“ச்சே, இப்படி ஒரு பெண்ணைப் பெத்ததுக்கு நான் வருத்தப்படறேண்டி. இங்க பாருங்க, நாளைக்கு காலைல நானும், ரூபாவும் கருமாரியம்மன் கோவிலுக்குப் போறோம். மதியத்துக்கு மேலதான் வருவோம்”
“இப்போ எதுக்கு கோவிலுக்கு, அதுவும் அவளை லீவ் போட்டுட்டு இழுத்துட்டு போற அளவுக்கு அப்படி என்ன அவசரம் வந்திருக்கு”
“அவசரம்தாங்க, நீங்க பண்ற வேலை எல்லாம் பாக்கும்போது, மனசு வலிக்குது. தம்பி வீட்டுக்கும் போகக்கூடாதுன்னு சொல்லிட்டீங்க. என் குறையை நான் தெய்வத்துக்கிட்டயாவது முறையிடறேன். தெய்வ சக்தியாவது உங்க ரெண்டு பேர் மனசையும் மாத்துதான்னு பார்க்கலாம். ரூபா காலேஜ்ல ஏதோ செமினார் நடக்குதாம். அதனால இன்னும் ரெண்டு நாளைக்கு காலேஜ் கிடையாது”
“காலைல எங்களுக்கு சமைச்சு வச்சுட்டு எங்க வேணா போய்த் தொலைங்க ரெண்டு பேரும்”, என்று கடைசியாக ஒரு குத்து குத்திவிட்டு அவரின் அறைக்கு சென்றார் விமலாவின் தந்தை. விமலாவும் இருவரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு தன் கைபேசியை எடுத்துக் கொண்டு வெளியில் சென்று யாருடனோ மெதுவானக் குரலில் பேச ஆரம்பித்தாள்.
“அம்மா எப்படிம்மா இப்படி அசராம இருக்கீங்க. எனக்கு நாம உள்ள நுழைஞ்ச உடன அப்பாவப் பார்த்ததும் அப்படியே தூக்கி வாரி போட்டுடுச்சு. அதுவும் அவர் மாமா வீடுன்னு ஆரம்பிச்ச உடன இன்னைக்கு செத்தோம்ன்னு நினைச்சேன். டக்குன்னு எதோ ஒரு காரணம் சொல்லி சமாளிச்சுட்டீங்க. சூப்பர்ம்மா”
“அசராமல்லாம் இல்லடி. எனக்குமே உள்ளுக்குள்ள உதறல்தான். ஆனாலும் எப்படியோ சமாளிச்சுட்டேன்”
“அம்மா நாளைக்கு நம்ம போயே ஆகணுமா. இன்னொரு வாட்டி நல்லா யோசிச்சுக்கோங்க. அப்பா மிரட்டறதைப் பார்த்தா பயமா இருக்கு”
“இவங்க மிரட்டலுக்கெல்லாம் பயப்படக்கூடாது ரூபா. உங்க அக்கா பேசினதைப் பார்த்த இல்லை. ஒரு அம்மாக்கிட்ட பேசறா மாதிரியா பேசறா. என்னவோ ரவுடி மாதிரி மிரட்டிட்டு போறா”
“ஆமாம்மா, அப்பாவே பரவா இல்லை போல. இவ அவர விட பேசறா. ஏம்மா நாம வேண்ணா அந்த எவிடென்ஸ் எல்லாம் எங்க வச்சு இருக்காங்கன்னு தேடிப் பார்க்கலாமா?”
“இல்லை ரூபா. இப்போதைக்கு வீட்டுல நாம அமைதியா இருக்கறதுதான் நல்லது. ஏதானும் கொஞ்சம் சந்தேகம் வந்தாலும், நாம ரெண்டு பேரும் தொலைஞ்சோம்”
“ஹ்ம்ம் கரெக்ட்தாம்மா நீங்க சொல்றதும். என்னை மாதிரியே அக்காவையும் கொஞ்சம் ஸ்ட்ரிக்ட்டா வளர்த்திருக்கக்கூடாதாம்மா. இந்த மாதிரி எந்தத் தொல்லையும் இல்லாம இருந்திருக்கும்”
“நான் வளர்த்தவரை நல்லாத்தாண்டி இருந்தா. என்ன கொஞ்சம் ஆசையும், பிடிவாதமும் அதிகம். கத்துவா, அவ்வளவுதான். என்னைக்கு உங்கப்பாக்கு வேலை போய் வீட்டுல உக்கார்ந்துட்டு அவளை வளர்க்கறேன் பேர் வழின்னு ஆரம்பிச்சாரோ அன்னைக்கு போச்சு எல்லாம். மொதல்லையே நான் நாலு வாட்டி சொன்னா ஒரு வாட்டிதான் கேப்பா. அப்பறம் அதுவும் போச்சு. சரி நான் போய் நைட் சமையல் பார்க்கறேன். நீயும் படிக்க உக்காரு”, மகளிடம் புலம்பிவிட்டு சமையலறையை நோக்கி சென்றார் சாவித்ரி.
தன் மனைவி தன்னை எதிர்த்து எதுவும் செய்ய மாட்டாள் என்கிற அபரிமிதமான நம்பிக்கையில் காலையில் சாவித்ரியும், ரூபாவும் கிளம்பும்போது பெரிதாக எந்தக் கேள்வியும் கேட்காமல் அனுப்பி வைத்தனர் விமலாவும், அவள் தந்தையும். தப்பித்தோம் என்று நினைத்தபடியே சாவித்ரியும், ரூபாவும் வரதன் வீட்டை வந்தடைந்தனர். அவர்களுக்கு முன்பே ஸ்ரீதரும், அவனின் தந்தையும் அங்கே வந்து காத்திருந்தார்கள்.
தொடரும்
{kunena_discuss:857}