“பாண்டிய மகாராணியாய் வர இருப்பவர் பாண்டிய சேனைகளுக்கு நன்றி கூற மற்றும் கௌரவிக்க தவிர்க்கிறார் எனில் அதற்கு நான் என்ன பொருள் கொள்ள வேண்டும்?” என வினவ, வடிந்து அடங்குகிறது இவளது குதுகல வெள்ளம்.
ஆனாலும் “அதில்லை பிரபு தாங்கள் தவறாக கொள்ளக் கூடாது முழு இரவும் விழித்திருந்து முன் அனுபவம் இல்லை என்ற காரணத்தினால் போஜன வேளை தாண்டியும் தூங்கிவிட்டாள் ருயம்மா….” என வேகமாக விளக்கம் சொல்ல முற்பட்ட ருயம்மா இப்போது தயங்கி நிறுத்தினாள்….
இதுவரை நேருக்கு நேராக நான் ருயம்மா இல்லை….அவளது சகோதரன் என இவள் மானகவசனிடம் கூறியது இல்லையே….உண்மையை மறைத்திருப்பாளேயன்றி பொய் கூறியது இல்லையே…..இப்பொழுது என்னதாய் பேச என்ற நிலை….. அவனிடம் எல்லாவற்றையும் சொல்லிவிடுவது என நினைத்த நினைவில் எழுந்த நிம்மதி இந்நாடகத்தில் நிச்சயமாய் இல்லை…..
ஆனால் பாண்டிய நாடு செல்ல வேண்டும் என்ற அவள் திட்டத்திற்கு அவள் ஆணாய் நடிப்பது எவ்வளவு அவசியம்? அத்தனை தூரப் பயணம்….காட்டு வழியோ கடல் வழியோ பெண்ணுக்கு என்னவெல்லாம் ஆபத்திருக்க முடியும்….?அஃதோடு இப் பாண்டிய படைத்தலைவர் வருங்கால மகராணி என வார்த்தைக்கு வார்த்தை பிரஸ்தாபிப்பவர் இவள்தான் அது என தெரிந்தால் அழைத்துச் செல்வாராமா என்ன?
திடுமென ஒரு பெரும் கிலேசம் பீடிக்கிறது இவளை….இவர் அழைத்து செல்ல மறுத்துவிட்டால்…? இவளது அனைத்து திட்டமும் தோல்வி அடைந்துவிட்டால்….?
அதுவரையும் இவளது வதனத்தில் கண் கண்டார் கண்ணே கண்டார் என்ற ரீதியில் பார்வையை பதியவிட்டிருந்த சேனாதிபதியோ இவளது முகத்தில் மழை மேகமாய் திரண்டு எழும் துக்க சாயலைப் பார்த்தான் போலும்…
“அதினாலென்ன…? போர்காலத்தில் இதெல்லாம் இயல்பு….மகராணியார் வராததற்கு இப்படியாய் காரணம் இருக்கும் என நிதானிக்காதது என் தவறுதான்….” என ஒருவிதமாய் ஆறுதல் சொன்னான்.
அதிலும் அவள் முகம் தெளியாததைக் கண்டவன்….”ருயமரே எதுவாயிருப்பினும் என்னிடம் தயங்காமல் சொல்லும்……நான் பாண்டிய மகராணிக்காய் எச் சேவையை செய்யவும் ஆயத்தமாயிருக்கிறேன்….மகராணிக்கு எதுவும் துன்பமா?” என நேரடியாய் விஷயத்திற்கு வந்தான்.
எப்பொழுது நெருங்கி வந்தான் என தெரியவில்லை…ருயம்மா விழி நிமிர்த்திப் பார்க்கும் பொழுது வெகு அருகில் நின்றிருந்தான் அவன்….. அவள் கண்களில் பட்ட அவனது விழிகளில் காருண்யம், கரிசனை மற்றும் இவளைப் போன்றே தவிப்பும்….
“அது நான்…” அவன் கண்களில் அடி முடியற்று விழுந்து கொண்டிருந்தவள் அதற்கு மேல் தாமதிக்காமல் சொல்ல துவங்கிவிட்டாள்…
“”நீர்….?”
