என் மகனோ அவனது வம்சமோ ஒருவேளை தன் வேரை, அவர்களது பூர்வீகத்தை, இந்த பூங்காவன கிழவனை தேடி வந்தால் அப்போ என் வீடு அதிபன்ட்ட இருந்தா….என் வீடை அவங்க பயன்படுத்திக்க அதிபன் கொடுக்கனும்னு கேட்டுகிறேன்…..வீடை மட்டும் தான்….அதுவும் பயன்படுத்திக்க மட்டும்தான்….. வித்து கிரையம் பண்ணுற உரிமை அவங்களுக்கு கிடையாது…..என் எல்லா சொத்தையும் ஆண்டு அனுபவிக்கவும்….வித்து கிரையம் பண்ணவும் எல்லா உரிமையையும் அதிபனுக்கு மட்டும்தான் கொடுக்கிறேன்.. என எல்லாத்தையும் இவனுக்கே கொடுத்துவிட்டுப் போயிருந்தார் அவர்.
முன்பு ஊரை விட்டு போன பூங்காவனத்தாரின் மகன் அல்லது அவரது மனைவி வழியாக அவர்களது பூர்வீக கதையை யாராவது கேள்விப் பட்டிருந்தால் வாரிசற்ற ஏராளமான சொத்து இங்கு சும்மா கிடக்கிறது என நினைக்க வாய்ப்பிருக்கிறது.
ஓடிப் போன நவமணி படித்தவர். அவர் அனு சொல்வது போல் யூஎஸ் சென்றிருக்கலாம். அவர் மூலமே இதை கேள்விப்பட்ட யாரேனும் அதில் ஏராளமானவை விற்கபட்டும் மீதி இருக்கும் சிறு பங்கும் இவனிடம் இருக்கிறது என தெரியாமல், அந்த சொத்துக்களை விற்று காசாக்கும் ஆசையில் இங்கு அனுவை அனுப்பி இருக்கலாம்….
பெண் என்பதால் கிராமத்தில் யாரும் மிகவும் சந்தேகப்பட்டு குடையப் போவதில்லை.ஒரு ஆணைவிட ஒரு பெண்ணுக்கு இந்த விஷயங்களில் ஊரின் ஒத்துழைப்பு அதிகமாகத்தான் இருக்கும்.
அல்லது முழு திட்டமே அனுவினுடையதாக இருக்கலாம்…. கனிமொழிக்கு இவள் உண்மையில் தெரிந்த பெண்ணாகவே இருக்கலாம்….. அவர் மூலம் விஷயம் கேள்விப்பட்டு கிடைத்தமட்டும் சுருட்டலாம் என இவள் வந்திருக்கலாம்…
எது எப்படியோ சொத்து இவன் பேரில் இருக்கிறது….உண்மையில் பூங்காவனத்தாரின் வம்சமோ வாரிசோ திரும்பி வந்தால் முழு மனதாக அவர்களிடம் அவர்களது பங்கை ஒப்படைத்து விடத்தான் இவனுக்கு ஆசை, ஆனால் அதை எந்த ஏமாற்று குள்ளநரியிடமும் தொலைக்க இவனுக்கு விருப்பமில்லை….
ஆக இந்த அனுவை இவன் கண்காணிக்க வேண்டும்…. முடிந்த வரை சீக்கிரமாய் உண்மை அறிய வேண்டும்….. அதி சீக்கிரமாய் அவளை இங்கிருந்து துரத்திவிட வேண்டும்….
அவள் இப்படி இல்லாமல் இதற்கு மேலும் விபரீதமான விஷமியாக கூட இருக்கலாம்… திருட வந்தவள் என எண்ணம் தோன்றியதும் இன்னும் என்னவெல்லாமோ தோன்றுகிறதுதானே….
