"எதுக்கு?" மிரட்சியோடு கேட்டாள் மேகலா.
"தெரியல, ஒரு வேளை உங்க அப்பாவை பிடிக்காம போட்டு தள்ள கூட வந்திருக்கலாம்"
"டேய்! நீ அதிகமா பேசிட்டு இருக்க, பாத்துக்க" என்றார் நாராயணன் கோபமாக.
அமேலியா மாடிப்படியில் இருந்து வேகமாய் இறங்கி வந்தாள்.
'வெடிகுண்டு எடுத்துட்டு வராளா' என்று பயந்தான் ஜான்.
எல்லோரும் அமேலியாவை பயத்தோடு பார்த்தது அவளுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.
நாராயணன், மேகலா, வசந்த் மூவரும் கூடிப் பேசிக் கொண்டிருந்தார்கள்.
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
சுபஸ்ரீயின் "கிருமி" – காதல் கலந்த விறு விறு தொடர்...
படிக்க தவறாதீர்கள்...
"ஜான் சொல்லுறது போல அவ தீவிரவாதியாவும் இருக்கலாம்" என்றார் நாராயணன்.
"அவ முகத்தை பார்த்தா அப்படி தெரியலப்பா" என்றாள் மேகலா.
"அவளை வீட்டை விட்டு அனுப்பிடலாம். எனக்கு பயமா இருக்கு" என்றான் வசந்த்.
அவர்கள் கூடிப் பேசியதைப் பார்த்துக்கொண்டே ஜானை நெருங்கினாள் அமேலியா. ஜான் பயந்தான்.
"என்னை ஒண்ணும் செஞ்சிடாத"
அமேலியா புன்னகைத்துக்கொண்டே, அவன் தொலைத்த பர்ஸை அவன் முன் நீட்டினாள்.
'இவகிட்ட எப்படி என் பர்ஸ் கிடைச்சது?' என்று குழம்பினான் ஜான்.
ஜான் பர்ஸை தொலைச்சதையும் அந்த பர்சில் இருந்த விலாசத்தை கொண்டு இங்கு வந்ததையும் தன்னால் முடிந்த சைகையில் கூறி முடித்தாள் அமேலியா.
ஜானிற்கு அவள் எப்படி அங்கு வந்தாள் என்பது புரிந்து போயிற்று. பர்ஸை வாங்கி பாக்கெட்டினுள் போட்டுக்கொண்டான்.
அந்த நிகழ்வை நிலா பார்த்து விட்டாள். அவளை அமைதியாக இருக்குமாறு ஜான் சைகை காட்டினான்.
கூடிப் பேசியவர்கள் ஜானை நோக்கினார்கள். "ஜான், நீ சொல்லுறது தான் சரி. யாரோ தீவிரவாதிதான் இவளை இங்க அனுப்பிருக்கணும்" என்றான் வசந்த்.
"சே சே, இல்லடா. அந்த பச்சை பிள்ளை முகத்தை பாருடா. அப்படியா தெரியுது? ஏதோ தெரியாம இந்த பக்கம் வந்துட்டா"
"நீ ஏன் மாத்தி மாத்தி பேசுற?"
"உண்மை இப்போ தான புரியுது" என்று திருட்டு முழி முழித்தான் ஜான்.
"மாமா, அந்த அக்கா எதையோ அவர் கிட்ட கொடுத்துச்சு"
"என்ன கொடுத்தா?"
"டேய், சின்ன பொண்ணு எதோ ஒளருறா. அதை போய் நம்பிகிட்டு"
"சத்தியமா சொல்றேன் மாமா. அக்கா எதையோ கொடுத்தாங்க"
"என்னதுடா அது?"
"நிஜமா ஒண்ணும் இல்லடா" என்று வாசலை நோக்கி ஓடினான் ஜான். அவனை பிடித்து கீழே தள்ளி உருண்டான் வசந்த்.
"அவ கிட்ட, என்ன கொடுத்தான்னு கேளு அக்கா" என்று கீழே உருண்டபடி மேகலாவிடம் சொன்னான் வசந்த்,
மேகலா சைகை மொழியில் அமேலியாவிடம் விஷயத்தை கேட்டாள்.
