"போடா...என்னால எல்லாம் சுட முடியாது... அப்புறம் நொள்ளை நொட்டை சொல்லிட்டே இருப்ப" அவள் சுட மறுத்து விட்ட போதும் அவன் பசிக்கிறது என்று சொல்லவே தான் ஒரு வாய் உண்டு அவனுக்கு ஒரு வாய் ஊட்டி என்று இருவரும் சாப்பிட்டு முடிக்கவும் சுசீலா கிருஷ்ணமூர்த்தி தம்பதி வரவும் சரியாக இருந்தது.
"அத்தை என் பேக் எங்க" ஓடிச் சென்று அவளது பையை பெற்றுக் கொண்டு அவளது அறை நோக்கி சென்றாள்.
தாயும் தங்கையும் பெங்களுருவில் இருந்த படியால் ஹாஸ்டலில் தங்கியிருந்தாள் அபூர்வா. ஆனால் அடிக்கடி அவள் சித்தார்த்தின் வீட்டில் தங்குவதால் அவளுக்கென்றே தனி அறை அங்கு தரைத்தளத்தில் ஒதுக்கப்பட்டிருந்தது.
"அபி நில்லு மா...சுத்தி போடணும்"
"சரி அத்தை"
"ஒரு திருஷ்டி பொம்மைக்கே திருஷ்டி சுற்றுகிறார்கள்...ஆச்சரிய குறி.. டன்டடொய்ங்க்”
“டேய் சும்மா இருடா" மகனை அதட்டியவர் அபூர்வாவிற்கு திருஷ்டி கழித்து விட்டார்.
அபூர்வா அவளது அறைக்கு சென்று விட சற்று நேரம் பெற்றோருடன் அளவலாவிக் கொண்டிருந்தவன் அங்கிருந்த பால்கோவா பாக்கெட்டை பார்த்ததும் இதை கொடுக்காமல் போய் விட்டோமே என்று நினைத்தவன்
"அம்மா அவ தூங்கிட்டாளா பாருங்க...இல்லைனா இந்த பால்கோவாவை குடுங்க... நான் மறந்தே போயிட்டேன்"
மகன் கூறவும் அவள் அறைக்கு சென்றவர் அங்கு கண்ட காட்சியை கண்டு அப்படியே கதவோரம் சாய்ந்தபடியே நின்று விட்டார்.
"அம்மா என்னாச்சு அப்படியே நின்னுட்டிங்க" சித்தார்த் அன்னையிடம் கேட்டபடியே அங்கு வந்து பார்க்க அந்த மெல்லிய இரவு விளக்கின் வெளிச்சம் காட்டிக் கொடுத்தது அவள் கண்களின் கண்ணீர் தடயம்...கரங்களோ சலங்கைகளை இறுக்க பிடித்தபடியே குழந்தையாய் அவள் உறக்கம்.
பல வருடங்கள் முன் பாலைவனமாக இருந்த தங்கள் வாழ்வில் நீரூற்றாய் வந்தவள் இன்று கண்ணீர் அருவியில் மூழ்க அவளை மீட்கும் வழியறியாது கவலை கொண்டது அந்த தாய் மனம்.
அதே நேரம் அந்த மலை கிராமத்தில்...
சமீர் அந்த மனிதரை தனது வீட்டிற்கு அழைத்து வரவும் மழை வலுக்கவும் சரியாக இருந்தது. மரத்தினால் கட்டப்பட்டிருந்த மிகவும் சிறிய அழகான அந்த வீட்டினுள் அந்த மனிதரை உள்ளே அனுமதிக்க சமீரின் தாய்க்குத் தயக்கமாக இருந்தது.
வீட்டினுள் மற்ற பெண் குழந்தைகளும் இருந்தபடியால் கணவர் வெளியில் சென்றிருக்கும் இந்நேரத்தில் அந்நியரான அகோரி போல இருக்கும் ஒருவரை வரவேற்பது யாருக்குமே சிரமம் தான்.
"சமீர் அவங்கள நம்ம ஆட்டு கொட்டகைக்கு அழைச்சிட்டு போ" வீட்டினோடு ஒட்டி இருந்த செம்மறி ஆடுகள் கட்டி வைக்கப்பட்டிருக்கும் கூரை வேய்ந்த அந்த கொட்டகையே அவருக்கு தீர்வாக தெரிந்தது.
