"அப்பா "
"ம் சொல்லுமா"
"நான் சொல்லுறத கொஞ்சம் கேளுங்க"
"நான் கேக்க மாட்டேன்னு சொல்லலையே"
"நான் மார்க்கெட்டுக்கு போனேன். அங்க இவ சாலையை எப்படி கடக்குறதுன்னு தெரியாம நடுவழில நின்னுட்டு இருந்தா. நான் மட்டும் போகலேன்னா நிலைமை விபரீதம் ஆகி இருக்கும்"
"சரி"
"இவளுக்கு ஒண்ணுமே தெரியலப்பா. இவளால் எதுவுமே செய்ய முடியாது. நிச்சயம் செத்து போய்டுவா"
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
பிந்து வினோத்தின் "மலர்கள் நனைந்தன பனியாலே..." - காதல் என்பது இரு மனமுடிச்சு... εїз…!
படிக்க தவறாதீர்கள்...
"அதுக்கு என்ன பண்ணனும்னு சொல்ற?" நாராயணனின் குரலில் கோபத்தின் வெளிப்பாடு.
"நீங்க தான் அப்பா ஏதாச்சும் முடிவெடுக்கணும்"
"பிரச்சனையை அழைச்சிட்டு வந்தது நீ. முடிவை என் கையில ஒப்படிச்சா எப்படி?".
நாராயணின் அருகில் வந்து தரையில் அமர்ந்தாள் மேகலா. "அப்பா, இவளை பார்க்கும் போது எனக்கு என் கணவர் ஞாபகம் வருது. இப்போ அவரு எங்கே இருக்காரு? எப்படி இருக்காரு? இன்னும் உயிரோடு தான் இருக்காரான்னு தெரியல. இவளும் கிட்டத்தட்ட அதே நிலைமை தான். இவளால நிச்சயமா தனியா பிரச்சனைகளை சமாளிக்க முடியாது"
"அதுக்காக நாமளும் பிரச்சனைல மாட்டிக்கணும்னு சொல்லுறியா?"
"சில நாள் மட்டும் நம்ம வீட்டுல இருக்கட்டும். அப்புறம் முடிவெடுத்துக்கலாம்"
"போலீஸ்க்கு தெரியவந்தா என்ன ஆகும்னு யோசிச்சி பாத்தியா? அது போல நடந்தா அந்த கடவுளால கூட நம்மள காப்பாத்த முடியாது"
"இவ வீட்டை விட்டு வெளிய போகாம பாத்துக்கலாம். ஒரு வாரம் மட்டும் இருக்கட்டும். இவளுக்கு உதவ முடியுதா பாக்கலாம். முடியலைன்னா இவளை கவர்மெண்ட் கிட்ட ஒப்படச்சிடலாம்" .
"என்னவோ பண்ணு. என்னை இதுல சம்மந்தப்படுத்தாத. அப்பாவா ஒண்ணே ஒண்ணு மட்டும் உன்கிட்ட சொல்லிடுறேன் . இவளை எவ்ளோ சீக்கிரம் வீட்டை விட்டு அனுப்புறியோ அதுதான் நமக்கு நல்லது" என்று கூறிக்கொண்டே தனது அறைக்கு சென்று கதவை படாரென சாத்தினார். அதில் அதிகப்படியான கோபம் வெளிப்பட்டது.
அமெரிக்காவின் கிழக்கு பகுதியில் உள்ள அழகான மலைப்பிரதேசம் ஒன்றில் விளம்பர பட ஷூட்டிங் நடை பெற்றுக்கொண்டிருந்தது. நண்பகல் பொழுதாயினும் அங்கு நிலவிய குளிர், இன்னும் பொழுது விடியாதது போல் காட்டிக்கொண்டிருந்தது.
வசந்த், ஸ்கிரிப்ட் பேப்பரை வைத்துக்கொண்டு அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தான். அன்று, தனக்கு மிக மோசமான நாளாகவே கருதினான். காலையில் இருந்தே அவன் எதிர்பாராத சம்பவங்களைச் சந்தித்துக் கொண்டிருக்கிறான். உண்மையில், மன உளைச்சலில் சிக்கி தன்னையே வருத்திக்கொண்டிருந்தான்.
காட்சிகள் எப்படி அமைய வேண்டும் என சினிமாட்டோகிராபரிடம் விவரித்துக்கொண்டிருந்தார் டைரக்டர். அன்றைய காட்சிகளில் நடிக்கும் நடிகை தன் சக நடிகரிடம் பேசிக்கொண்டிருந்தாள். அவளைப் பார்க்கவே வசந்திற்கு அருவருப்பாய் இருந்தது. அழகை மட்டும் வைத்துக்கொண்டு நடிப்பென்றால் என்னவென்று கூட தெரியாமல் இருக்கும் எண்ணற்ற பேர்களில் அவளும் ஒருத்தி.
சிறிதும் நடிப்பிற்கு லாயக்கில்லாத அவளை, நடிக்க வைக்க வேண்டாம் என்று டைரக்டரிடம் எவ்வளவோ வேண்டினான். ஆனால், டைரக்டர் கேட்கவில்லை. இப்பொழுது அவளுக்கு ரிகர்சல் கொடுக்கப்பட்டது. டைரக்டர் எதிர்பார்த்த முக உணர்ச்சிகள் அவளிடம் துளியும் காணப்படாததைக் கண்டு கொதிப்படைந்து, வசந்தை பிடித்து திட்டித் தீர்த்தார்.
"வசந்த், நீ என்ன சொல்லி கொடுத்திருக்க? நான் எதிர்பார்த்த உணர்ச்சிகள் துளியும் காணோமே"
"என்னால முடிஞ்ச வரை சொல்லிக் கொடுத்துட்டேன் சார். அவங்களுக்கு வரலைனா நான் என்ன செய்யுறது?"
"இதோ பாரு வசந்த். உனக்கு டைரக்டர் ஆகணும்னு ஆசை தான. ஒரு டைரக்டர்னா பாறாங்கல்லை கூட நடிக்க வைக்கணும். இப்படி பொறுப்பில்லாம பேசிட்டு இருக்ககூடாது "
வசந்த் மேற்கொண்டு அவரிடம் வாக்குவாதம் செய்ய பிடிக்காமல் நடிகைக்கு காட்சிகளை விவரிக்க சென்றான்.
பத்து ஆண்டுகளுக்கு முன் குடும்பத்தோடு அமெரிக்கா வந்து சேர்ந்தான் வசந்த். அவன் அக்காவிற்கு அமெரிக்காவின் பெரிய சாப்ட்வேர் கம்பெனியில் வேலை கிடைத்ததால் அவனும் அமெரிக்காவில் படிக்க ஆசைப்பட்டு அங்கு வந்து சேர்ந்தான். இரண்டு வருடங்களுக்கு முன், அவன் தாய் இந்தியாவில் இறந்துவிட்டதால் அவனது தந்தையும் அமெரிக்காவில் இவர்களோடு வசிக்கும் சூழல் ஏற்பட்டது.
கல்லூரிப் படிப்பை உயர் தேர்ச்சியில் முடித்த வசந்திற்கு அவன் அக்காவின் கம்பெனியிலேயே நல்ல சம்பளத்தோடு வேலையும் கிடைத்தது. ஆனால், வசந்திற்கு ஏனோ அதில் விருப்பமில்லை. நாள் முழுதும் இருக்கையில் அமர்ந்தபடி கணினி திரையை முறைத்துக்கொண்டே வாழ அவன் விரும்பவில்லை.