“நான் உம்மோடு பாண்டிய தேசம் பயணப்பட விரும்புகிறேன்….. ” இவள் சொல்ல அருகிலிருந்த அவன் கண்களில் கேள்விபாவம் விரவுகிறது.
“நீங்கள் பாண்டிய தேசம் அழைத்துப் போவதாக சொன்னீரல்லவா….?” அவன் கண்களின் வசியத்திற்கு கட்டுப் பட்டிருந்தவள் எப்படியோ முயன்று விளக்கம் சொல்ல முற்பட்டாள்.
“இது வரும்கால பாண்டிய மகராணியின் விருப்பமா?” அவன் முகத்தில் சற்றாய் தீவீரபாவம்…
“இதற்கும் உம் தற்கொலை முடிவிற்கும் ஏதும் தொடர்பிருப்பதாய் எனக்கு ஏன் தோன்றுகிறது?” என்று இவள் சற்றும் விரும்பாத கேள்வியை கேட்டிருந்தான் அடுத்ததாய்.
அடுத்து மறைக்கத் தோன்றவில்லை இவளுக்கு… ஆனாலும் இவள் ருயமருத்ரனாய் ஆண் குரலில்தான் விவரித்தாள்.
“இவ்விவாஹம் எனக்கு சற்றும் பிரியமில்லாத முடிவு…..ஆனால் மன்னரின் கட்டளை இது…..இதை தடுக்க ஏதும் வழியில்லாத சூழலில் என் இயலாமைக் காரணமாய் அப்படி ஒரு முடிவுக்கு வந்துவிட்டேன்….அது என் மதியீனம் என்பது தற்போது புரிகிறது….. இந்த துருக்கிய படையெடுப்பில் தாங்கள் நடந்து கொண்ட முறையில் எனக்கு ஒரு நம்பிக்கை கீற்று…. தாங்கள் தானே சொன்னீர்கள் நேரில் கண்டு வந்தால் நிம்மதி பிறக்கும் என….” விழி எப்பொழுது தாழ்ந்தது? குரல் எப்போது இறங்கியது என இவளுக்கே தெரியவில்லை…..சொல்லி முடிக்கவும் மீண்டுமாய் அவன் கண்களை நிமிர்ந்து பார்த்தாள்.
கேட்டிருந்த அவன் கண்களில் என்ன பாவம் தோன்றுகிறது என இவளுக்கு ஒன்றும் புரியவில்லை… அத்தனை படபடப்பு மற்றும் கிலேசம்….
என்ன சொல்வார் இவர்? சம்மதிப்பாரா? தவிதவிப்போடு பார்த்திருந்தாள் அவன் கண்களையே….
அத்தனை அத்தனை கனிவும் காருண்யமும் அக்கறையும் அரவணைப்பும் ஆறுதலும் அன்பும் ஒன்று சேர உதித்து ஊற்றெடுக்கிறது அவனது அக்கண்களில்…
“ரியாம்மா….ரியு…” யாரோ இவளை அழைப்பதை உணர்ந்து மெல்ல கண் திறந்தாள்….. கடற்கரையில் தன் மடியில் முகம் புதைத்து இவள்….தூங்கி இருந்தாளா? இல்லை விழித்தே கண்டாளா கண்ட அனைத்தையும் அவளுக்கே புரியாத நிலை…
இவளை அழைத்துக் கொண்டிருந்த விவனை நிமிர்ந்து பார்த்தாள்…. உட்கார்ந்திருந்த இவளை நோக்கி குனிந்திருந்து இவளை எழுப்பியவன் கண்கள் இவளுக்கு மிக அருகில் தெரிய அதில் சற்று முன் பாண்டிய சேனாதிபதியின் கண்ணில் கண்ட அதே கனிவும் காருண்யமும் அக்கறையும் அரவணைப்பும் ஆறுதலும் அன்பும்….
கனவின் தாக்கம் போலும்…இன்னும் அதிலிருந்து வெளி வந்திராத நிலையில் ஏன் சொன்னாள் என தெரியவில்லை….
“ எனக்கு உங்களை ரொம்பவும் பிடிச்சிறுக்குது விவன்……” வாய்விட்டு சொல்லி இருந்தாள்….…
தொடரும்
{kunena_discuss:1063}