட்ரீட்டில் இவரக்ளை இறக்கிவிட்டது இவர்களது பேருந்து. 8 மணிக்கு அனைவரும் திரும்பி பேருந்துக்கு வந்துவிட வேண்டும் என்ற நிபந்தனையுடன்.

எல்லோரும் தங்கள் நட்பு குழாமுடன் குழு குழுவாக சுற்றத் தொடங்கினர். ரேயாவும் தன் தோழிகளுடன்தான் ஷாப்பிங்க் போனாள். ஆனால் அவள் தோழிகள் யாரும் தாவணி சல்வார் தவிர வேறு உடை அணிபவர்கள் கிடையாது.

தென்கோட்டையில் இருக்கும்போது இவளது ட்ரெஸ் கோடும் அதுதான் என்றாலும் சென்னை வரும்போது அவளது தந்தையே அப்படி அணியவிடுவது இல்லை. ரோமர்களுக்கு ரோமராயும் கிரேக்கர்களுக்கு கிரேக்கராயும் இருக்க வேண்டும் உடை விஷயத்தில் என்பார் அப்பா. ஆக இப்பொழுது கூட ஒரு ப்ரவ்ன் பிண்ணனியில் பெரிய சந்தன பூக்கள் போட்ட பர்லெல்ஸும் அதற்கு ஏற்ற சந்தன நிற டாப்ஸுமாகத்தான் வந்திருந்தாள் ரேயா. ட்ரென்டி பாங்களூராயிற்றே

இங்கு பேங்களூரில் சென்னையைவிட ட்ரென்டியாக உடைகள் கிடைக்கும் என கேள்விப் பட்டிருந்ததால் அப்படிபட்ட உடைகளை வாங்க விரும்பினாள் இவள். தோழிகளோ அவர்களுக்கு தேவையானதை வாங்க விரும்பியதாலும், நேரம் குறைவாக இருந்ததினாலும் ரேயா தனியாக அப்படிபட்ட ஷோரூம்களை தேடி சென்றாள்.

குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட இடத்தில் சந்தித்துக் கொள்ளலாம் என திட்டம்.

இவள் ஷாப்பிங் முடித்துவிட்டு திரும்பும் போது மணி 7.15.

அவர்கள் குறிப்பிட்ட இடத்திற்கு வந்து சேரும் போது அங்கு அவள் தோழிகள் யாரும் இன்னும் வந்திருக்கவில்லை. அதானே வந்துட்டா மழை தரையிலிருந்து தலையப் பார்த்து மாறி பெய்துடாதா?

பொறுமையாய் காத்து நின்றாள். 7 .30. மொபைலை எடுத்து தன் தோழி அமலாவை அழைக்க வேண்டும். இவள் கையிலிருந்த அனைத்து பேக்குகளுடனும் போராடி ஒரு வழியாய் ஹாண்ட் பாக்கிலிருந்து மொபைலை எடுக்க அந்நேரம் தங்களுக்குள் மெய்மறந்திருந்த ஒரு ஜோடி இவளை கடக்க அந்த பெண் இவளை இடிக்க மொபைல் கீழே விழுந்து கன்னா பின்னாவென சிதறுகிறது.

சை….எரிச்சலுடன் இவள் விழுந்த பாகங்களை எடுத்து இணைத்து ஒட்ட வைத்தால் மொபைல் உயிர் பெறவே இல்லை.

கடும் எரிச்சலாக வருகிறது. சாரி கூட கேட்காமல் போயேவிட்டது அந்த ஜோடி. அங்கிருந்த கடைகளில் ஒன்றில் சென்று தன் தோழியை தொடர்பு கொள்ள வேண்டியதுதான்.

அதற்கு முன்பாக ஒரு முயற்சி. அவர்கள் ஷாப்பிங் செய்ய சென்ற பகுதியை ஒரு சுற்று சுற்றி வந்தாள் ரேயா. ஒருவரையும் காணவில்லை. நேரத்தைப் பர்த்தாள். 7.43.