உடனே, அமேலியா டேபிளில் இருந்த பேப்பர், பேனாவை எடுத்து ஜான் பர்ஸை தொலைத்ததையும் அந்த பர்சில் இருந்த விலாசத்திற்கு டாக்ஸி டிரைவர் கொண்டு வந்து விட்டதையும் ஓவியமாக தீட்டினாள்.
அவள் வரைந்ததைப் பார்த்த எல்லோரும் திகைத்தார்கள்.
"நீ தான் எல்லாத்துக்கும் காரணமா?" என்று வசந்த் ஜானை முறைத்தான்.
"நிச்சயமா கிடையாது. நான் ஒண்ணும் பர்ஸை எடுத்து அவ கையில கொடுக்கல. இது ஒரு விபத்து"
"விபத்தோ, சதியோ, இது உன்னால தான் நடந்துச்சு. அதனால, அவளுக்கு நீ தான் உதவணும்"
"நானா?"
"ஆமா ஈராக்கு போறேன்னு சொன்னல்ல. நீயே கூட்டிட்டு போய் விடு"
"அது என்ன டவுன் பஸ்ஸா? இந்த ஸ்டாப்பிங்க்ல இருந்து அந்த ஸ்டாப்பிங்க்கு கொண்டு போய் விட்டுடுன்னு சொல்லுற?"
"எனக்கு அதெல்லாம் தெரியாது, நீ தான் எல்லாத்துக்கும் காரணம். போலீஸ் வந்தா கூட நீ தான் மாட்டுவ"
"என்ன விளையாடுறிங்களா?" என்று கொதித்தான் ஜான்.
அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை புரிந்துகொள்ளமுடியாத அமேலியா சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டிருந்தாள். அப்போது ஜன்னலின் வழியே தோட்டத்தில் இருந்த ஊஞ்சல் அவளின் பார்வையில் பட்டது. அதைக் கண்டதும் தன்னையும் மறந்த நிலையில் அவளின் கால்கள் அவ்விடத்தை விட்டு அகன்று தோட்டத்தை நோக்கி சென்றன. அங்கே சென்று ஊஞ்சலை ஆச்சர்யத்தோடு பார்த்தாள். அந்த வீட்டையும் தோட்டத்தையும் சுற்றிப் பார்த்தாள். அவளுக்கு அவ்விடம் அதிசயமாய் தோன்றியது. இதே போன்ற வீட்டை எங்கோ கண்டிருக்கிறோமே என எண்ணினாள். ஆம்! இது போல் ஒரு வீட்டை அவள் கற்பனையில் வரைந்திருக்கிறாள். அது இப்பொழுது நிஜமாய் இருக்கிறது. என்ன அதிசயம் இது! என்று எண்ணியவள் ஊஞ்சலில் உட்கார்ந்து மெல்ல கண்களை மூடி ஆடினாள்.
அமேலியா தோட்டத்தில் ஊஞ்சல் ஆடிக்கொண்டிருக்கும் அக்காட்சியை அனைவரும் விநோதமாகப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
"இங்க எவ்ளோ பிரச்சனை ஓடிட்டு இருக்கு. அவ என்னடான்னா ஜாலியா ஊஞ்சல்ல விளையாடிட்டு இருக்கா?" என்று கொதிப்புடன் சொன்னான் ஜான்.
அப்போது, அமேலியா அணிந்திருந்த ஆடையை எடுத்துக்கொண்டு நிலா கீழே வந்தாள்.
"அம்மா, இந்த நீ துவைக்க கேட்ட அக்காவோட டிரஸ்"
"இவளை போய் தீவிரவாதின்னு சொல்லிட்டீங்களேடா?" என்று அவர்களை திட்டியபடி நிலாவிடம் இருந்து அமேலியாவின் ஆடையை வாங்கினாள் மேகலா. அதிலிருந்து ஒரு துப்பாக்கி நழுவி கீழே தரையில் விழுந்தது.
அதைக் கண்ட அனைவரும் திடுக்கிட்டனர்.
தொடரும்...
{kunena_discuss:983}