மிகவும் யோசித்து ஒரு முடிவுக்கு வந்தாள் மலர்விழி. மீண்டும் தன் படிப்பை தொடர்வதென. இப்பொழுதே இவளுக்கென தாறுமாறாக செலவு செய்து கொண்டிருக்கிறான் வசீகரன். ஆக அவனை இன்னும் அதிகமாக செலவு செய்ய விடக் கூடாது என நினைத்தவள், தன் நகைகள் சிலவற்றை விற்றுக் கொள்ளலாம் எனவும் எண்ணிக் கொண்டாள்.
அதனால் சற்று திடமாகவே அன்று இரவு உணவின் போது வசீகரனிடம் தன் கல்வி பற்றிய எண்ணத்தைச் சொன்னாள்.
“நான் படிக்கலாம்னு இருக்கேன்….எதாவது காலேஜ்ல…”
அவள் சொல்ல வந்ததை சொல்லி முடிக்கவில்லை அவள்.
“ப்ச்…” என்றபடி எழுந்து போய்விட்டான் அவன்.
இவளுக்கு ஒரு நிமிடம் ஒன்றும் புரியவில்லை. எதிலும் அவன் அவளை அலட்சிய படுத்துவதே கிடையாது. அப்படி இருக்க?
“எப்ப பாரு அல்ட்ரா மார்டன் தாட்ஸ்….ஒன்னுல கூட நம்ம ஊரு பொண்ணுங்க மாதிரி நார்மலா இருக்க மாட்டியா?”
அவள் கண்ணில் நீர் கோர்க்க ஆரம்பித்திருந்தது.
“எனக்குன்னு ஏன் தான்…”
அதற்கு மேல் அவன் சொல்லிய எதுவும் அவள் காதில் விழவில்லை. படிகட்டில் இறங்கி வீட்டை விட்டு வெளியே வந்திருந்தாள் அவள். கேட்டை திறந்து கொண்டு வெளியே கண் காணாத தூரத்திற்கு போக வேண்டும் போல் இருக்கிறது.
ஆனால் அவனது ஒரு வார்த்தை பொறுக்காமல் இவள் இப்படி போய் விட்டால் அடுத்து இவளை தேடி அலைய அவன் அனுபவிக்கும் பாடு எவ்வளவாய் இருக்கும்?
தோட்டத்திலிருந்த முல்லை கொடிக்கு கீழாக முட்டு கட்டி அமர்ந்து கொண்டாள். கண்ணில் தாரை தாரையாக நீர். தன் மடியில் தன் முகம் புதைத்து…நடந்த அனைத்தையும் நினைத்து அழுது..
அருகில் அரவம் உணர நிமிர்ந்து பார்த்தாள். அருகில் அவனும் அமர்வது புரிந்தது.
“சாரிடாமா…..எதோ ஒரு டிஃஸப்பாய்ண்ட்மென்ட்ல…..வெரி சாரிபா” இவளது தலை நோக்கி நீண்ட கையை தடை செய்து தன்னோடு வைத்துக் கொண்டான்.
“எப்பவும் உன்னை அழவைக்கிறதே என் வேலையா போச்சு”
அவன் எதை நினைத்து சொல்கிறான் என புரிந்தாலும் அவனே அறியாத வேறு ஒன்றும் கூட புரிகின்றது அவளுக்கு. தனக்கு எது வேண்டும் என்றாலும் பிடிவாதம் பிடிப்பதும் கோபத்தில் வெடிப்பதும் கூட இவள் செய்வாள். ஆனால் அழுகை??? அது இவனிடம் மட்டுமே அல்லவா முனுக்கென்னுமுன் வருகிறது.
முதல் நாளில் அழுத விஷயம் இயல்பு. ஏமாற்றம் இக்கட்டான நிலை. ஆனால் இன்று? இதே போல் பாதிப் பேச்சில் அப்பா எழுந்து சென்றிருக்க வேண்டும்.
கத்தி ஆர்பாட்டம் செய்து மூன்று நாள் மூலையில் உட்கார்ந்து மூன்றுவேளையும் உண்ணாவிரதம் இருந்து….
இவனிடம் உரிமை இல்லை என்று நினைப்பதால் இவள் இப்படி நடந்து கொள்கிறாளோ? இவள் வெளியே போனால் அவன் தேடி அலைந்து தவிப்பானே என எண்ணம் வந்தது ஞாபகம் வருகிறது.
பயம் போன்ற ஒரு உணர்வு அவளுள். அவனை திரும்பிப் பார்க்கிறாள்.
“சாரிமா…ப்ளீஸ் சாப்பிட வாயேன்… நம்ம ஃபாமிலில பொண்ணுங்க யாரும் மேரேஜான பிறகு படிக்க மாட்டாங்கல்ல…அதான்…”
“சரி உங்களுக்கு பிடிக்கலைனா வேண்டாம்…வீட்ல இருந்தா ரொம்ப…சரி விடுங்க…உள்ள
வாங்க..”
அவளோடு அவனும் வீட்டிற்குள் வருகிறான்.
“சாப்டேன்…ப்ளீஸ்”
“கோபமெல்லாம் இல்லை…பட் நிஜமாவே பசிக்கலை…தூங்குறனே…”
அவளது அறையில் போய் படுத்துக் கொண்டாள்.
மறுநாள் காலையில் அவளைப் பார்த்ததும் அவன் கேட்ட முதல் கேள்வியே….”பக்கத்து ஃஸ்கூல்ல டீச்சிங் போஸ்ட் ஓபனா இருக்குது…ஜாய்ன் பண்றியா?” என்பதுதான். “நம்ம ஃபாமிலில நிறைய டீச்சர்ஸ்…..நீயும் டீச்சரானா யாரும் ஒன்னும் சொல்ல மாட்டாங்க….”
அவன் கொள்கையில் நிச்சயமாக அவளுக்கு உடன்பாடு இல்லை….சொந்தகாரங்க செய்றத மட்டும் தான் நாமளும் செய்யலாமா? ஆனால் அவளுக்காக யோசித்திருக்கிறானே!!
மறுநாளே அந்த பள்ளியில் பணியில் சேர்ந்தாள். அதன் மூலமே அவளுக்கு காதலை அறிமுகபடுத்திய அந்த மாயகாரனையும் அவள் கண்டேவிட்டாள்.
தொடரும்
{kunena_discuss:876}