"வாங்க மாமா" சமீர் கை பிடித்து இழுத்துச் சென்றான்.
"சமீர்... இங்கே வா. அவர் கிட்ட இத குடுத்து போட்டுக்க சொல்லு" அந்த மனிதருக்கு கணவர் உபயோகப்படுத்தாத பழைய உடை ஒன்றையும் கனத்த கம்பளியையும் கொடுத்து அனுப்பினாள்.
அந்த மலை கிராமங்களில் இரவின் துவக்கத்திலேயே உணவு உண்பது வழக்கமாக இருந்து வந்தது. ஏற்கனவே தனது பெண்கள் உணவை தயாரித்து வைத்திருக்க சுட சுட சப்பாத்தியை சுட்டு எடுத்துக் கொண்டு கொட்டகைக்குச் சென்றாள்.
அங்கு சமீர் ஏதேதோ சைகையில் அந்த மனிதனிடம் சொல்ல முயற்சி செய்து கொண்டிருக்க உலர்ந்த ஆடைகளை உடுத்தி இருந்த அந்த மனிதனோ சமீரின் முகத்தையே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.
"பாபா" சமீரின் தாய் அழைக்க சமீர் அந்த மனிதரை தட்டி அன்னையின் புறம் கை கட்டினான்.
உணவுத் தட்டினை அவள் கொடுக்க அதை அவசரமாக வாங்கி சப்பாத்திகளை பிய்த்து வாயில் திணித்துக் கொண்டார்.
அவர் உண்டு முடிக்கவும் வீட்டினுள் இருந்த ஒரு பழைய கயிற்றுக் கட்டிலை சமீரின் உதவியோடு எடுத்து வந்து அந்தக் கொட்டடியில் போட்டு அதன் மீது கனத்த போர்வைகளை விரித்தவர் அவரை அங்கே படுத்துக் கொள்ளும் படி சைகை செய்தார்.
அது கோடை காலமாகையால் கனப்பிற்கு அவசியம் ஏற்பட வில்லை.
அங்கு இருந்த செம்மறி ஆட்டுக் கூட்டமும் ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொண்டு கதகதப்பாக நித்திரையில் ஆழ்ந்திருந்தது.
சமீரை அழைத்துக் கொண்டு அங்கிருந்து அகன்றாள் அவன் தாய்.
அந்தக் கட்டிலில் சால்வையைப் போர்த்திக் கொண்டு ஒருக்களித்துப் படுத்துக் கொண்டார் அவர்... லேசாக மின்னல் வெட்டும் அதைத் தொடர்ந்து இடியும் இடிக்க அந்த செம்மறி ஆடுகள் உறக்கத்திலேயே நடுங்கின.
அதன் கழுத்தில் கட்டியிருந்த மணிகள் ஜல் ஜல் என்று சப்திக்க அது வரை எந்த சப்தத்தையும் உணராத அந்த செவிகள் இந்தச் சலங்கை ஒலியில் உயிர்பெற்றனவோ...
திடுக்கிட்டு விழித்தார் அந்த மனிதர். தொடர்ந்து அவரது செவிகளில் ஜல் ஜல் ஜல் என்ற சப்தம் ஒலித்துக் கொண்டே இருந்தது.
படுத்திருந்த நிலையிலேயே இருகைகளாலும் காதுகளை அடைத்துக் கொண்டு கண்களை இறுக்க மூடிக் கொண்டார்...அவர் இமைகளுக்குள் சலங்கை அணிந்த இரு பிஞ்சு பாதங்கள் தாளத்திற்கேற்ப ஜல் ஜல் ஜல் என நர்த்தனம் புரியும் காட்சி விரிந்தது... அப்படியே பாதங்களில் இருந்து மெல்ல மெல்ல உருவம் விரிந்து ஒரு சிறுமியின் முகம் தெரிந்தது... கூடவே முன்னர் சமீர் முகத்தில் தெரிந்த சிறுவன் முகமும்....
திடுக்கிட்டு இமைகளை திறந்தவர் விழிகளில் அவரை அறியாமலே நீர் வழிந்து கொண்டிருந்தது.
தொடரும்
{kunena_discuss:1080}