வீட்டில் அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு மணியை எழுப்பி, அஞ்சலைக்கு உடம்பு முடியாததை சொல்லி அவளை பார்த்துக் கொள்ளுமாறும், காய்ச்சல் அதிகமானால் அவளை மாலையில் பக்கத்தில் உள்ள சுகாதார மையத்திற்கு அழைத்து செல்லுமாறும் சொல்லிவிட்டு தன் பள்ளிக்கூட பையுடன் மீனாவின் வீட்டிற்கு வேலைக்கு சென்றாள் தேவி.
“என்ன தேவி நீ வந்திருக்க. அம்மா எங்க, வரலையா? இன்னைக்கு வீட்டுல பூஜை இருக்கு அதனால காலைல சீக்கிரமே வரணும்ன்னு சொல்லி இருந்தேனே”
“இல்ல மீனாக்கா. அம்மாக்கு நல்ல காய்ச்சல், எழும்பவே முடியலை. அதான் அம்மாக்கு பதிலா நான் வந்தேன். நீங்க என்னல்லாம் பண்ணணும்ன்னு சொல்லுங்க . நான் செஞ்சுடறேன். அப்பறம் அக்கா, அம்மாவால இன்னைக்கு மத்த வீடுங்களுக்கெல்லாமும் போக முடியாது. அதனால அவங்களுக்கு நான் இங்க இருந்து போன் பண்ணி வர முடியாதுன்னு சொல்லிடட்டா”
“அடப்பாவமே அஞ்சலைக்கு முடியலையா. சரி நீ உள்ள வா. என்ன பண்ணனும்ன்னு சொல்றேன், நீ முதல்ல மத்த வீடுங்களுக்கு போன் பண்ணி அஞ்சலை வர முடியாததை சொல்லிட்டு அப்பறம் வேலையை ஆரம்பி”
மீனா, தேவியை உள்ளே அழைத்து சென்று அவள் செய்ய வேண்டிய வேலைகளை சொல்லிவிட்டு பூஜைக்கு வேண்டிய பொருள்களை எடுத்து வைக்க உள்ளறைக்கு சென்றாள். நல்லதம்பி தேவி எந்த அறையில் இருந்தாலும் அவளை பார்பதற்கு எதுவாக ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்து அமர்ந்து அவளை நோட்டம் விட்டுக் கொண்டிருந்தான்.
அஞ்சலைக்கு மதியம் வரை ஜுரம் விடாமல் இருந்தது. இருந்தாலும் சத்துணவு கூடத்து வேலைக்கு அந்த காய்ச்சலுடனேயே சென்று, பறக்கும் உடம்பை சமாளித்தபடியே அடுப்பை பற்ற வைத்து, சமைக்க ஆரம்பித்தாள். பாதி சமையல் நடக்கும்போது, சுகுணாவை பார்க்க அவள் மகன் வர, அவள் ஒரு நொடியில் வந்துவிடுவதாகக் கூறி, சமைக்கும் அறையை விட்டு வெளியில் வந்தாள். அந்த நேரத்தில் விறகில் எண்ணெய் இல்லாமல், புகை அதிகமாக இருக்க, கொதிக்கும் சாம்பார் பாத்திரத்தை இறக்கி வைத்து விட்டு, மண்ணெண்னையை விறகடுப்பில் விட எடுத்த அஞ்சலை தலை சுற்றல் அதிகமாக, கை தவறிய எண்ணெய் அவள் மேல் சிதற, அந்த அடுப்பின் மேலேயே மயங்கி விழுந்தாள்.
தொடரும்
{kunena_discuss:857}