இத்தனை மாதங்கள் பழகியதில் அவளுக்கு நட்பை தவிர வேறு எந்த உணர்வும் வரவில்லை. அவள் கண்ணுக்கு அவன் நல்ல நண்பனாகத்தான் இருந்தான். ஆனால், புகழ் அவளை எப்படி நினைக்கிறான்? அவர்களுக்குள் நல்ல ஆரோக்கியமான நட்பு இருப்பது உண்மைதான். ஆனால் நட்பு மட்டும் தானா? ஏதோ ஒன்று அவளை உறுத்தியது. காரணம் புகழின் அணுகுமுறைதான். நண்பன் என்ற முறையில் ஒருவருக்கொருவர் உதவியாய் இருப்பது,துணை நிற்பது, கலாய்ப்பது என்று எதற்கும் பஞ்சமில்லாமல் நடந்துகொண்டான் புகழ்.. ஆனால், சில நேரம் திடீரென ஒதுங்கி விடுவான். என்றெல்லாம் அவளோடு அதிகம் சிரித்து பேசுகிறானோ, அதே நாளில் சில நிமிடங்கள் கழித்து ஒதுக்கம் காட்டுவான். இதை யாழினி அவ்வப்போது அறிந்திருந்தாலும் கூட அவனிடம் இது பற்றி கேட்டதே இல்லை.. என்னவோ கேட்கும் அளவிற்கு உரிமை இல்லை என்றேதோன்றியது அவளுக்கு.
இப்போது தனது தந்தை கேட்ட கேள்வி அவள் இத்தனை நாள் பிடித்து வைத்த மௌனத்தை சோதித்தது. ஒருவேளை புகழ் தன்னை விரும்புகிறானோ? அந்த சிந்தனை எழவுமே தூக்கி வாரி போட்டது அவளுக்கு.. ம்ம்ம்ஹ்ம்ம் இதை இப்படியே வளர விடக்கூடாது.. எதுவாகினாலும், அவனிடம் நாளை பேசியே ஆகவேண்டும் என்று முடிவெடுத்தவள், அப்படியே உறங்கியும் போனாள்.
காலையில் அலாரம் எழுப்பும் முன்னே கைப்பேசியின் ஒலி யாழினியை எழுப்பி இருந்தது.. இவ்வளவு சீக்கிரம் யார் தன்னை எழுப்பியது? என்று பாதி தூக்கத்திலேயே செல்ஃபோனை துளாவி எடுத்து பார்த்தாள்.
“ ஹேப்பி ப்ரண்ட்ஷிப் டே” என்று பல நண்பர்களிடம் இருந்து மெசெஜஸ் வந்திருந்தது..அவர்களில் ஒருவனாய் புகழும்
“ இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள் டீ என் செல்லப்பிசாசு” என்று அனுப்பி இருந்தான். காலையில் அவனது மெசெஜை பார்த்ததாலோ என்னவோ மிகவும் உற்சாகமாய் இருந்தாள் யாழினி. காலேஜுக்கு கிளம்பிய மகளின் முகத்தில் சந்தோஷம் நிறைந்திருப்பதை உறுதிபடுத்திவிட்டு வேலைக்கு கிளம்பி இருந்தார் மோகன்.
காலேஜ் வாசலில் பைக்குடன் யாழினிக்காக காத்திருந்தான் புகழ். வழக்கமாய் காத்திருக்கும் இடத்தில் நிற்காமல் இவன் ஏன் வாசலில் நிற்கின்றான்? என்ற கேள்வியுடன் அவனை நெருங்கி வந்தாள் யாழினி.
“ ஹேய் என்னடா இன்னைக்கு க்லாஸுக்கு வரலயா நீ? எங்க போற?”
“ எங்க போறேன்னு கேட்காத .. எங்க போறோம்ன்னு கேளு” . அவன் சொன்னது புரிந்தாலுமே புரியாதது போலவே அவனைப் பார்த்து வைத்தாள் அவள்.
“ புரியல புகழ்”
“பைக்ல ஏறுடீ சொல்லுறேன்”
“ யூமீன், இப்போ நாம காலேஜ் கட் அடிக்கிறோம்..அப்படித்தானே?”
“ உலகமகா கண்டுபிடிப்பு.. ஆமா”
“ யாரை கேட்டு இப்படி ப்லான் போட்ட நீ?”
“ என்ன, திட்ட போறியா? சரி போகிற வழியில் திட்டிக்கோ.. இப்போ டைம் இல்ல.. முதல்ல பைக்ல ஏறு “ என்றான் புகழ்.
தன்னால் இயன்ற அளவு அவனை முறைத்தாள் யாழினி.
“ என் மேல நம்பிக்கை இருந்தா வா..இல்லன்னா” என்றவன் முடிக்கும் முன்னரே பைக்கில் ஏறி இருந்தாள் யாழினி. யாழினியும், புகழும் படிப்பில் கெட்டி என்றாலுமே “படிப்ஸ்” என்று கூறும் அளவு படிப்பாளிகள் இல்லைத்தான். பலமுறை வகுப்புக்கு செல்லாமல் கேண்டீனிலோ அல்லது மொட்டை மாடியிலோ அமர்ந்து அரட்டை அடிப்பது அவர்களின் வழக்கம் தான் . ஆனால், இப்போதுதான் முதல் தடவை அவள் காலேஜை விட்டு வெளியில் செல்கிறாள். ஏற்கனவே நேற்றிரவு தனது தந்தை சொன்ன வார்த்தைகள் நினைவில் வந்தன. அதைப்பற்றி மனம் விட்டு பேசுவதற்கு இதுவே நல்ல சந்தர்ப்பம் என்று நினைத்தவள் மறுக்காமல் பைக்கில் ஏறிக் கொண்டாள்.
“ என்னடீ ரொம்ப கோபமோ? பேசவே மாட்டுற?”
“..”
“ இப்படி மூஞ்சிய தூக்கி வெச்சுக்கிட்டு நீ ஒன்னும் என் கூட வர வேணாம்மா.. இப்போவே வண்டியை திருப்பிடவா?”
“..”
“அடிப்பாவி இதுக்கும் பதில் இல்லையா? நான் பேசுறது உன் காதில் கேட்குதா இல்லையா?” என்றவன், கண்ணாடி வழியே அவள் முகத்தை பார்க்க, யாழினி ஏதோ யோசனையில் இருப்பது புரிந்தது..
“ச்ச என்ன இவ இப்படி சொதப்புறாளே ! வேற ஏதோ பிரச்சனையில் இருக்காளோ? நாமத்தான் புரிஞ்சுக்காம கூட்டிட்டு வந்துட்டோம்.. இட்ஸ் ஓகே இன்னும் கொஞ்ச நேரத்தில் சரி ஆகிடுவா” என்று மைன்ட்வாய்சில் பேசியவன், அதன்பின் அவளை இன்னும் குழம்பவிடும்படி அமைதியாய் இருந்தான்.
“மேடம், கனவு கண்டு முடிச்சிட்டேனா, இடது காலை வெச்சு இறங்கி வாம்மா” என்றான் புகழ்.
“..”