பதறிவிட்டாள். இனி நேராக பேருந்து நிற்கும் இடத்திற்கு சென்றுவிட வேண்டியதுதான். இவள் தோழிகள் சென்றிருக்கலாம். அல்லது அங்குள்ள இவள் வகுப்பு மாணவியர் யாரின் மொபைலிலாவது இவள் அமலாவை அழைக்கலாம். இனியும் கடை தேடி அலைந்தால் ஆபத்து.

சற்று தள்ளி கூட்ட நெரிசல் இல்லாத ரெசிடண்ஷியல் பகுதியில் இவர்கள் பேருந்தை நிறுத்தி இருப்பதாக சொல்லி இருந்தார்கள். அவர்கள் சொன்ன இடத்திற்கு சென்று சேர்ந்தாள். அங்கு பேருந்தும் இல்லை. மாணவியரும் இல்லை. பக்கென்றது. நேரம் ஏற்கனவே 7.50

இனி எங்கு தேட வேண்டும்? மீண்டுமாய் அவசரமாக கடை தெரு பகுதிக்கு ஓடினாள். அங்கு எதாவது கடையிலிருந்து போன் செய்யலாம்.

சற்று நேரம் கழித்துதான் புரிந்தது. இவள் பாதை தெரியாமல் அந்த ரெசிடெண்ஷியல் பகுதிக்குள் சுற்றிக் கொண்டு இருக்கிறாள் என.

மிரண்டு போனாள் ரேயா. அன்னிய இடத்தில், கடும் இருட்டில் இவள் தனியாய். ஆம் பவர் கட் வேறு அப்பகுதியில். ஒன்றிரெண்டு வீடுகள் பவர் பேக்கப் உதவியுடன் அளவாய் ஒளிர தெருவிளக்குகள் இல்லாமல் இருளின் பிடியில் இவள் இருந்த இடம்.

நெஞ்சை அழுத்திக் கொண்டு எழுந்த பயத்தை, அதட்டி அடக்கினாள். விசுவாசிக்கிறவன் பதறான். “காட் ஹெல்ப் மீ” ஃப்ரெண்ட்ஃஸை பிடிக்க முடியலைனாலும் பிரவாயில்லை. கையில் டெபிட் கார்ட் தேவையான பணம் எல்லாம் இருக்குது.

எப்டியாவது சென்னைக்கு பஸ் பிடிச்சுட்டா இன்னும் 4 டூ 5 அவர்ஸ்ல சென்னை. சித்தப்பாட்ட கிளம்புறப்ப போன் செய்து சொல்லிட்டா அவங்க வந்து பிக் அப் செய்துகிடுவாங்க…தென் நோ ப்ராப்ளம்.

திட்டமிட்டவுடன் மனம் ஆசுவாசப் பட்டது. தன்னை மேலிருந்து கீழாக பார்த்துக் கொண்டாள். பெங்களூரியன் மாதிரிதான் இருக்கேன்….டென்ஷனா முழிக்கலைனா உள்ளூர் பொண்னுனு நினைச்சுபாங்க….ஈசியா யாரும் டிஃஸ்டர்ப் செய்ய மாட்டாங்க… நினைத்துக் கொண்டே தோரயமாக ஒரு கணிப்புடன் நடக்க ஆரம்பித்தாள் கடைகள் இருந்த பகுதியை தேடி.

இப்பொழுது இவளுக்குப் பின்னாக ஒரு வாகன விளக்கு வெளிச்சம் பீச்சியது. தெருவின் இட ஓரமாக ஒதுங்கி நடந்தாள்.

ஹேய்…….

எதோ பலவித பேச்சு குரல்கள். கூச்சல் இரைச்சல். உள்ளுணர்வில் தோன்ற திரும்பிப் பார்த்தாள். பின்னால் வந்து கொண்டிருந்தது அந்த ஆம்னி. குறைந்த வேகம். அதன் கதவு திறந்திருந்தது. அதிலிருந்து நீட்டிக் கொண்டிருந்தன சில கைகள்.

இவளைப் பிடித்து உள்ளே இழுத்தால்…? நொடியில் உறைக்க தலை தெரிக்க ஓட ஆரம்பித்தாள் ரேயா. துரத்த ஆரம்பித்தது ஆம்னி.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.