அதில் மும்மியும் கலந்து கொண்டிருந்தாள்…. முதல் முறையாக அங்குதான் அந்த பாண்டியர்களை அவள் காணப் பெற்றதும்….
விருந்தின் மூலம் நடந்த போர் விஷயங்களை தெள்ள தெளிவாக அறிந்த அவள்….பாண்டியர்கள் விரும்பி உதவிய விதத்தில் மனம் குளிர்ந்திருந்தாள். அதே மனோபாவத்துடன் இவள் தன் தமக்கையை காண வந்திருந்தாள்…..
வந்த சமயம், விவாஹ பேச்சு துவங்கிய காலம் முதல் சற்றும் சிரத்தையின்றி எந்த வித அலங்காரத்திலும் மற்றும் எதிலும் நாட்டமின்றி இருந்த ருயம்மா இவ்வாறு கவனா கவனமாய் அலங்கரித்துக் கொண்டிருப்பதைக் காணவும்,
நேற்றைய பாண்டியர் நடவடிக்கைகளால் தன்னைப் போன்று அவர்கள் மீதிருந்த சினம் வெறுப்பெல்லாம் தமக்கைக்கும் தணிந்து விட்டது போலும் என நினைத்தாள் தங்கை….
ஆகையால் இவ் விவாஹத்தை விரும்பியே ஏற்கிறாள் ருயம்மா என்றும் நம்பிக்கை கொண்டாள் அவள். அதைத்தான் அவள் வெளியிட்டதும்……
இப்பொழுது ருயம்மா அதை மறுக்கவும்….…
“ பாண்டிய பட்டு சீலை, பாண்டிய பெண்களைப் போல கொண்டை, அதிலும் மற்றும் அணிந்திருக்கும் அனைத்து அணிகலங்களிலும் பாண்டிய முத்துக்கள்….” என்றபடி தன் தமக்கை காதில் அசைந்து கொண்டிருந்த முத்துக்கள் கோர்க்கப்பட்டிருந்த மரகத குழையை ஒற்றை விரலால் சுண்டிய மும்மி….அவளை கேள்வியாய் நோக்கினாள்…..
இதெல்லாம் உன் மன மாற்றத்தை அறிவிக்கின்றதே…… என்றன மும்மியின் செவ்வரி விழிகள்.
“வந்திருக்கும் பாண்டியர்களின் நமக்கான உதவி மிகப் பெரியது மும்மி….அவர்களை, அவர்களது செயலை, நட்பை நாம் அங்கீகரிப்பதை வெளிப்படுத்தவே இவைகளை உடுத்தினேனே தவிர வேறு ஏதும் எண்ணமில்லை…..இப்போது அவர்களை போஜன சாலையில் சந்திக்க புறப்பட்டேன்….”என தன் செயலுக்கு தனக்கு தானே சொல்லி வைத்திருந்த காரணத்தை தங்கைக்கு நிதானமாய் பகிர்ந்த ருயம்மா….
“மற்ற வகையில் பாண்டிய மன்னரை குறித்து நான் ஏன் மனதை மற்றிக் கொள்ள வேண்டும்….? நேற்றைய அவரது படைத் தலைவரின் செயலில் இதற்கு முன்னர் அம் மன்னர் செய்த எல்லாம் இல்லை என்று மாறிவிட்டதா என்ன?” என இகழ்வாய் வினவவும் செய்தனள்.
ருயம்மாவின் இக் கேள்வியில் அவளிற்கு அருகிலிருந்த சிறு மஞ்சத்தில் சென்று நிதானமாய் அமர்ந்தாள் தங்கை. அவள் ஏதோ இவளது கருத்துக்கு மறுப்பான ஒன்றை தெரிவிக்க முனைகிறாள் என ருயம்மாவுக்கும் புரிகின்றது.
“ருயம்மி…” என துவங்கினாள் தங்கை…. இது மிக அன்யோன்ய தருணங்களில் மாத்திரம் வெளிப்படும் பதம். தங்கை தன் மீதுள்ள பாச மிகுதியிலேயே இதை பகர முன் வருகிறாள் என உணர்ந்த ருயம்மா சற்று கனிந்த பாவத்தை முகத்திலிட்டு செவிகளை தங்கைக்கு திறந்தாள்..
“உனக்கு பசிக்கிறது தானே…?” வினவினாள் மும்மி
தங்கையின் கேள்வியின் நோக்கம் புரியவில்லை எனினும்
“ஆம்” என ஒத்துக் கொண்டாள் மூத்தவள்.
“அங்கு நம் தந்தையும் தாயும் உணவருந்தி முடித்துவிட்டார்கள் தெரியுமா?”
“ஓஹோ…”
“அவர்கள் அருந்திய உணவு அவர்கள் உதிரத்திலும் சதையிலும் உதித்த உன் வயிற்றை ஏன் நிரப்பவில்லை??”
இதற்கு ருயம்மா என்னவென்று விடை சொல்வாள்?
“பெற்றோரின் செயல் பெற்றோருக்கு…..உன்னுடையதுதானே ருயம்மி உனக்கு…. அப்படித்தானே அந்த பாண்டிய அரசர் பராக்கிரமரையும் நீ பார்க்க வேண்டும்… பராக்கிரம மன்னர் இப்பொழுதுதான் நாட்டின் நிர்வாக பொறுப்பை ஏற்றிருக்கிறாராம்…. .நமது பாட்டியார் ருத்ரமாதேவியுடன் யுத்தம் புரிந்தவர் இவரது முன்னோர்…. அதற்கு இவர் என்ன செய்வார்….? இவரோ சமாதானத்தை தானே நாடுகிறார்….?” மும்மி வினவ
மௌனமாகிப் போனாள் ருயம்மா….
“கடந்த கால வரலாற்றின் நிமித்தம், இந் நாட்களில் விரோதம் பாராட்டுவது எந்தவகை ஞானம் ருயம்மி…?...”
நிச்சயமாய் இதற்கு எதிராய் பதிலில்லை ருயம்மாவிடம்…..
நமது நாட்டு பத்மநாயக்கர்களின் ஒருவது குடும்பத்தில் நீ மணமுடித்துப் போனாலும் அங்கு என்ன காத்திருக்கிறது என யாரால் சொல்ல இயலும் ருயம்மி? எப்படியும் இருக்கும் மனைவிகளில் ஒருத்தி என்பதுதானே நிலை….. மன்னரின் மகள் என மற்ற மனைவியரை விட உனக்கு தனி அதிகாரம் அங்கு கிடைக்கும் என்றாலும்…..தந்தையிடமிருந்து வரப் போகும் ஆதயம் தானே அதன் நோக்கமாயிருக்கும்…. மற்றபடி மணக்கப் போகிறவனின் மனம் கவர்ந்தவள் நீயாய்தான் இருப்பாய் என என்ன உத்திரவாதம்…? என்றைக்குப் பெண்ணாக பிறந்துவிட்டோமோ அப்பொழுதே இதுதானே நமது நிலை….? எதை ஏந்தி வருகிறது எதிர்காலம் என தெரியாத போதும் அதை எதிர் கொள்ள துணிவதுதானே வீரம்…? வரும் வாள்வீச்சை வரும்பொழுது எதிர்கொள்ளலாம் என்ற மனோநிலை போர்களம் செல்ல மட்டுமில்லை புகுந்தகம் செல்லும் போதும் தேவை அக்கை….