ஆக இனி இவன் இவளை கண்காணிக்க போகிறான்….கைவரிசை காட்டமுடியாமல் அவளை கட்டுப்படுத்தி வைக்கப் போகிறான்…அதோடு அவள் வெறும் திருடி தான் என உறுதியானால் துரத்திவிடப் போகிறான்….அதற்கும் மேலும் அவள் ஆபத்தானவளாய் இருந்தால் அடுத்து என்ன செய்வது என அப்போது பார்த்துக் கொள்ளலாம் என இப்போது முடிவுக்கு வந்தான் அதிபன்.
இப்பொழுது இவன் என்ன செய்ய வேண்டும்? அனு இவன் வீட்டிற்கு வருவதை அனுமதிக்க இவனுக்கு சுத்தமாக விருப்பம் இல்லைதான். அனுவை இவன் வீட்டிற்குள் வரவிடாமல் செய்ய இவனுக்கு சில நொடிகளும் நாலைந்து வார்த்தைகளும் போதும்தான்.
ஆனால் அவன் அம்மா அனுவைத் தேடுவார் என்று தோன்றுகிறது இவனுக்கு. இவள் வரவில்லை எனில் ஏன் வரவில்லை என அம்மா மனம் வருந்துவாராய் இருக்கலாம். அவரை எத்தனையாய் தவிக்கவும் துடிக்கவும் வைத்துவிட்டான் இவன். இதில் இப்படி வேறு அவரைக் கஷ்ட பட விட வேண்டுமா?
அனு திருடுகிறாள் என புரியும்படியாய் சொன்னால் அம்மாவும் அனுவை விலக்கிவிடுவார்தான்….. ஆனால் அப்படி அந்த திருட்டுப் பழியை அனு போன்ற நிலையில் இருக்கும் ஒரு பெண் மீது சுமத்த இவனால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை….
ஆக அனுவின் இவன் வீட்டு விஜயத்தை இவன் அனுமதித்துதான் ஆக வேண்டும்…. அதே நேரம் அங்கு அவள் தன் வாலை சுருட்டிக் கொண்டிருக்கும்படியும் இவன்தான் செய்ய வேண்டும்.
இப்படி ஒரு முடிவுடன் இவன் தன் வீட்டிற்கே திரும்பிப் போனான். ஆனால் அத்தனையாய் காத்திருந்தும் அனு மட்டும் வரவே இல்லை.
அவன் அம்மா சில பல முறை கேட்டுவிட்டார் “அனு வந்தாச்சா?” என
அவள் வரக் கூடாது என விரும்புகிறான் தான்….அவளை சுத்தமாகப் பிடிக்கவில்லை தான்….ஆனால் அவன் அம்மாவின் மன நிலை உடல் சுகம் எல்லாம் மனதை அழுத்த இப்போது அனு வராமல் போனதும் தப்பாக தெரிகிறது……
கரண்டிலிருந்து தண்ணியிலிருந்து ஒன்றொன்றும் இவன் வீட்டிலிருந்து தான் போய்க் கொண்டு இருக்கிறது. அதெல்லாம் வேண்டும் இவன் அம்மா வேண்டாமாமா? அதோடு அந்த அனு வந்துவிட்டுப் போகும் வரையும் இவன் வீட்டிலிருக்க வேண்டும் என நினைத்து இங்கு காத்திருக்க
இவன் நேரம் தான் வீணாக போய்க் கொண்டு இருக்கிறது.
ஒரு கட்டத்தில் எரிச்சல் எக்குத்தப்பாய் எகிற, கிளம்பி அவளை திரும்பி தேடிப் போகலாம் என தோன்றிவிட்டது….அப்படி என்ன வேலை வெட்டி முறியுறாளாம்?
அவள் வீடு இவன் வீட்டிற்கு பின்னால் தானே…. சட்டென கிளம்பிப் போய் விட்டான். அவள் வீட்டு வாசல் முற்றம் வரை போய்விட்டான் தான். ஆனால் அடுத்து உள்ளே போக மனம் மக்கர் செய்கிறது.